

கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. வெயிலின் வெப்பத்திலிருந்து பெண்கள் தங்களது சருமத்தையும் கூந்தலையும் பாதுகாத்துக் கொள்ள இயற்கை வழிமுறைகளை பின்பற்றலாம்.
செம்பருத்தி இலைகள், துளசி, வெந்தயம் (ஒரு நாள் முன்னரே தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும்) ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். வடிகட்டிய சாற்றை ஷாம்புவாக தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இதனால் உடல் குளிர்ச்சி அடையும். கருமையான கூந்தல் பெற உதவும். பொடுகு தொல்லை நீங்கும்.
வியர்க்குரு உள்ளவர்கள் வேப்பிலை போட்டு ஊறவைத்த தண்ணீரை குளிப்பதற்கு பயன்படுத்தலாம்.
வெளியே செல்லும்போது கற்றாழையில் உள்ள சோற்றை வெயில் படும் இடங்களில் தேய்த்துக் கொள்ளலாம். இதனால் வெயிலின் தாக்கம் நேரடியாக சருமத்துக்குள் செல்வது தடுக்கப்படுகிறது.
வீட்டுக்கோ அலுவலத்துக்கோ சென்ற பின் தேய்த்த இடங்களை கழுவிக்கொள்ளலாம். இதனால் சருமம் மங்குவது தடுக்கப்பட்டு பளபளப்பாக உதவுகிறது..
பெண்கள் காலை 8 மணிக்குள் தலைக்கு குளிக்க வேண்டும். குளித்ததும் நேரடியாக வெயிலில் செல்வதை தவிர்க்கலாம். மாதவிலக்கு காலங்களில் உடல் சூட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
மருதாணியை அரைத்து உள்ளங்கை மற்றும் பாதங்களில் வைக்கலாம். இது உடல் உஷ்ணத்தை குறைக்க உதவும்.
லெக்கின்ஸ் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்க்கலாம்.
விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது. அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும்.
தினமும் தேன் சாப்பிடலாம்.காலையில் நெல்லிக்காய், எலுமிச்சை, முலாம்பழம் தர்பூசணி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பழச்சாறு அருந்துவது நல்லது.
சீசன் பழங்களான கொய்யா, மாம்பழம், மற்றும் உணவுப் பொருட்கள் அதன் நுங்கு பதநீர் போன்றவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். பப்பாளி மாதுளை, மாம்பழம் போன்றவற்றையும் உண்ணலாம்.
-ஜெயலட்சுமி