

அழகான முகத்துக்கு கன்னங்கள் வசீகரம் தரும். பரு, பங்கு, கருந்திட்டு போன்றவை கன்னங்களின் அழகை பாதிக்கும். முகத்தின் அழகை கெடுக்கும் கன்ன தசை, கன்னத்தில் தொய்வு, வரிகள், சுருக்கங்கள் இவற்றை நம் சரியான கன்னப் பராமரிப்பு மூலம் தடுக்கலாம்.
கன்னங்களில் தொய்வு இருந்தால் வயதான தோற்றத்தை கொடுத்து விடும். கன்னத்தில் பிரச்னைகள் வராமல் தடுக்க நாம் சில பயிற்சிகளை தினமும் செய்யலாம். வியர்வை வெளியேறும் அளவு உடற்பயிற்சி செய்ய எண்ணெய் சுரப்பிகளால் அடைபட்டு இருக்கும் சருமம் திறந்து பளபளப்பு கூடும்.
ஆரோக்கியமான சருமத்திற்கு, கன்னத்திற்கு உணவு பெரும் பங்கு வகிக்கிறது. சமச்சீரான ஊட்டச்சத்து உணவே சருமத்தை பொலிவாக வைத்து கொள்ளும். முகத்தில் படும் அழுக்கு சருமத்தில் உள்ள எண்ணைய் சுரப்பிகளும் சேர்ந்து சருமத்தை சோர்வாக காட்டும். என்னதான் சோப்பு போட்டு குளித்தாலும் சருமத்தின் அடியிலுள்ள அழுக்கு அப்படியேதான் இருக்கும். இதற்கான சிகிச்சையை வீட்டிலோ, பார்லரிலோ செய்துகொள்ள நல்ல பலன் கிடைக்கும்.
1. க்ளென்சர் சிகிச்சை
சருமத்தின் அழுக்குகளை நீக்கினாலே கன்னம் பளிச்சென்று ஆகிவிடும். அதற்கு பார்லரில் க்ளென்சர் சிகிச்சை செய்வது அவசியம். வறண்ட சருமம் உள்ளவர்கள் ட்ரை ஸ்கின் க்ளென்சர் பயன்படுத்த வேண்டும். நார்மல் மற்றும் எண்ணெய் பசை சருமத்துக்கு ஜெல் க்ளென்சர், பருக்கள் உள்ள சருமத்திற்கு ஃபோமிங் க்ளெனசரும், அலர்ஜி சருமத்திற்கு அலர்ஜினிக் க்ளென்சரும் போட வேண்டும்.
க்ளென்சர் சருமத்தின் டென்னிஸ் என்ற உட்பகுதிக்குள் சென்று அழுக்குகளை கரைத்து சருமத்தின் மேல் பகுதிக்கு கொண்டு வரும். அதனை துடைத்துவிடலாம். தின் லேயராக சருமத்தில் தடவி இரண்டு நிமிடம் கழித்து விரலின் நுனிப்பகுதியால் மெதுவாக மசாஜ் செய்து பஞ்சினால் துடைத்து எடுக்க அழுக்கு முழுவதும் வந்து விடும்.
கன்னத்தில் பருக்களால் உண்டான தழும்பை ப்ரஷ்ஷிங் யூனிட் மூலம் இறந்த செல்களை அகற்றிவிடலாம். இதிலுள்ள பிரஷ் கடிகாரச் சுற்று மற்றும் எதிர்திசையில் சுற்றி இறந்த செல்களை அகற்றி அழுக்குகளையும் நீக்கிவிடும். தீக்காயங்களால் ஏற்பட்ட வடுக்கையும் மெல்ல நீக்கிவிடும். இந்த சிகிச்சையை 15 நாட்களுக்கு ஒருமுறை செய்து கொள்ளலாம்.
2. ஸ்டீமிங் சிகிச்சை
கொதிக்கும் நீரில் 5 சொட்டு ரோஸ் அரோமா எண்ணெய் விட்டு முகத்தை காட்டும்போது நீராவியும், எண்ணையும் சேர்த்து துவாரங்களை திறந்து அழுக்குகளை மேலே கொண்டு வரும். சருமம் சுத்தமாகி பொலிவுடன் இருக்கும். ஆனால் அடிக்கடி ஆவி பிடிக்கக் கூடாது. இதனால் சருமத் துவாரங்கள் பெரிதாகி கன்னம் லூசாகிவிடும். எண்ணைய் பசை சருமம் உள்ளவர்கள் வாரம் ஒருமுறையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் இரண்டு வாரத்துக்கு ஒருமுறையும் ஆவிபிடிக்கலாம்.
