

ஒரு பெண்ணின் முக அழகை எடுத்துக் காட்டுவதில் கண்களுக்கும், அந்த கண்களுக்கு மேலே இருக்கும் புருவத்திற்கும் மிக முக்கிய பங்கு உண்டு. என்னதான் முகத்திற்கு மேக்கப் போட்டாலும், புருவங்கள் நேர்த்தியாகவும் வடிவமாகவும் இல்லை என்றால் அந்த அழகு முழுமை பெறாது. அதனாலேயே பெண்கள் மாதம் ஒரு முறையாவது அழகு நிலையங்களுக்குச் சென்று 'ஐ ப்ரோ த்ரெட்டிங்' (eyebrow threading) செய்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அவசர அவசரமாக ஏதாவது ஒரு விசேஷத்திற்கு கிளம்பும் போதோ அல்லது அலுவலகம் முடிந்து வரும் வழியிலோ பார்லருக்குச் சென்று புருவத்தை திருத்திக் கொள்கிறார்கள். ஆனால் இப்படி எந்தவித முன் யோசனையும் இல்லாமல் செய்யும்போது, அது அழகைக் கொடுப்பதற்கு பதிலாக சருமப் பிரச்சனைகளையே பரிசாகத் தருகிறது. சரும நிபுணர்களின் அறிவுரைப்படி, த்ரெட்டிங் செய்வதற்கு முன் நாம் கடைபிடிக்க வேண்டிய 5 விஷயங்களை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
1. முகம் சுத்தமாக இருக்க வேண்டும்!
பெரும்பாலான பெண்கள் செய்யும் முதல் தவறு, முகத்தைச் சுத்தம் செய்யாமலே அழகு நிலைய நாற்காலியில் அமர்வதுதான். வெளியில் சுற்றித் திரிந்த புழுதி, முகத்தில் வழிந்த வியர்வை மற்றும் காலையில் போட்ட சன்ஸ்கிரீன் அல்லது மேக்கப் போன்றவை சருமத்தில் அப்படியே இருக்கும்.
இந்த நிலையில் நூலைக் கொண்டு ரோமங்களை நீக்கும் போது, சருமத் துளைகள் திறக்கப்பட்டு அழுக்குகள் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. இது நோய்த் தொற்றை உண்டாக்கும். எனவே, த்ரெட்டிங் செய்வதற்கு முன்பு முகத்தை ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவி, முழுமையாகச் சுத்தம் செய்த பின்னரே செயல்முறையைத் தொடங்க வேண்டும்.
2. சீரம் வேண்டாம்!
இன்றைய காலத்தில் பலரும் இரவில் முகத்திற்கு 'சீரம்' வகை கிரீம்களைப் பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக ரெட்டினால், வைட்டமின் சி மற்றும் நியாசினமைடு போன்ற வேதிப்பொருட்கள் கலந்த சீரம்கள் சருமத்தைப் புதுப்பிக்க உதவும். ஆனால், நீங்கள் த்ரெட்டிங் செய்யத் திட்டமிட்டால், அதற்கு இருபத்து நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த வகை கிரீம்களைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் இவை சருமத்தை மிகவும் மென்மையாக மாற்றிவிடும் என்பதால், நூல் படும்போது தோல் உரிந்து புண்ணாக வாய்ப்புள்ளது.
3. பருக்கள்!
முகத்தில் பருக்கள் அல்லது கொப்புளங்கள் இருக்கும் போது த்ரெட்டிங் செய்வதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. பருக்கள் உள்ள இடத்தில் நூலை வைத்து இழுக்கும் போது, அது உடைந்து வலி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அதில் உள்ள கிருமிகள் முகம் முழுவதும் பரவ வழிவகுக்கும். சருமம் இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை காத்திருப்பதே புத்திசாலித்தனம்.
4. செயல்முறைக்குப் பின்னர்!
பொதுவாகப் பார்லர்களில் த்ரெட்டிங் முடிந்தவுடன், எரிச்சலைத் தணிக்க முகத்தில் பவுடர் போடுவார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். ரோமங்கள் நீக்கப்பட்டவுடன் சருமத் துளைகள் அகலமாகத் திறந்திருக்கும். அந்த நேரத்தில் பவுடரைப் பூசினால், அது துளைகளை அடைத்துக் கொண்டு முகப்பருவை உண்டாக்கும். அதற்குப் பதிலாக ஐஸ் கட்டிகளைக் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம் அல்லது இயற்கையான கற்றாழை ஜெல்லையைப் பயன்படுத்தலாம். கெட்டியான மாய்ஸ்சரைசர் கிரீம்களைத் தவிர்ப்பது நல்லது.
5. முன்னாடியே பண்ணுங்க!
நாளைக்குத் திருமணம் அல்லது விசேஷம் என்றால், இன்றைக்குத் த்ரெட்டிங் செய்வது ஆபத்தானது. த்ரெட்டிங் செய்தவுடன் சருமம் சிவந்து போயிருக்கும் மற்றும் உணர்திறன் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் கனமான மேக்கப் போடுவது சருமத்தைப் பாதிக்கும். எனவே எந்த ஒரு விசேஷமாக இருந்தாலும், அதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாகவே புருவங்களைச் சரிசெய்து கொள்வது சிறந்தது. இது சருமம் பழைய நிலைக்குத் திரும்ப அவகாசம் கொடுக்கும்.