
கோடைகாலத்தில் கொட்டும் வியர்வை, ஆடைகளை நனைத்துவிடுகிறது. கோடை வெயிலின் உக்கிரம் ஒவ்வொரு வருடமும் அதிகமாகிக்கொண்டே போகிறது. ஒருபுறம் வெயில் என்றால், மறுபுறம் வியர்க்குரு, அம்மைநோய், நீர்க்கடுப்பு, உடல் அரிப்பு, மலச்சிக்கல் போன்ற நோய்கள் நம்மை பயமுறுத்துகிறது.
உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க வியர்வைச் சுரப்பிகள் உதவுகிறது. உடலில் வெப்பம் அதிகமாகும்போது, வியர்வைச் சுரப்பிகள் தேவைக்கு அதிகமாக உடலில் தேங்கும் உப்பு, கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். இந்த வியர்வைச் சுரப்பிகளின் வாயிலில் தூசி, அழுக்கு படிவதால்தான் வியர்க்குரு உண்டாகிறது.
வியர்க்குருவை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அரிப்புடன் கூடிய படை, தேமல் எனப் பல தோல் நோய்கள் ஏற்படக் காரணமாகிவிடும்.
வியர்குரு வரக்காரணங்கள்:
நேரம் தவறித் தூங்குவதாலும், சூடான தரையில் படுத்து தூங்குவதாலும் வியர்குரு ஏற்படுகின்றது.
கோடைகாலத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதனால் வியர்க்குரு உண்டாகிறது.
கோடைகாலத்தில் வெகுநேரம் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, காலை 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியில் செல்லவேண்டாம். அப்படிச் செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டால், கறுப்பு நிறக்குடைகளை தவிர்த்துவிட்டு, வெளிர்நிற குடைகளைப் பயன்படுத்தலாம்.
வியர்க்குருவை விரட்டுவதற்கான இயற்கை வழிமுறைகள்:
கோடைகாலத்தில் வெள்ளரிக்காய், கிர்ணி பழம், இளநீர், தர்ப்பூசணி, கரும்புச்சாறு போன்றவற்றை அதிகம் பருகலாம். இவை உடலில் ஏற்படும் நீரிழப்பைச் சரிசெய்து வியர்க்குருவைப் போக்க உதவுகிறது.
மஞ்சள், சந்தனம், வேப்பிலை மூன்றையும் ஒரே அளவு எடுத்து, மென்மையாக அரைக்க வேண்டும். பின், அதை வியர்க்குரு உள்ள இடங்களில் தடவி ஒருமணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும். இது போன்று வாரம் மூன்று முறை குளித்தால் வியர்க்குருவை விரட்டலாம்.
பாசிப்பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கலந்த பொடியை தேய்த்துக் குளிப்பதன் மூலம் வியர்க்குருவை தடுக்கலாம்.
கற்றாழையின் உள்பகுதியை எடுத்து தேய்த்துக் குளித்தால், வியர்வை பிரச்னை நீங்கும்.
இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக, திரிபலா (கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்) பொடியை நீரில் கரைத்து, தேய்த்துக் குளித்தாலும் வியர்க்குரு மறையும். இதைப்போன்று வெட்டி வேர் பொடியையும் பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் உணவு வகைகளை வறுத்துச் சாப்பிடுவதை தவிர்த்துவிட்டு கூட்டு மற்றும் குழம்பாக சமைத்துச் சாப்பிட வேண்டும். கார வகை உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கோடைகாலத்தில் முடிந்த வரையில் குளிர்ந்த மற்றும் வெதுவெதுப்பான நீரில் தினமும் இருமுறை குளிக்க வேண்டும்.
கோடைகாலத்தில் பருத்தி ஆடைகளை உடுத்துவதன் மூலம் வியர்வையானது சருமத்தில் தங்குவதை தடுத்து வியர்குரு வருவதை தடுக்கலாம்.