

எத்தனை க்ரீம் போட்டாலும் பற்றாமல் போவது சரும வறட்சி. அதிகமாகக் காணப்படுவதும் இந்த சீசனில்தான். அதற்கு எளிமையாக சில அழகு குறிப்புகளை கையாண்டால் வறட்சியில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம் .அதற்கு செய்ய வேண்டியது:
பாலேட்டை நன்றாக தேய்த்து ஊறவிட்டு முகம் கழுவ முகம் வறட்சி நீங்கி மென்மையுடன் பிரகாசமாகும்.
அரிசி ஊறவைத்த தண்ணீர் எடுத்து, அதனுடன் கற்றாழை ஜெல், வைட்டமின் ஈ ஆயில், மஞ்சள் தூள், கிளிசரின் ஆகியவற்றை ஒன்றாக கலந்து சருமத்தில் தடவி கால் மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவிவிட்டால் வறட்சி நீங்கி சருமம் மின்னும்.
பப்பாளி, வாழைப்பழம் இரண்டையும் சமஅளவு எடுத்து தேன் கலந்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு பிசைந்து இதை சருமத்தில் பூசி சில நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.
கோதுமை மாவுடன், பாலாடை, பாதாம் பருப்பு இவற்றில் நன்றாக நீர் விட்டு அரைத்து சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து இதை முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து கழுவினால் முகம் பொலிவுடன் இருக்கும்.
வாழைப்பழத்துடன் தேன் கலந்து குழைத்து முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ சரும வறட்சி தோல் உரிதல் போன்ற பிரச்னைகள் தீரும்.
குளிப்பதற்கு முன்பு சருமத்தில் தேங்காய் எண்ணெய் தேய்த்துக் கொண்டு குளித்தால் சரும வறட்சி நீங்கும்.
குளித்தவுடன் அரைகுறையாக உடம்பை துடைத்துவிட்டு அந்த நீருடனே தேங்காய்எண்ணெய் சேர்த்து தேய்த்துக்கொண்டால் சருமம் வறட்சியின்றி இருக்கும்.
வயது கூட கூட சருமம் சுருள்வதுண்டு. அதற்கு சருமத்தை தினந்தோறும் மசாஜ் பண்ணி ஆயில் தடவினால் சருமம் பளபளப்பாகிவிடும். பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய்யை முகத்திலும், உடம்பிலும் தடவி மசாஜ் பண்ணலாம்.
எலுமிச்சைச் சாற்றுடன் தேன், பாலாடை கலந்து முகத்தில் தடவினால் முக வறட்சி நீங்கி முகம் மிருதுவாக மாறும்.
தோல் சீவிய ஆப்பிளை கரைத்து 15 நிமிடம் குளிரவைத்து பிறகு முகத்தில் தடவவேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, பிறகு ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டரும், ஒரு டீஸ்பூன் தேனும் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடத்திற்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ முகம் மிருதுவாகவும், அழகாகவும், பளபளப்பாகவும் ஆகிவிடும்.
கஸ்தூரி மஞ்சள், சந்தனம், ஆவாரம்பூ, ரோஜா மொட்டு, எலுமிச்சம் பழத்தோல், ஆரஞ்சுப் பழத்தோல் இவைகளை காயவைத்து அரைத்து, பசும்பால் விட்டு நன்றாகக் கலந்து முகம், கழுத்து கை கால்களில் தடவி சிறிது நேரம் ஊறவிட்டு கழுவிவிட வேண்டும். சோப்புக்கு பதிலாக இவற்றைத் தேய்த்து குளிக்க சருமம் கருமை, வறட்சி நீங்கி அழகு பெறும்.
சருமம் வறட்சியாக இருப்பதுடன் கை, கால் முட்டிகள் கறுத்து போவதும் உண்டு. அதற்கு லெமனை பாதியாக வெட்டி அதில் சீனியைத் தொட்டு சொரசொரப்பான கலவையால் அந்த இடத்தில் முட்டிகளில் தேய்த்து ஸ்க்ரப் பண்ணிவிட்டு பிறகு புதினா இலைகளை அரைத்து தேன் கலந்து முட்டிகளில் தேய்த்து வந்தால் கருமை போயே போச்சு.
சாதாரண எண்ணெயுடன் ஒரு துளி காஸ்டஸ் ஆயிலை பயன்படுத்தி சருமத்தை பராமரிக்கலாம்.
இதுபோல் அழகு குறிப்புகளை தெரிந்து வைத்துக் கொண்டு பயன்படுத்தி சரும வறட்சியைப் போக்கி ஃப்ரெஷ் லுக்குடன் வலம் வரலாம்.