நம் அனைவருக்கும் நம்முடைய உடலை அழகாக பராமரித்துக்கொள்ள பிடிக்கும். ஆனால் நம்மில் பலரும் நம்முடைய முகத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நம்முடைய பாதங்களுக்கு கொடுக்கிறோமா என்பது கேள்விக்குறிதான். சருமம் வறண்டு போகாமல் இருப்பதற்காக பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்களை வாங்கி முகத்தை பாராமரித்து கொள்கிறோம். ஆனால் நம்முடைய பாதத்திற்கு நாம் அவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
சிலருக்கு பாதம் வெடித்து நடக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் அந்த வெடிப்பு நம்முடைய பாதத்தின் அழகை கெடுத்துவிடும். இந்த பாத வெடிப்பு ஏன் வருகிறது? அதனை எவ்வாறு சரி செய்யலாம்? என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பாத வெடிப்பு ஏற்படுவதற்கான காரணம்:
நம்முடைய சருமம் வறண்டு போய் இருந்தால் இந்த பாத வெடிப்பு ஏற்படும். மேலும் உடலில் நீர்சத்து குறைப்பாட்டால் இந்த பாத வெடிப்பு ஏற்படுகிறது. நீண்ட நேரம் காலில் செருப்பு இல்லாமல் நடப்பதால், நீண்ட நேரம் நிற்பதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது. மேலும் உடலில் பித்தத்தின் அளவு அதிகமாக இருந்தாலும் பாத வெடிப்பு வரும். காலநிலை மாற்றங்கள் காரணமாக சரும வறட்சி ஏற்பட்டு, விரிசல் ஏற்படும். இதனால் பாத வெடிப்பு ஏற்படுகிறது.
இந்த பேஸ்ட் ட்ரை பண்ணுங்க:
பாத வெடிப்பிற்கு சிறந்த மருந்தாக இருப்பது கிழங்கு மஞ்சள். இந்த கிழங்கு மஞ்சளுடன் மற்ற பொருட்களை சேர்த்து எவ்வாறு பேஸ்ட் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
கிழங்கு மஞ்சள் - 2
மருதாணி இலை- ஒரு கைபிடி அளவு
தயிர்-2ஸ்பூன்
தேன் - 1ஸ்பூன்
கிழங்கு மஞ்சளுடன், மருதாணி இலைகளை சேர்த்து அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் தேவையான அளவு தயிர், தேன் சேர்த்து பாதத்தில் தடவி வந்தால் பாத வெடிப்பில் இருந்து சிறந்த தீர்வு கிடைக்கும். மேலும் வெடிப்பினால் ஏற்பட்ட வலி உடனே நின்றுவிடும்.
பாதம் வெடிப்பு வராமல் தடுக்க:
* நாள்தோறும் ஓடிக்கொண்டு இருக்கும் நம் கால்களுக்கு ஓய்வு என்பது கட்டாயம் கொடுக்க வேண்டும். ஓய்வாக இருக்கும் நேரத்தில் கைகளால் நம் கால் பாதங்களை மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு மசாஜ் செய்யும்போது நம் கால்களில் இரத்த ஓட்டம் அதிகரித்து கால்களில் வெடிப்பு ஏற்படாமல் தடுக்கலாம்.
* மேலும் இரவு உறங்க செல்லுமுன் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் தினந்தோறும் தடவி வந்தால் பாதம் வறண்டு போகாமல், ஈரப்பதத்துடன் இருக்கும். இதனால் பாத வெடிப்பு ஏற்படாது.
* மேலும் ஆலிவ் ஆயிலுடன், மசித்த வாழைப்பழத்தை தடவி வந்தால் வெடிப்பினால் ஏற்பட்ட வலி சரியாகிவிடும்.
* தினமும் ஓய்வாக இருக்கும் நேரத்தில் இளஞ்சூடான நீரில் ஒரு எலுமிச்சை பழச்சாறு, சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து அந்த நீரில் பாதத்தை வைத்து சிறிது நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும். பிறகு ஒரு ப்ரெஷ் கொண்டு பாதத்தை மெதுவாக சுத்தம் செய்ய வேண்டும். இதனால் பாத வெடிப்பின் மூலம் பாக்டீரியாக்கள் செல்வது தடுக்கப்படும்.