அழகு என்பது முகம் பளிச்சென்று துடைத்து வைத்த குத்து விளக்காக இருப்பது மட்டுமல்ல. ரொம்ப பிட்டாக, ஆரோக்கியமாக இருப்பதும் அழகுதான். வாழைத்தண்டு போல உடம்பு சிக்கென்று எந்தவித எக்ஸ்ட்ரா சதையும் இல்லாமல் இருப்பது முக்கியம். சிலர் பார்க்க ரொம்ப களையாக இருப்பார்கள். ஆனால் தொப்பை விழுந்து, கை கால்கள் பருத்து காணப்படுவார்கள். இது அழகு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் கேடாகும் . இல்லாத நோய்களை வரவழைத்துக் கொள்வது நல்லதல்ல அதற்கு நெல்லிக்காய் மிகவும் உதவும்.
நெல்லிக்காய்சாறு தொப்பை மற்றும் உடல் பருமனை குறைப்பதில் கில்லாடி. இரண்டு நெல்லிக்காய்களை எடுத்து அலம்பி கொட்டை நீக்கி இஞ்சி ஒரு சிறு துண்டு சேர்த்து இரண்டையும் மிக்ஸியில் அடித்து ஒரு சிமிட்டு உப்பு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க ஊளை சதை காணாமல் போய்விடும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் வயிற்றுக் கொழுப்பை கரைப்பதுடன் சிறந்த காயகல்பமாக நம்மை இளமை தோற்றத்துடன் வைத்திருக்க உதவும்.
முதுமை தோற்றத்தை தள்ளிப் போட உதவும் நெல்லிக்காயை நீர் நெல்லிக்காயாக தினம் காலையில் ஒன்று வெறும் வயிற்றில் சாப்பிட நல்லது. இதில் ஆண்டி ஆக்சிடென்ட் இருப்பது நீரிழிவு நோய்க்கும் சிறந்த மருந்தாக பயன்படும்.
சருமத்திற்கும், கண்களுக்கும் நல்லது. நெல்லிக்காய் குளிர்ச்சியானது. சிலருக்கு இதனை பச்சையாக உட்கொண்டால் தொண்டைக்கட்டு, தொண்டை கமறல், சளி பிரச்சனை ஏற்படும் .இவர்கள் 3 நெல்லிக்காயுடன் அரைக்கப் நீர் விட்டு வேக விட்டு மிக்ஸியில் ஜூசாக அடித்து காலையில் வெறும் வயிற்றில் பருக தேவையற்ற கொழுப்புகளை கரைந்து விடும்.
ரத்தத்தை சுத்தப்படுத்தும். வாயு, உடலில் ஏற்படும் வீக்கம் மற்றும் வயிற்று பிரச்சனைகளை சரி செய்யும். உடல் ஆரோக்கியமாக இருந்தாலே அழகு தானாக கூடிவிடும்.
நெல்லிக்காய்களை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. திரிபலா சூரணத்தில் நெல்லிக்காய் பயன்படுத்தப் படுகிறது.
தேன் நெல்லிக்காய் சாப்பிட மலச்சிக்கல், செரிமான பிரச்சனை வராது.
நெல்லிக்காய் ஜூஸுடன் சிறிது திப்பிலி பொடி ,சிறிது தேன் கலந்து சாப்பிட சுவாசப் பிரச்சனை தீரும். இப்படி ஆரோக்கியமாக இருந்தாலே இயற்கையாக அழகு கூடிவிடும்.
முடி கருமை நிறத்துடன் இருக்க சீயக்காய் அரைக்கும் போது நெல்லி முள்ளி (காய்ந்த நெல்லிக்காய்கள்) சேர்த்து அரைத்து குளித்து வர இளநரை வராது. முடியும் கருகருவென நீண்டு வளரும்.
நீர் நெல்லிக்காய் தயாரிக்க: ஒரு கிலோ நெல்லிக்காயுடன் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு ஆறியதும் பாட்டிலில் எடுத்து வைத்து தினம் ஒன்றாக காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.