

முகத்திற்கு நீராவி குளியல் எடுப்பது என்பது சருமத்தினுடைய துளைகளை திறக்கச் செய்து அதில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி, அதிக எண்ணெய் தன்மையை அகற்றி முகத்தை புத்துணர்ச்சி அடைய செய்யும். இது ஒரு எளிய இயற்கை பராமரிப்பு முறையாகும். இதன் மூலம் முகப்பரு வருவது குறைவதுடன் சருமத்தையும் பொலிவாக்கும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். துளைகளில் உள்ள எண்ணெய் பிசுக்குகள் வெளியேறுவதால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
நீராவி பிடித்தல்:
அழகு பராமரிப்பில் செலவே இல்லாத பராமரிப்பு முறை என்று இந்த முக நீராவி முறையைக் குறிப்பிடலாம். சூடான நீரில் இருந்து வெளியாகும் நீராவி முகத்தில் படும்போது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுப்பதுடன் சருமத்தை சுத்தமும் செய்கிறது. இதனை ஸ்பாக்கள் மற்றும் பியூட்டி பார்லர்களிலும் சரும அழகை பராமரிக்க செய்து வருகிறார்கள். இதற்கு பியூட்டி பார்லருக்குத் தான் செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே செய்து கொள்ளலாம்.
நீராவி பிடிப்பதன் நன்மைகள்:
ஆவி பிடிப்பது முகத்திற்கு மட்டுமல்ல நம் உடம்பையும் ரிலாக்ஸ் ஆக்குகிறது. சருமம் ஆரோக்கியம் அடைவதால் எப்பொழுதும் புத்துணர்ச்சியுடன் பிரஷ்ஷாக இருக்கலாம். வேப்பிலை, புதினா, கிரீன் டீ, ரோஜா இதழ்கள் என பிடித்தமான மூலிகைகள் அல்லது அரோமா எண்ணகளை சேர்த்து ஆவி பிடிக்க அவை நரம்புகளை அமைதிப்படுத்துவதுடன் நம்மை மன அழுத்தம் இன்றி ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள உதவும்.
பலவகையான நீராவிப் பிடித்தல் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோமா?
வேப்பிலை நீராவி (Herbal steam):
10 வேப்பிலை ஆர்க்குகளை உருவி தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இதனை முகத்திற்கு நீராவி பிடிக்க பருக்களின் தொல்லை குறைவதுடன், கரும்புள்ளிகள் மற்றும் கருப்பு திட்டுகள் குறையும். துளசி, புதினா, ரோஜா இதழ்கள், லாவண்டர் போன்ற மூலிகைகளை சேர்த்தும் ஆவி பிடிக்கலாம்.
எலுமிச்சை தோல் நீராவி:
சூடான நீரில் எலுமிச்சை தோல் அல்லது ஆரஞ்சின் தோலை சேர்த்து நீராவி பிடிக்க முகத்தில் வழியும் எண்ணெய்த் தன்மையை நீக்கி சருமம் பளிச்சென்று இருக்கும்.
கிரீன் டீ நீராவி:
சூடான நீரில் ஒரு ஸ்பூன் கிரீன் டீ இலையைப் போட்டு ஆவி பிடிக்கலாம்.
தண்ணீர் நீராவி (Plain steam):
வெறும் தண்ணீரை கொதிக்க வைத்து முகத்திற்கு நீராவி பிடிக்க அடைப்பட்ட சரும துளைகள் திறக்கும். அழுக்கு மற்றும் தூசிகளை அகற்றி முகத்தை பளிச்சென்று இருக்க வைக்கும்.
ரோஸ் வாட்டர் நீராவி:
ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரை சூடான தண்ணீரில் சேர்த்து ஆவி பிடிக்க உடனடி புத்துணர்ச்சி தருவதுடன் முகத்திற்கு இயற்கையான அழகை கூட்டும். சருமத்தை மென்மையாக்கும்.
ஆவி பிடிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை:
அதிக நேரம் முகத்தை நீராவியில் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. 5 நிமிடங்களே போதுமானது.
வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மட்டுமே செய்வது சிறந்தது.
ஆவி பிடிக்கும்போது கண்களை மூடிக்கொள்ள வேண்டும். ஆவி பிடித்த பிறகு சருமத்துளைகள் திறந்திருக்கும் என்பதால் உடனே டோனர் அல்லது மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது அவசியம்.
முகத்தை சூடான நீருக்கு மிக அருகில் வைப்பதை தவிர்க்கவும். அதிகமான சூடு சருமத்தை பாதிக்கலாம்.
ஆவி பிடித்த பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுவது துளைகளை மூட உதவும்.