

மழைக்கால கூந்தல் பராமரிப்பு ஏன் அவசியம்?
மழைகாலத்தில் ஏற்படும் ஈரம் முடியின் வேர்க்காலை பாதிக்கிறது. இந்த ஈரம் சரியாக காயவில்லையென்றால் மலாசெசியா (Malassezia) என்ற பூஞ்சை உருவாகி பொடுகு மற்றும் அரிப்பு பிரச்னையை ஏற்படுத்தும். இப்பதிவில் அதைத் தடுக்கக்கூடிய 6 முடி மாஸ்க்குகள் குறித்துக் காணலாம்.
பூஞ்சை தொற்றை ஒழிக்கும் கூந்தல் பராமரிப்பு மாஸ்க்குகள்
1. முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் மாஸ்க்
மழைக்காலத்தில் முடிக்குத் தேவையான புரதம் முட்டையில் உள்ளது. முடியில் ஈரத்தால் பூஞ்சையால் பாதிக்கப்படும்போது புரத அளவு குறைகிறது. முட்டையில் கொழுப்பு அமிலம், கரையும் வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டையின் வெள்ளைக்கரு புரதம் நிறைந்தது, ஆலிவ் ஆயில் நீரேற்றம் தரக்கூடியது. இந்த இரண்டையும் பயன்படுத்தும்போது முடியின் புரதம் பாதுகாக்கப்படுகிறது.
ஒரு முட்டையை நன்றாக அடித்து அதில் இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து முடியில் முழுவதும் தடவவும். அரைமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். தலைமுடியை நன்றாக அலசவும்.
2. யோக்ஹர்ட் மற்றும் தேன் மாஸ்க்
மழையின் பாதிப்பால் ஏற்படும் பொடுகு பிரச்னைக்கு ஏற்ற மாஸ்க் இது. மழை நீரால் பூஞ்சை ஏற்பட வாய்ப்புண்டு. யோக்ஹர்ட்டில் இருக்கும் லாக்டிக் அமிலம் முடியின் பி. ஹெச்சை பாலன்ஸ் செய்வதோடு முடியை எக்ஸ்ஃபோலியேட் செய்யும். மேலும் யோக்ஹர்ட்டில் பூஞ்சை எதிர்ப்பு பண்பு இருப்பதால் பூஞ்சையை தடுக்கும் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு இருப்பதால் இந்த மாஸ்க் முடியை பூஞ்சையிலிருந்து காத்து ஆரோக்கியமாக்கும்.
நான்கு டேபிள் ஸ்பூன் யோக்ஹர்ட்டில் ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து முடியில் நன்கு தடவி பிறகு 20 நிமிடம் கழித்து வாஷ் செய்யவும் வாரத்தில் இருமுறை இதை செய்யலாம்.
3. ஆலோவேரா டீட்ரீ ஆயில் மாஸ்க்
மழையால் பாதிக்கப்பட்டு முடியில் அரிப்பு பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது. ஆலோவேராவில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் முடியின் பி ஹெச்சை சமச்சீரான நிலையில் வைக்கும் டீட்ரீ ஆயிலில் பொடுகை தடுக்கக்கூடிய பண்பு உள்ளது.
மூன்று டேபிள் ஸ்பூன் ஆலோவேரா ஜெல்லுடன் 5 சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயில் சேர்த்துக் கலந்து இதை தடவி 20 நிமிடம் கழித்து அலசவும். இது முடியின் இரத்த ஓட்டத்தை சீராக்கி வேர்க்காலில் முடி வளர்ச்சியைத் தூண்டும். முடி அடர்த்தியாக வளரும்.
4. வாழைப்பழம் மற்றும் தேங்காய் எண்ணெய் மாஸ்க்
வாழைப்பழத்தில் பொடாசியம், இயற்கை எண்ணெய் சத்து, மற்றும் கார்போஹைட்ரேட் இருப்பதால் முடியை மென்மையாக்கும். முடியை மென்மையாக்கும் சிலிகாவும் இதில் உள்ளது தேங்காய் எண்ணெய் முடியை ஊடுருவக் கூடியது. இது முடியின் புரதச் சத்தை பாதுகாக்கிறது. மழைக்காலத்தில் இந்த பிரச்னை தடுக்கப்படுகிறது.
கனிந்த வாழைப்பழத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து முடியில் தடவி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும்.
5. வெந்தய மாஸ்க்
முடியின் தொற்றையும் ஊட்டச்சத்து குறைபாடையும் களையக்கூடியது. வெந்தயத்தில் உள்ள 'லெசிதின்' என்ற பொருள் முடிக்கு நீரேற்றத்தைத் தரக்கூடியது. மேலும், இதில் உள்ள 'பைட்டோஈஸ்ட்ரோஜன்கள்' முடியின் புரதத்தைக் காக்கக்கூடியவை. இதன் 'நிகோடினிக் அமிலம்' முடி வளர்ச்சியைத் தூண்டக்கூடியது. இது முடி உதிர்தலைத் தடுத்து, கூந்தலை அடர்த்தியாக வளரவைக்கும்.
இரவு ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை ஊறவைத்து, காலையில் அதை நன்றாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து முடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். முடியை அடர்த்தியாக்கும் இந்த மாஸ்க்கை, வாரத்தில் ஒரு நாள் பயன்படுத்தலாம்.
6. நெல்லிக்காய் சீயக்காய் மாஸ்க்
பாரம்பர்யமான இந்த மாஸ்க் முடி ஆரோக்கியத்திற்குச் சிறந்தது. நெல்லிக்காயில் அதிக விக்டமின் 'சி' சத்து உள்ளது; இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டுகிறது. இதில் உள்ள டானின் மற்றும் பாலிஃபினால்கள், ஆக்சிடேடிவ் அழுத்தத்திலிருந்து முடியைப் பாதுகாக்கின்றன. சீயக்காய் முடியின் இயற்கையான பி.ஹெச் அளவைச் சமன் செய்கிறது; முடியில் உள்ள பூஞ்சைத் தொற்றை அகற்றுவதோடு, முடி இளநரையாவதையும் தடுக்கிறது. நெல்லிக்காய் முடியின் இயற்கையான நிறத்தைப் பாதுகாக்கிறது.
இரண்டு டேபிள் ஸ்பூன் நெல்லிப்பொடியுடன், ஒரு டேபிள் ஸ்பூன் சீயக்காய்ப் பவுடர் கலந்து, வெதுவெதுப்பான நீர் விட்டுப் பேஸ்ட்டாகக் குழைத்துக் கொள்ளவும். அதை முடியில் தடவி, அரை மணி நேரம் கழித்து அலசவும். இந்த மாஸ்க்கைப் பயன்படுத்தும்போது தனியாக ஷாம்பு பயன்படுத்தத் தேவையில்லை.
மேற்கூறிய இயற்கை மாஸ்க்குகளைப் பயன்படுத்தி, மழைக்காலத்தில் முடியை நன்கு பாதுகாக்கலாம்.