

நோ சோப்... நோ வாட்டர் வாஷ்... முகம் எப்பொழுதும் பிரகாசிக்கும் எப்படி? பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கூறும் ரகசியம் இதோ...
"பெண்களில் பலர் தங்களின் முக வசீகரத்திற்காக அதிகளவு பணம் செலவு பண்ணி விதவிதமான சீரம் முதல் க்ளீன்ஸர்கள் வரை வாங்கிப் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். முடிவில் அவர்களுக்கு மிஞ்சுவது திருப்தியின்மை மட்டுமே. அவற்றையெல்லாம் உபயோகிக்காமலே எனது முக சருமம் பளபளப்பு குன்றாமல் என்றைக்கும் ஒரே மாதிரியான தோற்றம் தருவதற்கு நான் எனது முன்னோர்கள் கற்றுத்தந்த, எளிய முறையில், வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி பேஸ் பேக் போட்டு வருவதுதான்" என்கிறார். உப்தான் (Ubtan) எனப்படும், சருமத்திற்கான இந்த இயற்கை அழகுப் பேஸ்ட்டை தயாரிக்கும் முறையையும் தெளிவாக விளக்கியுள்ளார்.
உலர்ந்த சருமம் உள்ளவர்களுக்கு: கடலை மாவுடன் மஞ்சள் தூள், ஃபிரஷ் கிரீம், யோக்கர்ட் மற்றும் சிறிதளவு குளிர்ந்த பால் சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட்டாக்கி முகத்தில் மாஸ்க்காக போடலாம்.
கடலை மாவு மிருதுவாக முகத்திலுள்ள அழுக்குகளை நீக்கி சுத்தப் படுத்த உதவும். மஞ்சள் வீக்கங்களைக் குறைத்து சருமத்திற்கு இதமளிக்க உதவும். மேலும் தொற்று நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி முகப்பரு வருவதைத் தடுக்கவும், சருமம் இயற்கை முறையில் பள பளப்பு பெறவும் செய்யும். கிரீம், யோகர்ட் மற்றும் பால் ஆகியவை சருமத்தின் உலர்தன்மை நீங்கி நீரேற்றதுடன் இருக்க உதவிபுரியும்.
முகத்தில் மாஸ்க்காகப் போட்ட பேஸ்ட்டை 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்திருந்து பின் குளிர்ந்த நீரால் கழுவி துடைத்துவிடலாம். பேஸ்ட்டை முகத்தில் பூசும்போது கண்களுக்குக் கீழே உள்ள பகுதியைத் தொடாமல் தவிர்த்துவிடுவது நலம். ஏனெனில் அந்தப் பகுதியில் சருமம் மிக மெல்லியதாகவும், எரிச்சலடையக் கூடியதாகவும் இருக்கும்.
முகத்தின் சருமம் சென்சிடிவாக உள்ளவர்களுக்கு:
முகம் சென்சிடிவாகவோ அல்லது ஒவ்வாமை குணம் கொண்டதாகவோ இருந்தால் கடலை மாவிற்குப் பதில் கோதுமை மாவை உபயோகிக்கலாம். மஞ்சளுக்குப் பதில் ஃபிரஷ் லெமன் ஜூஸ் சேர்த்துக்கொள்ளலாம்.
ஸ்கின்னுக்கு வைட்டமின் C சத்தும் கிடைக்கும். பால் பொருட்கள் ஒவ்வாமை உள்ளவர்கள் அதற்குப் பதில் துருவிய தக்காளித் துண்டுகள் அல்லது உருளைக்கிழங்குத் துண்டுகளை பிழிந்து அதன் சாற்றை பேஸ் மாஸ்க் தயாரிக்கும் செயலில் சேர்த்துக் கொள்ளலாம். அதனால் சருமத்தின் டெக்ச்சர் மிருதுவாகும், ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும்.
இரசாயனப் பொருட்களின் கலப்பு ஏதுமின்றி முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரிக்கப்படும் இந்த
மாஸ்கை தினசரி அல்லது வாரத்தில் நான்கைந்து தினங்களாவது தொடர்ந்து போட்டு வந்தால் சருமத்தின் டெக்ச்சர் மிருதுத் தன்மையும் பள பளப்பும் பெறும்.