

அழகு என்று வரும்போது நம்மில் பலருக்கு 'இயற்கையானது' என்றாலே அது பாதுகாப்பானது என்ற எண்ணம் உண்டு. சமையலறையில் இருப்பதை முகத்தில் பூசினால் என்ன ஆகிவிடப்போகிறது? என்று நினைக்கிறோம். ஆனால், சென்ஸிடிவ் ஸ்கின் எனப்படும் உணர்திறன் வாய்ந்த சருமம் கொண்டவர்களுக்கு சில இயற்கை பொருட்கள் முகத்தின் அழகைக் கெடுத்து விடும். சருமத்தைப் பாதுகாக்க, வீட்டில் இருக்கும் இந்த 5 பொருட்களைப் பயன்படுத்தும் முன் இருமுறை யோசியுங்கள் தோழிகளே.
எலுமிச்சை சாறு:
இயற்கையான பிளீச்சிங் ஏஜென்ட் என்று எலுமிச்சை போற்றப்படுகிறது. ஆனால், இதில் சிட்ரிக் அமிலம் மிக அதிகமாக உள்ளது. இதன் pH அளவு மிகவும் குறைவு. உணர்திறன் வாய்ந்த சருமத்தில் எலுமிச்சை சாற்றை நேரடியாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தின் இயற்கை பாதுகாப்பைச் சிதைத்து எரிச்சல், சிவப்புத் தழும்புகள் மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக எலுமிச்சை பூசிய பின் வெயிலில் சென்றால், அது கடுமையான தோல் அழற்சியை உண்டாக்கும்.
பேக்கிங் சோடா:
சருமத்தை ஆழமாகச் சுத்தப்படுத்த பலரும் பேக்கிங் சோடாவைப் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு காரத்தன்மை கொண்ட பொருள். நமது சருமம் இயற்கையிலேயே சற்று அமிலத்தன்மை கொண்டது. பேக்கிங் சோடாவைப் பயன்படுத்தும்போது சருமத்தின் இந்தச் சமநிலை குலைந்து, சருமம் வறண்டு போய்விடும். இது பாக்டீரியாக்கள் எளிதில் உள்ளே நுழைய வழிவகுத்து, முகப்பருக்களை அதிகப்படுத்தும்.
பற்பசை:
முகப்பருவை ஒரே இரவில் போக்க பற்பசையைப் தடவும் பழக்கம் பலரிடம் உண்டு. பற்பசையில் உள்ள மெந்தால், ஆல்கஹால் மற்றும் பேக்கிங் சோடா போன்றவை பருக்களைக் உலரவைக்கும் என்பது உண்மைதான். ஆனால் அவை உணர்திறன் வாய்ந்த சருமத்தைச் சுற்றியுள்ள திசுக்களைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால் அந்த இடத்தில் நிரந்தரமான கறுப்பு வடுக்களோ அல்லது தீக்காயங்களோ ஏற்பட வாய்ப்புண்டு.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை பொடியைத் தேனுடன் கலந்து முகத்தில் பூசினால் முகம் பளபளப்பாகும் என்பது நம்பிக்கை. ஆனால் இது எல்லோருக்கும் ஏற்றது அல்ல. இலவங்கப்பட்டை மிகவும் வீரியம் மிக்கது. இது பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, சருமத்தில் எரிச்சலையும் சூட்டையும் உண்டாக்கும். சிலருக்குத் தோல் உரிதல் போன்ற பிரச்னைகள் கூட ஏற்படலாம்.
சர்க்கரை/உப்புத் துகள்கள்:
சருமத்திலுள்ள இறந்த செல்களை நீக்க சர்க்கரை அல்லது உப்பைப் பயன்படுத்துவது ஒரு சிறந்த முறை என்று சொல்லப்படுகிறது. ஆனால், இவற்றின் துகள்கள் கூர்மையானவை. உணர்திறன் வாய்ந்த மென்மையான சருமத்தில் இவற்றைத் தேய்க்கும்போது, கண்ணுக்குத் தெரியாத நுண் காயங்களை ஏற்படுத்தும். இது சருமத்தை மேலும் மெலிதாக்கி, விரைவில் வயதான தோற்றத்தை உண்டாக்கும்.
பேட்ச் டெஸ்ட்: எந்தப் பொருளையும் முகத்தில் பூசும் முன், உங்கள் கை அல்லது காதுக்கு பின்னால் சிறிதளவு தடவி 24 மணிநேரம் கவனித்து, எரிச்சல் இல்லை என்றால் மட்டுமே பயன்படுத்தவும்.
நிபுணர் ஆலோசனை: உங்கள் சருமம் மிகவும் உணர்திறன் வாய்ந்தது என்றால், சுயமாக எதையும் முயற்சிப்பதைவிட ஒரு சரும மருத்துவரை அணுகுவதே சிறந்தது.
அழகு என்பது ஆரோக்கியமான சருமத்தில் இருக்கிறது. மற்றவர்களின் பார்வையில் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, உங்கள் சருமத்தின் தன்மையை அறியாமல் எதையும் அதன் மேல் பூசாதீர்கள். மேலும் அழகாகத் தெரியவேண்டும் என்பதற்காக இருக்கும் அழகைக் கெடுத்துக்கொள்ள வேண்டாமே.