முகத்தில் எண்ணெய் வடிவது பலருக்கு பெரும் பிரச்சனையாக இருக்கும் ஒன்றுதான். குறிப்பாக அதிகப்படியான ஈரப்பதம், மாசுபாடு மற்றும் மரபணு காரணமாக முகத்தில் எண்ணெய் உற்பத்தியாகிறது. எண்ணெய் சருமத்தை பராமரிப்பது சவாலானதாக இருந்தாலும், அதன் அளவைக் குறைத்து ஆரோக்கியமான பிரகாசிக்கும் முகத்தைப் பெற பல இயற்கையான வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. முல்தானி மிட்டி ஃபேஸ் பேக்: முல்தானி மிட்டி ஒரு இயற்கையான களிமண். பல காலமாகவே சரும பாதிப்புகளுக்கு எதிராக இது பயன்படுத்தப்படுகிறது. இதில் சிறந்த எண்ணெய் உறிஞ்சும் பண்புகள் உள்ளதால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவும். முல்தானி மிட்டியை ரோஸ் வாட்டர் அல்லது வெள்ளரிக்காய் சாறுடன் கலந்து பேஸ்ட் போல உருவாக்கங்கள். அதை முகத்தில் பூசி காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இது முகத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
2. வேப்பிலை ஃபேஸ் கிளீனர்: வேப்பிலை என்பது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் புஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட ஒரு சக்தி வாய்ந்த மூலிகையாகும். எண்ணெய் சருமம் உட்பட பல்வேறு தோல் பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பதில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது. வேப்பிலையை கொதிக்க வைத்த தண்ணீரை எடுத்து முகத்தில் தடவி மசாஜ் செய்வது மூலமாக, முகத்தின் எண்ணெய் தன்மை குறையும்.
3. டீ ட்ரீ ஆயில்: தேயிலை மர எண்ணெய் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் போனது. இதை முகத்தில் தடவி மசாஜ் செய்வது மூலமாக, முகத்தில் அதிகப்படியாக எண்ணெய் வடிவது தடுக்கப்படும். இது முகத்தில் உள்ள ஈரப்பதத்தை முற்றிலும் எடுத்துவிடும் என்பதால், குறைவாகவே பயன்படுத்துங்கள். இல்லையேல் சருமம் அதிகமாக வறண்டுவிடும்.
4. கற்றாழை ஜெல்: கற்றாழை ஒரு ஈரப்பதமூட்டும் தாவரமாகும். இது அதிகப்படியான எண்ணெய் சருமத்திற்கு அதிக பலன் அளிக்கும். கற்றாழை ஜெல்லை அப்படியே நேராக முகத்தில் தடவினால், சருமத்திற்கு பல ஆரோக்கிய நன்மைகளை சேர்க்க உதவும். இதை அவ்வப்போது மாய்ஸ்சரைசர் போல பயன்படுத்தி வந்தால், எல்லாவிதமான சரும பாதிப்புகளும் குறைந்து முகம் பிரகாசமாக மாற ஆரம்பிக்கும்.
5. சந்தன ஃபேஸ் பேக்: சந்தனம் இயற்கையாகவே குளிர்ச்சி தரும் ஒன்றாகும். சந்தன பொடியை ரோஸ் வாட்டர் அல்லது தயிருடன் கலந்து பேஸ்ட் போல கலக்கி ஃபேஸ் பேக் உருவாக்குங்கள். இதை அப்படியே முகத்தில் தடவி காய்ந்ததும், தண்ணீரில் கழுவி விடுங்கள். இது முகத்தில் அதிகப்படியான எண்ணெய் பசையைக் குறைத்து பளபளப்பை ஏற்படுத்தும்.
மேற்கூறிய அனைத்துமே இயற்கையான முறைதான் என்பதால், உங்களுக்கு எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. இருப்பினும் உங்களுக்கு ஏற்கனவே தோல் பிரச்சினைகள் ஏதேனும் இருந்தால், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பின் இவற்றைப் பயன்படுத்துவது நல்லது.