
பெண்கள் முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கும், தங்களை மேலும், அழகாக்கிக் கொள்ளவும் த்ரெட்டிங் செய்து கொள்வார்கள்.
சருமத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க வேக்சிங் இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் த்ரெட்டிங்கைதான் மேற்கொள்கிறார்கள். இதற்கு முதற்காரணம் வேக்சிங்கை விட த்ரெட்டிங் செய்வதால் வலி சற்று குறைவாக இருப்பதுதான்.
மேலும் த்ரெட்டிங் புருவங்களில் மட்டுமின்றி, சிலர் உதட்டிற்கு மேல் மற்றும் நெற்றியிலும் செய்வார்கள். த்ரெட்டிங் செய்த பின் சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அப்போதுதான் த்ரெட்டிங் செய்த இடத்தில் பிம்பிள், புண் வருவதை தடுக்கலாம்.
இப்போது த்ரெட்டிங் செய்த பின் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கியமான வழிமுறைகளைப் பார்க்கலாம்.
முதலில் த்ரெட்டிங் செய்வதற்கு முன்பாக, முகத்தை நீரினால் நன்கு சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும். குறிப்பாக சுடுநீரைப் பயன்படுத்துவது நல்லது. ஏனெனில் சுடுநீர் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்கிவிடுகிறது. பின்னர் முகத்தை நீரில் கழுவியப் பிறகு, சுத்தமான காட்டன் துணியால் முகத்தை துடைக்காமல், ஒற்றி எடுக்க வேண்டும். ஏனெனில் துடைத்தால், சருமம் பாதிக்கப்படக்கூடும்.
பிறகு இயற்கையான டோனரைக் கொண்டு முகத்தைத் துடைக்க வேண்டும். அதிலும் சீமை சாமந்தி டீ அல்லது கற்றாழை ஜெல் கொண்டு துடைத்து, உலரவிட வேண்டும். அதன் பிறகு அழகுக்கலை நிபுணரை த்ரெட்டிங் செய்ய அனுமதியுங்கள்.
த்ரெட்டிங் செய்து முடித்த பின், மீண்டும் டோனரை தடவி, ஒரு ஐஸ் கட்டியால் த்ரெட்டிங் செய்த இடத்தை ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனால் சருமத்துளைகள் மூடி பிம்பிள் வருவது தடுக்கப்படும். மேலும் உங்களுக்கு முகம் கழுவ வேண்டுமென்பதுபோல் தோன்றினால், ரோஸ் வாட்டரை பயன்படுத்த வேண்டும். இதனால் த்ரெட்டிங் மூலம் ஏற்பட்ட காயங்கள் மற்றும் பிம்பிள் வருவது தடுக்கப்படுகிறது.
த்ரெட்டிங் செய்து முடித்த பின் 6 மணிநேரத்திற்கு த்ரெட்டிங் செய்த இடத்தைத் தொடக்கூடாது. அதைப்போல் க்ரீம்களையும் பயன்படுத்தக்கூடாது. அதுமட்டுமின்றி, குறைந்தது 12 மணிநேரத்திற்கு ஸ்கரப் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.