

அழகு சாதனப் பொருட்கள் (Cosmetics) மற்றும் சரும பராமரிப்பு குறித்து மக்களிடையே நிலவும் சில பொதுவான தவறான எண்ணங்களும், அவற்றின் உண்மையான நிலைகளையும் பற்றி தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான அழகு சாதனங்களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தின் மூலம் ரத்தத்தில் கலந்து, நீண்ட காலப் பயன்பாட்டில் ஒவ்வாமை மற்றும் தோல் நோய்களை உண்டாக்குவதுடன் வயதான, முதிர்ந்த தோற்றத்தையும் அளிக்கும்.
இயற்கை என விளம்பரப்படுத்தப்படும் பல பொருட்கள், முழுமையாக இயற்கையான முறையில் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதல்ல என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அதிக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் எப்போதும் சிறந்தவை என்ற தவறான எண்ணமும் மக்களிடையே நிலவி வருகிறது.
அதிக விலையுள்ள தயாரிப்புகள் அதிக தரம் வாய்ந்தவை என்ற தவறான நம்பிக்கை உள்ளது. விலை உயர்ந்த தயாரிப்புகளில் பெரும்பாலும் பிராண்டிங் கட்டணமே அதிகம், பொருட்களின் தரம் அல்ல என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மலிவான தயாரிப்புகளிலும் அதே தரமான உட்பொருட்கள் இருக்கலாம். பிராண்ட் பெயருக்காகவே பல நேரங்களில் அதிக விலையில் விற்கப்படுகிறது.
இயற்கையானவை (Natural) என லேபிள் இடப்பட்டவை பாதுகாப்பானவை என்ற எண்ணம் மக்களிடையே உள்ளது. உண்மையில் பெரும்பாலான தயாரிப்புகளில் 'இயற்கை' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டாலும் அதில் நச்சு ரசாயனங்களும் கலக்கப்படலாம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். 'இயற்கையானது' அல்லது 'ஆர்கானிக்' என்று குறிப்பிடப்படும் பொருட்கள் அனைத்திற்கும் பக்கவழிகள் இருக்காது என்று சொல்ல முடியாது.
தரமான மேக்கப் சாதனங்கள் சருமத்தை பாதிப்பதில்லை என்பதும் தவறான கண்ணோட்டமே. எந்தவிதமான மேக்கப் சாதனங்களையும் நீண்ட நேரம் அணிவது சருமத்துளைகளை அடைத்து, பருக்கள் மற்றும் சரும ஒவ்வாமையை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.
விலை அதிகம் கொடுத்து வாங்கும் மஸ்கரா மற்றும் ஐலைனர்கள் பாதுகாப்பானவை என்ற எண்ணமும் தவறே. இவை கண்களில் தொற்று மற்றும் எரிச்சலை உண்டாக்கும் அபாயம் உள்ளது. அதேபோல் சருமத்தை வெண்மையாக்கும் (whitening) கிரீம்களில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய ரசாயனங்கள் உள்ளது. எனவே எந்த ஒரு அழகு சாதன பொருளையும் பயன்படுத்துவதற்கு முன்பு ஒவ்வாமை பரிசோதனை (Patch test) செய்வது அவசியம். அத்துடன் அதிக நேரம் மேக்கப்புடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.
வெயிலில் போகவில்லை என்றால் சன்ஸ்கிரீன் தேவையில்லை என எண்ணுகிறோம். ஆனால் மேகமூட்டமான நாட்களிலும், வீட்டிற்குள் இருக்கும் பொழுதுகூட சூரியனின் ஊதாக்கதிர் வீச்சு இருக்கக்கூடும். எனவே சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீன் அவசியம்.
மேக்கப் போட்டாலே சருமம் கெட்டுப்போகும் என்ற எண்ணமும் தவறு. தரமான மேக்கப் பொருட்களை பயன்படுத்துவதும், தூங்குவதற்கு முன்பு அவற்றை சரியான முறையில் நீக்குவதும் சருமத்தை பாதிக்காது. ஆனால் அதேசமயம் போலி மற்றும் தரம் குறைந்த தயாரிப்புகளை தவிர்க்க வேண்டியது அவசியம் என்பதை உணரவேண்டும்.