

வீட்டிலேயே இயற்கையான முறையில் டோனர்களை (Toners) தயாரித்து சருமத்தை பராமரிப்பதன் மூலம் துளைகளை இறுக்கி (pore tightening), pH அளவை சமநிலைப்படுத்தி, சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கலாம்.
ஆப்பிள் சைடர் வினிகர் டோனர் (முகப்பரு/எண்ணெய் சருமம்):
ஆப்பிள் சைடர் வினிகர் அனைத்து வகை சருமத்திற்கும் சிறந்த இயற்கை டோனர்களில் ஒன்றாகும். சருமத்தின் pH அளவை விரைவாக சமநிலைப்படுத்துகிறது. இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஒரு பங்கு ஆப்பிள் சைடர் வினிகருடன் 3 பங்கு தண்ணீர் கலந்து பயன்படுத்தவும். இது சருமத் துளைகளில் உள்ள அடைப்புகளை நீக்கும்.
வெள்ளரிக்காய் டோனர்:
வெள்ளரிக்காய் அதன் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகளுக்காக அறியப்படுகிறது. வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் சருமத்தை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவும். வெயிலினால் ஏற்படும் சரும எரிச்சலை குணப்படுத்தும். சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து இதமளிக்கும் வெள்ளரிக்காய் டோனரை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம்.
இரண்டு துண்டு வெள்ளரிக்காய்களைத் துருவி சாறை எடுத்துக்கொண்டு, ஒரு பஞ்சு உருண்டையைக் கொண்டு இதைத் தொட்டு தடவ சிறந்த பலனைக் காணலாம். கூடுதல் பலன்களை பெறுவதற்கு சிறிது தேனையும் இதனுடன் கலந்துகொள்ளலாம்.
தேன் மற்றும் புதினா டோனர்:
தேன் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டியாகும். இது சருமத்தை முழுமையாக ஈரப்படுத்துகிறது. புதினா சருமத்தை புத்துணர்ச்சியதட்டி சரும துளைகளின் தோற்றத்தை குறைக்கும். இது பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுவதுடன் வறண்ட சருமத்திலும் சிறப்பாக செயல்படும். சரும எரிச்சலை தணித்து இதமளிக்கும் காரணியாக செயல்பட்டு சருமத்தை பாக்டீரியாவில் இருந்து பாதுகாக்கும். இதனை செய்வது எளிது. புதினா இலைகளை சிறிது தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி தேன் கலந்து தடவவும்.
கெமோமில் தேநீர்:
சாமந்தி தேநீர் அதன் ஈரப்பதமூட்டும் பண்புகளால் சிறந்து விளங்குகிறது. சரும வகை எதுவாக இருந்தாலும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த சாமந்தி தேநீர் சரும நிறத்தை சீராக்கி, முகத்தை புத்துணர்ச்சியுடனும் இளமையுடனும் வைத்திருக்க உதவும். ஒரு கப் கொதிக்கவைத்த தண்ணீரில் ஒரு கெமோமில் டீ பேக்கை சேர்த்து 5 நிமிடங்கள் ஊறவிடவும். இந்தத் தண்ணீரை கழுத்திலும் முகத்திலும் தடவி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.
ஆரஞ்சுத் தோல் டோனர்:
விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்த இது சருமத்தை பளபளப்பாக்கி, துளைகளை இறுக்கமாக்கி, முகப்பருவை குறைக்க உதவும். 1 கப் தண்ணீரை கொதிக்கவைத்து ஆரஞ்சு தோல்களை சேர்த்து மூடிவைக்கவும். ஆறியதும் வடிகட்டி அந்த நீரில் ரோஸ் வாட்டர் கலந்து ஸ்ப்ரே பாட்டிலில் விட்டு பிரிட்ஜ் சேமிக்கவும். பஞ்சு உருண்டையை இதில் தொட்டு முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
மூலிகை துளசி டோனர்:
முகப்பருவை எதிர்த்து போராடவும், துளைகளை இறுக்கவும், எண்ணெய் பசை சருமத்தை சமப்படுத்தவும் உதவும் ஒரு சிறந்த இயற்கை டோனர் இது. ஒரு கைப்பிடி அளவு துளசி இலைகளை எடுத்து ஒரு கப் நீரில் போட்டு, இலைகளின் சாறு நீரில் இறங்கும் வரை கொதிக்க விடவும்.
சிறிது ஆறியதும் வடிகட்டி ஸ்பிரே பாட்டிலில் விட்டு வைத்து தினமும் பயன்படுத்தலாம். துளசியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பருக்களுக்கு காரணமான பாக்டீரியாக்களை அழிக்கின்றன அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை குறைத்து சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது.
முக்கியமாக கவனிக்க வேண்டியது:
இந்த இயற்கை டோனர்களை 4-5 நாட்கள் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். புதிதாக தயாரித்து பயன் படுத்துவது சிறந்தது. பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு சிறிய பகுதியில் (patch test) பரிசோதித்து அலர்ஜி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.