
சிலர் முகத்தில் மேடு பள்ளமாக, அசிங்கமாக இருப்பதை நினைத்து கவலைப்படுவார்கள். ஒருவரது முகத்தில் சரும துளைகள் திறந்தவாறு இருப்பதுதான் இப்படி சருமத்துளைகள் ஏற்பட காரணம். இது அழகை கெடுப்பது மட்டுமின்றி தன்னம்பிக்கையையும் பாதிக்கும்.
சருமத்துளைகளை சரிசெய்ய இயற்கை முறையில் எளிய பொருட்களைக் கொண்ட ஒரு சில ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தலாம்.
1. முல்தானி மெட்டி + ரோஸ் வாட்டர் ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் 2 டேபிள்ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து அதை முகத்தில் பத்து நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் சரும துளைகளில் உள்ள அடைப்புகள் நீங்கி சருமம் இறுக்கமடையும்.
2. முட்டை வெள்ளைக்கரு + எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் முட்டையின் வெள்ளை கருவை எடுத்துக்கொண்டு அதை நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் சரும துளைகள் சுருங்குவதோடு சருமத்தை இறுக்கமடையச் செய்யும். அதுவும் இதில் எலுமிச்சை சேர்ப்பதால் சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
3. தக்காளி ஃபேஸ் பேக்:
ஒரு கனிந்த தக்காளியை மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனை அடிக்கடி பயன்படுத்தினால் முகத்தில் உள்ள பள்ளங்கள் மறைவதோடு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதையும் குறைக்கும்.
4. தேன் + எலுமிச்சை சாறு ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் 2 ஸ்பூன் தேன் எடுத்து அத்துடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து அதை முகம், கழுத்தில் தடவி வெதுவெதுப்பான நீரால் முகத்தை கழுவலாம். தேன் சருமத்திற்கு ஈரப்பதம் ஊட்டும். எலுமிச்சை சாறு சரும துளைகளை இறுக்கமடைய செய்து சருமத்தை பிரகாசமாக வைக்கும்.
5. ஓட்ஸ் + தயிர் ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து அத்துடன் ரெண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தில் உள்ள அதிகப்படியான அழுக்கை வெளியேற்றி சரும துளைகளை இறுக்கமடைய செய்து சருமத்தை பளபளப்பாகவும், மென்மையாகவும் ஆக்கும்.
6. கற்றாழை + வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் இரண்டு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றை சேர்த்து கலக்கி அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவாகும்.
7 .பப்பாளி + தேன் ஃபேஸ் பேக்:
ஒரு பவுலில் மசித்த பப்பாளியை எடுத்து அதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் 15 நிமிடம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இந்த பேக்கால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி சருமத்தை பிரகாசமாக வைக்கும்..