க்ளென்சர் செய்த பின்பும் நீராவி பிடித்த பின்பும் இறந்த செல்கள் சருமத்தின் மேலே வரும். அதை ஸ்க்ரப் செய்து அகற்றலாம். பழங்கள், தோல் இவற்றால் ஆன க்ரீம் போட்டு மசாஜ் செய்து எடுக்க வேண்டும்.
வறண்ட சருமத்திற்கு இரண்டு ஸ்பூன் பாதாம் பருப்பு ஊற வைத்து அரைத்து தயிர் இரண்டு ஸ்பூன் கலந்து கன்னங்களில் போட்டு இரண்டு நிமிடம் மசாஜ் செய்து துடைத்து விடலாம்.
தயிர், சோள மாவு 2ஸ்பூன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து மசாஜ் செய்து பின் துடைக்க சருமத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
ஒரு டீஸ்பூன் முட்டை மஞ்சள் கரு, ஒரு டீஸ்பூன் வாழைப்பழம் மசித்ததை கலந்து கன்னத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து எடுக்கவும். முட்டையில் புரதம் அதிகம் உள்ளது. வாழைப்பழத்தில் பாஸ்பரஸ் இருப்பதால் சருமத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும். கன்னங்களுக்கு நல்ல பளபளப்பைத்தரும்.
அரைத்த வெள்ளரிக்காய் சாறு, 2டீஸ்பூன், தேன் 5 சொட்டு, மஞ்சள் வாழைப்பழம் மசித்தது 1 டீஸ்பூன் கலந்து தடவி பின் கழுவ கன்ன தசைகள் ரத்த ஓட்டம் சீராக பரவி ஊட்டம் பெற்று பளபளப்பைத் கொடுக்கும்.
சந்தனக் கட்டையை இழைத்து 1 டீஸ்பூன் எடுத்துக் கொண்டு அதில் 1 டீஸ்பூன் சிகப்பு சந்தன பவுடர், 1/4 டீஸ்பூன் அரைத்து ஜாதிக்காய் விழுது, பச்சைப் பால் 3 ஸ்பூன் கலந்து பருக்களின் மேல் தடவி பின் துடைத்துவிட பருக்கள் மட்டுப்படுவதோடு பருக்கள் வந்த தழும்புகள் மாறும்.
பார்லரில் கால்வானிக் சிகிச்சை மங்கு பிரச்னைகளை சரிசெய்ய உபயோகிப்பர். இதனால் மங்கு வராமல் தடுக்க முடியும்.
இளநீர் 1/4 டீஸ்பூன், பச்சைப்பயறு மாவு, பன்னீர் தலா 2 டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் ஊறிய பின் கழுவ கன்னம் பளிச்சென்று இருக்கும்.
வயதாவதால் எலாஸ்டிக் தன்மை குறைந்து தொய்வாகி விடுவதால் கன்னத்தில் ஒரு கை மாற்றி ஒரு கையால் தினமும் மசாஜ் செய்தால் கன்னம் இறுக்கமாகும்.
கன்னங்களில் முடி இருக்கிறது என வேக்ஸ் செய்யக் கூடாது. இதனால் பருக்கள் ஏற்பட்டு கன்னம் பாதிக்கப்படும். முடிகளை மறைக்க ப்ளீச் செய்யலாம். ப்ளீச் சரியாக தெரிந்து செய்ய வேண்டும். வீட்டில் செய்தால் கன்னம் கருப்பாகி அசிங்கமாகிவிடும். பார்லரில் செய்ய முறையாக செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு பல்வேறு வழிகளில் நம் கன்னங்களை பராமரிக்க இளமையாக சரும தொய்வின்றி பளிச்சென்று இருக்கும்.
பார்லருக்குச் செல்லாமல் வீட்டிலேயே கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரிப்பதன் மூலம், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் எப்போதும் புத்துணர்ச்சியுடனும் புதுப் பொலிவுடனும் திகழும்.