சரும பராமரிப்பு என்று வரும்போது அதில் சரியானவற்றைக் கண்டறிவது மிகவும் கடினமாகும். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் சருமப் பராமரிப்புக்கு புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருப்பது கற்றாழை ஜெல் மட்டுமே. இயற்கையின் அதிசயமாகப் பார்க்கப்படும் கற்றாழையில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளதால், சருமத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. சரி வாருங்கள், இந்தப் பதிவில் இரவில் முகத்துக்கு கற்றாழை ஜெல் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
நீரேற்றம் மற்றும் ஈரப்பதம்: கற்றாழை ஜெல் அதன் நீரேற்றப் பண்புகளுக்காகப் புகழ்பெற்றது. இதை இரவில் சருமத்திற்குப் பயன்படுத்தும்போது இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரிக்கிறது. இதனால் வறண்ட அல்லது நீர் இழப்பு சருமம் உள்ளவர்களுக்கு கற்றாழை ஜெல் சிறந்த தேர்வாகும்.
மென்மையாக்கும் பண்புகள்: உங்களுக்கு சென்சிடிவ் அல்லது எரிச்சலூட்டும் சருமம் இருந்தால் கற்றாழை ஜெல் அவை அனைத்தையும் சரி செய்யும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால், எரிச்சலான சருமத்தை சரி செய்ய உதவுகிறது. வெயிலின் அதிகப்படியான தாக்கம், அதிக முகப்பரு, சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்து வருகிறீர்கள் என்றால், இரவு தூங்குவதற்கு முன்பு கற்றாழை ஜெல்லை தொடர்ச்சியாக தடவி வருவது மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
Anti-aging பண்புகள்: நமக்கு வயதாகும்போது நமது சருமம் நெகிழ்ச்சியடைந்து அதன் உறுதித் தன்மையை இழக்கிறது. கற்றாழை ஜெல்லில் இருக்கும் விட்டமின் சி மற்றும் இ உள்ளிட்ட ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுவதால், வயதான தோற்றத்தை தாமதப்படுத்த உதவுகிறது. எனவே தொடர்ச்சியாக இரவில் கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள், மெல்லிய கோடுகள் போன்றவை குறையும்.
முகப்பருவை எதிர்த்து போராடும்: முகப்பரு என்பது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான சரும பாதிப்பாகும். கற்றாழை ஜெல் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக போராடி சருமத்திற்கு பாதுகாப்பை வழங்குகிறது. மேலும் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதால், எதிர்காலத்தில் முகப்பரு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.
தழும்புகளை நீக்குதல்: முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வடுக்கள், தழும்புகள் போன்றவை நமது மனநிலையை பெரிதும் பாதிப்பவை. கற்றாழை ஜெல்லில் தழும்புகளை நீக்கும் என்சைம்கள் உள்ளன. அவை முகத்தில் வடுக்களை நீக்க உதவுகின்றன. எனவே இரவில் முகத்தில் கற்றாழை ஜெல் தடவுவதால் முகத்திற்கு இயற்கையான புத்துணர்ச்சி கிடைக்கிறது.