

பெரும்பாலான ஆண்கள் கோடைக்காலத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்கின்றனர். கோடைகாலத்தில் அடர்த்தியான தாடியைப் பராமரிப்பது சற்று சவாலான விஷயம்தான். ஏனெனில் வெயில், வியர்வை மற்றும் தூசியால் அரிப்பு மற்றும் சருமப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் கோடையில் தாடியை நல்ல முறையில் பராமரிக்க சில சிறந்த வழிமுறைகள் உள்ளன.
அடர்த்தியான தாடியை வளர்க்க புரதம், வைட்டமின்கள் B, D, E மற்றும் துத்தநாகம், செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வது தாடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். நிறைந்த சத்தான உணவு, வாரத்திற்கு இரண்டு முறையாவது தாடி வாஷ் பயன்படுத்துவது, ஆயில் மசாஜ் போன்றவை சருமத்தை சுத்தமாகவும், தாடியினுடைய வளர்ச்சியை ஊக்கப்படுத்தி அடர்த்தியான தோற்றத்தையும் தரும்.
அடிக்கிற வெயிலில் தாடியின் அடியில் உள்ள தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது அரிப்பை தடுத்து ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். தாடியை அவ்வப்போது ட்ரிம் செய்து அழகான வடிவத்தில் வைத்துக்கொள்வது அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.
கோடையில் வியர்வை மற்றும் தூசி தாடியில் அதிகம் சேரும் என்பதால், தாடிக்கென பிரத்யேகமான ஷாம்பு (Beard Wash) கொண்டு அலசுவது அவசியம். வாரத்திற்கு இரண்டு முறை பிரத்தியேகமாக தாடி ஷாம்பு அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவி வரலாம். இவை அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்க உதவும். அத்துடன் தாடி மற்றும் சருமத்தை வறட்சி அடையாமல் பாதுகாப்பதற்கு ஜோஜோபா ஆயில் போன்ற எண்ணெய் கொண்டு ஆயில் மசாஜ் செய்யலாம்.
தாடி மற்றும் அதன் அடிப்பகுதியில் உள்ள சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்கு தினமும் தாடி எண்ணெய் (Beard oil/Serum) தடவலாம் இது வறட்சியை தடுத்து அரிப்பை குறைக்கும்.
தினமும் ஷேவ் செய்தால் அதிகமாக தாடி வளரும் என்பது தவறான நம்பிக்கை. முகத்தில் உள்ள மயிர்க்கால்கள் பாதிக்காத அளவுக்கு ஷேவ் செய்யவேண்டும். இல்லையெனில் மயிர்க்கால்கள் பாதிக்கப்பட்டு தாடி வளர்வது தடைப்பட்டுவிடும். இதற்கு மேலிருந்து கீழாகத்தான் ரேசரை பயன்படுத்த வேண்டுமே தவிர கீழிருந்து மேலாக, மயிர்க்காலுக்கு எதிராக ஷேவ் செய்யக்கூடாது.
குளித்துவிட்டு வந்ததும் தலைமுடிக்கும், அடர்த்தியாக வளர்த்திருக்கும் தாடிக்கும் ஹேர் டிரையர் பயன்படுத்துவதை தவிர்த்துவிடலாம். அந்த வெப்பக் காற்றால் முடியும், சருமமும் வறண்டுபோய் முடி கொட்டிவிடும்.
தாடியை மென்மையான சீப்பு அல்லது பிரஷ் கொண்டு தினமும் சீவுவது தாடியில் படிந்துள்ள இறந்த செல்களை நீக்கி இரத்த ஓட்டத்தை சீராக்க உதவும்.
வெயிலில் இருந்து வந்ததும் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு ஒரு குளியல் போட வியர்வை நீங்கி பாக்டீரியா வளர்ச்சியைத் தடுத்துவிடும். அத்துடன் அடர்த்தியான தாடியை கோடையில் சிறிது டிரிம் செய்து, சிறியதாக வைத்துக்கொள்வது வெப்பத்தை சமாளிக்க உதவும்.
அதிக வியர்வை உள்ளவர்கள் கனமான எண்ணெய்க்கு பதிலாக லேசான தாடி எண்ணையைப் பயன்படுத்தலாம். அத்துடன் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சருமம் மற்றும் தாடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
இரவு படுக்க செல்வதற்கு முன்பு சிறிதளவு விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயைக் கலந்து மீசை மற்றும் தாடியில் பூசி 5 நிமிடங்கள் மசாஜ் கொடுத்தால் போதும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து மீசை, தாடி வளர்ச்சியைத் தூண்டுவதுடன், முடிகள் இடைவெளி இல்லாமல் அடர்ந்து வளரவும் உதவும்.
இந்த வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கோடை வெயிலிலும் தாடியை சுத்தமாகவும், பளபளப்பாகவும், ஸ்டைலாகவும் வைத்திருக்க முடியும்.