
அனைத்து வயதினருக்கும், தான் எப்போதும் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், சிலருக்கு முகத்தில் பருக்கள் இல்லை என்றாலும், எப்போதும் அதிகப்படியான எண்ணெய் படிந்து முகத்தின் அழகை கெடுத்துவிடும்.
இதனால், தங்களின் அழகு பாதிக்கப்படுவதாக நினைப்பார்கள். எனவே முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்குவதற்கான எளிய வழிமுறையைப் பற்றி.
பப்பாளிக் கூழ், முல்தானி மட்டி, வேப்பிலைப்பொடி ஆகியவற்றை பசைபோல் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் தன்மை குறைந்து, முகம் பளபளப்பாகும்.
சோளமாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவினால், முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
எண்ணெய் பசை சருமத்தினர், வெயிலில் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், சிறிது தயிர், கடலைமாவு மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினால், அதிகப்படியாக எண்ணெய் வழிவது குறைந்து முகம் பளபளக்கும்.
முகத்தில் தக்காளிப் பழச்சாறை தடவி, காய்ந்த பின் கழுவினால் எண்ணெய் வழிவது கட்டுப்படும். மேலும் தக்காளியுடன், வெள்ளரிப்பழம் அல்லது ஓட்ஸ் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவினாலும் முகத்தில் எண்ணெய் வழியாமல், பிரகாசமாக இருக்கும்.
எலுமிச்சைச்சாறு, முட்டையின் வெள்ளைக்கரு, திராட்சைச் சாறு ஆகியவற்றை சமஅளவு எடுத்து, அதை கலக்கி முகத்தில் பூசி சிறிதுநேரம் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவினால் முகத்தின் எண்ணெய் பசை நீங்கும்.
அதிகமாக எண்ணெய் வழிவதை தடுக்க, பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவுடன், கேரட் துருவலை கலந்து முகத்தில் தடவி, காய்ந்த பின் முகத்தை கழுவவேண்டும்.
முகத்தில் மோர் தடவி சிறிதுநேரம் கழித்து கழுவினாலும், எண்ணெய் வழிவது குறையும்.
முகத்தில் அதிகமாக எண்ணெய் வழிவதைத் தவிர்க்க வெள்ளரிக்காயை, தினந்தோறும் காலையில் முகத்தில் தேய்த்து, காய்ந்த பின் கழுவலாம்.
வெள்ளரிச்சாற்றுடன், பால் பவுடர் கலந்து முகத்தில் தடவினாலும் எண்ணெய் வழியாமல் முகம் பிரகாசமாக இருக்கும்.
வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம்பழச் சாறு, சந்தன தூள், பாதாம் பவுடர், தயிர், உருளைக்கிழங்கு சாறு ஆகியவற்றை சம அளவில் எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவவேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வழிவது குறையும்.
முகத்தில் எண்ணெய் பசை அதிகமாக உள்ள சருமத்தினர், அடிக்கடி முகம் கழுவ வேண்டும். முகத்தை கழுவ சோப்புக்குப் பதிலாக கடலை மாவு பயன்படுத்தலாம். இதனால், எண்ணெய் வழிவது குறைவதோடு, முகமும் பளபளப்பாக மாறும்.