நம் உடலின் முக்கிய உறுப்பு சருமம். சிலருக்கு பரம்பரையாகவே மாசு மருவற்ற பொலிவான சருமம் இருக்கும். ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே தோல் வறண்டு, சுருக்கங்கள் ஏற்பட்டுவிடும். இதற்கு சருமத்தில் ஏற்படும் வறட்சிதான் காரணம்.
சூரிய ஒளி மற்றும் செயற்கை விளக்குகளில் நீண்ட நேரம் இருப்பது, கம்ப்யூட்டர், ஐ பேட் அதிகம் பயன்படுத்துவது, டி வி யை அருகில் அமர்ந்து பார்ப்பது போன்ற காரணங்களால் சருமம் பாதிப்படையும்.
அதிக அளவில் அழகு நிலைய சிகிச்சைகள் மேற்கொள்வதும் சருமத்துக்கு ஆபத்தைத் தரும். உதாரணமாக நம் நகத்தையும், சருமத்தையும் இணைக்கும் க்யூட்டிகிள் என்ற இயற்கை பாதுகாப்பு, பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளிலிருந்து காப்பாற்றும். பெடிக்யூர், மேனிக்யூர் செய்து கொள்ளும்போது கை, கால்களில் உள்ள அழுக்குடன் சேர்த்து க்யூட்டிகிள் பகுதியையும் எடுத்து விடுவார்கள்.
இதனால் நோய்த்தொற்று நகத்துக்கும் எளிதாக புகுந்து நகச்சுற்று, நிறமாற்றம், சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. செயற்கை ரசாயனம் நிறைந்த சோப்பை உபயோகிக்கும்போது அவை வெயிலை உறிஞ்சுவதால் சருமத்தில் கரும்புள்ளிகள், மங்கு, பரு, தடிப்பு போன்றவற்றை உருவாக்கி விடும். உதடு வறண்டு வெடிப்புகள் ஏற்படும்.
கேசத்துக்கு பயன்படுத்தும் ஹேர் டையில் பாராபினலீன் டையமின் ppd என்ற ரசாயனத்தால் முகத்தில் மங்கு, சிவப்பு தடிப்புகள், வெயிலால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கெல்லாம் தீர்வாக உடைகளை பருத்தியால் ஆனதை அணியலாம். சருமத்தை மறைக்கக்கூடிய புல்நெக், முழுக்கை ஆடைகளை அணிய சரும பாதிப்பு ஏற்படாது. தினமும் மூன்று, நான்கு லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.மோர், பழச்சாறு அல்லது இளநீர் குடிக்கலாம்.
ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை நிறக் காய்களுடன், பழங்களை சாப்பிடுவதன் மூலம் இளமையை தக்க வைக்கலாம். வறண்ட சருமத்தினர் குளித்தவுடன் தரமான மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும். தூக்கம் அவசியம். சீரான கால அளவில் தூங்கும்போது உடலிலுள்ள ஹார்மோன் சுரப்பு சரியாக இருக்கும். தோல் வளமாக இருக்கத் தேவையான குரோத் ஹார்மோன், அதிலிருந்து சுரக்கும் கொலாஜன் ஹையலூரானிக் ஆசிட் போன்றவற்றின் சுரப்பு நன்றாக இருக்கும். அதனால் தோல் சுருக்கம் அடையாது.
சத்தான உணவு, நல்ல தூக்கம், உடற்பயிற்சி,யோகா போன்றவையே சுருக்கங்கள் அற்ற, இளமையான சருமத்தின் எளிய ஃபார்முலா.