

Kasturi manjal benefits: நமது கலாச்சாரத்தில் முகம் மற்றும் சரும பராமரிப்பு என்று வந்துவிட்டாலே பலரும் கையில் எடுப்பது மஞ்சள் தான். பழங்காலம் முதலே பெண்களின் அழகு குறிப்புகளில் மஞ்சளுக்கு ஒரு தனித்துவமான இடம் எப்போதுமே உண்டு. இதில் உள்ள குர்குமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், கிருமி நாசினி பண்புகளை கொண்டுள்ளதால் முகப்பருக்களை நீக்கி சருமத்திற்கு நல்ல பொலிவை தருகின்றன.
ஆனால் நிறைய பேர் மஞ்சளை முகத்தில் பூச தயங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. அதை முகத்தில் பூசி கழுவிய பிறகு முகம் முழுவதும் ஒரு விதமான மஞ்சள் நிறம் அப்படியே ஒட்டிக்கொள்ளும். இந்த மஞ்சள் நிற கரையை தடுத்து, மஞ்சளின் முழுமையான நன்மைகளை எப்படி பெறுவது என்பதை பற்றி பார்க்கலாம்.
சரியான மஞ்சளைத் தேர்ந்தெடுங்கள்!
சமையலுக்கு பயன்படுத்தும் சாதாரண மஞ்சளை முகத்திற்கு நேரடியாக பயன்படுத்துவது தான் பலரும் செய்யும் முதல் மிகப்பெரிய தவறு. சமையல் மஞ்சள் சருமத்தில் அதிக நிறத்தை எளிதாக ஒட்டிக்கொள்ள செய்யும். இதற்கு பதிலாக கஸ்தூரி மஞ்சள் என்று அழைக்கப்படும் பிரத்யேக மஞ்சளை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது. கஸ்தூரி மஞ்சள் முகத்தில் அந்த அளவுக்கு மஞ்சள் நிறத்தை விட்டுச் செல்லாது, அதே சமயம் சருமத்திற்கு அற்புதமான பலன்களை கொடுக்கும்.
கலக்கும் பொருட்களில் கவனம் தேவை!
மஞ்சளை வெறும் தண்ணீரில் கலந்து முகத்தில் பூசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். தண்ணீருக்கு பதிலாக குளிர்ந்த பால் அல்லது தயிர் ஆகியவற்றுடன் மஞ்சளை கலந்து பேஸ் பேக் போல பயன்படுத்தலாம். பாலில் உள்ள கொழுப்புத் தன்மை, மஞ்சள் நிறம் சருமத்தில் ஆழமாக இறங்குவதை தடுத்து ஒரு நல்ல தடுப்பு சுவராக செயல்படும். அதுமட்டுமின்றி முகத்திற்கு ஒரு இயற்கையான பளபளப்பையும் இது உடனடியாக கொடுக்கும். பால் ஒத்துக்காதவர்கள் சிறிதளவு தேன் கலந்து பயன்படுத்தலாம்.
பூசி வைக்கும் நேரம் மிக முக்கியம்!
முகத்தில் மஞ்சள் பேக் போட்ட பிறகு அது முழுமையாக காய்ந்து பாறையாக மாறும் வரை நீண்ட நேரம் காத்திருக்க கூடாது. இது முகத்தில் அதிக கரையை ஏற்படுத்துவதோடு சருமத்தின் ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும். மஞ்சள் பூசிய பத்து முதல் பதினைந்து நிமிடங்களில், அது லேசான ஈரப்பதத்துடன் இருக்கும்போதே முகத்தை கழுவி விடுவது மிகவும் பாதுகாப்பானது. இந்த குறுகிய நேரமே மஞ்சளின் நன்மைகள் சருமத்திற்குள் செல்ல போதுமானதாகும்.
எண்ணெய் கொண்டு சுத்தம் செய்யவும்!
ஒருவேளை நீங்கள் முகத்தை கழுவிய பிறகும் லேசான மஞ்சள் நிறம் ஒட்டி இருப்பதை உணர்ந்தால், சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் போட்டு முகத்தை கடுமையாக தேய்க்க வேண்டாம். அதற்கு பதிலாக சிறிதளவு தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் எடுத்து முகத்தில் மிக மென்மையாக மசாஜ் செய்யவும். அதன் பிறகு மிதமான வெதுவெதுப்பான நீரில் ஒரு காட்டன் துணியை நனைத்து முகத்தை துடைத்து எடுத்தால், அந்த பிடிவாதமான மஞ்சள் கறை மாயமாக மறைந்துவிடும்.
மஞ்சளை முகத்தில் பூசுவதால் ஏற்படும் மஞ்சள் நிறத்திற்காக அதனை முற்றிலுமாக ஒதுக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த எளிய மற்றும் ஸ்மார்ட்டான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், எந்த ஒரு கவலையும் இன்றி நீங்கள் மஞ்சளை உங்கள் தினசரி அழகு பராமரிப்பில் தொடர்ந்து பயன்படுத்தி வரலாம்.