மச்சம் என்பதை பலரும் அழகாகவே பார்க்கிறார்கள். எல்லா மச்சங்களையும் அப்படி நினைத்து விட முடியாது. சில வகை மச்சங்கள் ஆபத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். சில மச்சங்கள் கரடு முரடான முனைகள் கொண்டும், அளவிலும், நிறத்திலும், வடிவத்திலும் மாறுதல் தெரிந்தாலோ அவை ஆபத்தானதாக கூட இருக்கலாம். டாக்டரை கலந்தாலோசிப்பது நல்லது.
மச்சங்களில் ஏதேனும் மாற்றங்களை உணர்ந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. இவை சரும புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
சிலருக்கு சருமத்தில் திடீரென மச்சம் போல் தோன்றும். அவை ஓரங்களில் சொரசொரப்பாகவும், கரடுமுரடாகவும் இருந்தாலோ, கருப்பு, சிவப்பு, பழுப்பு என பல நிறங்களின் கலவையாக இருந்தாலும், அளவில் மிகவும் பெரியதாக இருந்து அரிப்பும் ரத்தக் கசிவும் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
அவை சாதாரணமான மச்சம் அல்ல என்று மருத்துவர் கருதினால் சில பரிசோதனைகள் செய்யச் சொல்வார். அதன் மூலம் அவை ஆபத்தான மச்சங்கள் என உறுதியானால் அவற்றை முறையாக அகற்றவும் செய்வார் கவலை வேண்டாம்.
சிலருக்கு மச்சம் போன்று முகத்தில் ஆங்காங்கே கருப்பு புள்ளிகள் இருக்கும். இதனை மச்சம் என்று கூற முடியாது. சிலருக்கு பிறந்ததிலிருந்தே இருக்கும் இவை முக அழகை கெடுக்கும். இதற்கு வீட்டிலேயே சில எளிய வழிகளை பின்பற்ற நாளடைவில் மறைந்துவிடும். பார்லருக்கு சென்று வலியினை தாங்கிக் கொண்டு நீக்க வேண்டிய அவசியம் இல்லை.
விட்டமின் ஈ எண்ணையை (காப்ஸ்யூல்களில் வருவது) தினம் இரவு படுக்கச் செல்லும் சமயம் கருப்பு புள்ளிகள் இருக்கும் இடத்தில் தடவி வர நல்ல மாற்றம் தெரியும். விட்டமின் ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
எலுமிச்சை சாறுடன் சிறிதளவு பால் கலந்து கருப்பு புள்ளிகள் மீது தடவி வரலாம்.
கிவி பழங்கள், ஆப்ரிகாட், வாழைப்பழம், வெள்ளரிக்காய் இவற்றை மசித்து அதன் சதைப்பகுதியை முகத்தில் தடவி வர நாளடைவில் இந்த கருப்பு புள்ளிகள் மறைந்துவிடும்.
தக்காளி சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கரும்புள்ளிகள் மீது தினம் பற்று போல் போட்டு வர விரைவில் பலன் கிடைக்கும்.
பூண்டு எண்ணெய் கடைகளில் எளிதாக கிடைக்கக் கூடியது. இதனை வாங்கி தினம் இந்த கரும்புள்ளிகள் மீது தடவி வர நாளடைவில் இது மச்சத்தை மறைய செய்யும்.
மருக்கள் பலருக்கும் சாதாரணமாக வருவதுண்டு. உடலில் எங்கு வேண்டுமானாலும் மருக்கள் வரலாம் என்றாலும் முகம், கழுத்து, தோள்பட்டை ஆகிய பகுதிகளில் வருகிறது. இதற்கு சின்ன வெங்காயத்துடன் கல் உப்பு சேர்த்து அரைத்து மரு இருக்கும் இடத்தில் பற்று போடலாம். பிறகு வெந்நீர் விட்டு தேய்த்து கழுவிவிட நாளடைவில் மருக்கள் உதிர்ந்து விடும்.
கற்பூரத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து குழைத்து மரு உள்ள இடங்களில் தடவி வர தானாகவே உதிர்ந்து விடும்.
டீ ட்ரீ ஆயிலை மரு இருக்கும் இடத்தில் தடவி வர எளிதில் உதிர்ந்து விடும்.
ஆங்கில மருத்துவத்தில் மருந்துகளால் மருக்கள் உதிரவில்லை என்றால் லேசர் சிகிச்சை மூலம் நீக்குவார்கள். திரவ நைட்ரஜனை தெளிப்பதால் சிறு மருக்கள் தானாக உதிர்ந்து விடும்.
ஆங்கில மருத்துவ சிகிச்சை வேண்டாம் என எண்ணுபவர்கள் இயற்கை வைத்தியத்திலேயே மேற்குறிப்பிட்ட கற்பூர எண்ணெய், டீ ட்ரி ஆயில் மருத்துவம், சின்ன வெங்காயம் கல் உப்பு, பூண்டு எண்ணெய், இஞ்சிச்சாறு தடவுவது, ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சில் நனைத்து தடவுவது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பின்பற்ற விரைவில் மருக்கள் உதிர்ந்து முகமும் உடலும் பொலிவு பெறும்.