திருமண மலர்களை வீணாக்காமல் உடைகளில் அச்சடிக்கும் ‘ஈகோ பிரிண்ட்’ ஃபேஷன்!

குப்பைக்குச் செல்லும் மலர்களை 3D வேலைப்பாடுகள், ஹேண்ட் பிரிண்ட், ரெசின் ஆர்ட் மூலம் உடைகள், நகைகள், போட்டோ பிரேம்களாக மாற்றி இளைய தலைமுறையை கவரும் புதிய திருமண ஃபேஷன் ட்ரெண்ட்.
wedding-flowers
wedding-flowers
Updated on

திருமண மலர்களை உடைகளில் அச்சடித்துக் கொள்வது தற்போது மிகவும் பிரபலமான மற்றும் லேட்டஸ்ட் ஃபேஷன் ட்ரெண்டாக உருவெடுத்துள்ளது. ஆடைகளின் நிறத்திற்கேற்ப பூக்களைத் தேர்வு செய்து, திருமண மலர் அலங்காரத்தையே உடைகளில் பிரிண்ட் செய்யும் முறை பரவலாகி வருகிறது. வெறும் ஃபுளோரல் பிரிண்டுகள் மட்டுமல்லாது, 3D மலர் வேலைப்பாடுகள் மற்றும் கைகளால் வரையப்பட்ட டிசைன்களும் ட்ரெண்டில் உள்ளன.

திருமணத்திற்கு புடவை, நகைகளை தேர்ந்தெடுப்பது போல் உடைகளின் நிறத்திற்கேற்ப பூக்களை தேர்வு செய்வதும் ட்ரெண்டாகி வருகிறது. அத்துடன் கஸ்டமைஸ்டு மலர் அலங்காரம் செய்வதும், திருமண மலர்களை உடைகளில் அச்சடித்துக் கொள்வதும் லேட்டஸ்ட் ஃபேஷனாகி வருகிறது.

திருமண விழாக்களில் பயன்படுத்தப்பட்டு பிறகு குப்பைக்குச் செல்லும் மலர்களைக்கொண்டு டிசைனர் உடைகளை உருவாக்கும் புதிய முயற்சி தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது.

உடைகளில் இயற்கை சாயங்கள் (Eco printing) மூலம் டிசைனர் உடைகள் தயாரிக்கும் முறை தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. காய்ந்த மலர்களைப் பயன்படுத்தி ஆடைகளில் டிசைன்கள் செய்து நிறைய வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றனர்.

வீணாகும் பூக்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் இயற்கை நிறமிகளைப் பயன்படுத்தி துணிகளுக்கு சாயம் பூசப்படுகிறது. இதனால் அந்த மலரின் வடிவம் மற்றும் வண்ணம் அப்படியே உடையில் பதிந்து விடும். இந்த மலர்களின் சாயல் மற்றும் வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் ஃப்ளோரல் பிரின்ட் ஆடைகள் தற்போது இளைய தலைமுறையினர் மத்தியில் மிகவும் டிரெண்டாகி வருகின்றது.

ரசாயன சாயங்களுக்கு பதிலாக இயற்கை மலர்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான மாற்றாக கருதப்படுகிறது. மணப்பெண்ணின் விருப்பத்திற்கேற்ப, குறிப்பிட்ட மலர்களின் நிறம் மற்றும் அமைப்பைக் கொண்டு ஆடைகள் வடிவமைக்கப் படுகின்றன. ஃப்ளோரல் பிரிண்ட் ஆடைகள், திருமண நிகழ்வுகள் மற்றும் விழாக்களுக்கு புத்துணர்ச்சியூட்டும் மற்றும் ஸ்டைலான தோற்றத்தைத் தருகின்றன.

இதையும் படியுங்கள்:
சாதாரண அழகையும் பேரழகாக மாற்றும் பூச்சூடும் கலை!
wedding-flowers

பூக்களை நேரடியாகத் துணியில் வைத்து அழுத்தம் கொடுத்து(Eco printing) இயற்கை வண்ணங்களை ஆடை மீது பதிய வைக்கின்றனர். இப்படி வீணாகும் மலர்கள் மறுசுழற்சி செய்யப்படுவதால், இது ஒரு சிறந்த சூழல் நட்பு ஃபேஷன் (Eco friendly fashion) முயற்சியாகும். ஒவ்வொரு மலரின் வடிவமும் துணியில் தனித்துவமான ஃப்ளோரல் பிரிண்ட் டிசைனை உருவாக்குகிறது. சமீப காலமாக திருமணங்களில் பாரம்பரிய புடவைகளுக்குப் பதிலாக இத்தகைய கஸ்டமைஸ்டு மலர் அலங்கார ஆடைகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த புதுமையான முயற்சி சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் ஃபேஷன் துறையில் புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கித் தருகிறது.

பாரம்பரிய உடைகளான கேரளா கசவு புடவைகளில் (தங்க ஜரிகை பார்டர் கொண்ட வெள்ளை பருத்திப் புடவை) கூட இயற்கை சார்ந்த மலர் வடிவங்களை கைகளால் அச்சடித்து (hand printed) புதுமையான தோற்றத்தை வடிவமைப்பாளர்கள் வழங்குகின்றனர். இந்த ஸ்டைல் உடைகள் திருமண நிகழ்வுகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் தோட்ட விழாக்களுக்கு (Garden wedding) மிகவும் பொருத்தமாக இருக்கும்.

உடைகள் மட்டுமின்றி திருமண மலர்களைப் பாதுகாத்து (Resin Art) போட்டோ பிரேம்கள், நகைகள் மற்றும் கைகடிகாரங்களிலும் வைக்கும் முறையும் லேட்டஸ்ட் ட்ரெண்டாகி உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com