ஆலிவ் எண்ணெய்:
சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும். தினம் இரவு தூங்கும் முன் முகம், கழுத்துப் பகுதிகள் மற்றும் கைகளில் தடவ சுருக்கங்கள், சரும வறட்சியை போக்கி பளபளப்பாக்கும்.இதில் வைட்டமின் ஈ, விட்டமின் டி, விட்டமின் ஏ, ஒமேகா 3 போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. தோல் தொற்றுகளை தடுக்க உதவும். இவற்றை சருமத்தில் தடவ அரிப்பு, அலர்ஜி மற்றும் சொறி பிரச்சனைகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கும்.
தேங்காய் எண்ணெய்:
சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்றி சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைக்க உதவும். சரும வறட்சியைப் போக்கி சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கும். முகப்பரு வராமல் தடுக்கும்.கண்களுக்கு கீழ் சிறிது தேங்காய் எண்ணெயைத் தடவி மசாஜ் செய்ய கருவளையம் நீங்கும்.
பப்பாளி:
பப்பாளி பழத் துண்டுகளுடன் சிறிது தேன் மற்றும் பால் சேர்த்து பசையாக்கி முகம், கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ சருமம் பளபளப்பாகும். பப்பாளி பழத்தில் விட்டமின் சி, ஈ மற்றும் விட்டமின் கே போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை சருமத்தை அழகுடன் மிளிர வைக்கும்.
தயிர் மஞ்சள் தூள் ஃபேஸ்பேக்:
தயிருடன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ முகம் பொலிவு பெறும்.
சந்தனம் மஞ்சள் ஃபேஸ் பேக்:
தரமான சந்தனத்துடன் சிறிது மஞ்சள் தூளை சேர்த்து குழைத்து முகம், கழுத்து, கைகளில் தடவ வெயிலினால் சரும நிறம் மாறாமல் இருக்கும்.
தேன்:
முகத்தில் உள்ள பருக்கள், தழும்புகளை நீக்கி பளபளப்பான சருமத்தை கொடுக்கும். தேன் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை அளிப்பதுடன் இளமையாகவும் வைத்திருக்க உதவும்.
ரோஸ் வாட்டர்:
முகத்தை சுத்தம் செய்யும் க்ளென்சராக பயன்படும் ரோஸ் வாட்டர் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். ரோஸ் வாட்டர் சிறிது, எலுமிச்சை சாறு, கிளிசரின் ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட முகம் பளிச்சென்று இருக்கும்.
கடலை மாவு:
கடலை மாவு சருமத்தை சுத்தப்படுத்தவும், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையை போக்கவும் உதவும். இதனை சிறிது தயிருடன் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ பளிச்சிடும்.
கற்றாழை ஜெல் ஃபேஸ் பேக்:
சந்தனப் பொடி, கற்றாழை ஜெல் மற்றும் பால் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி விட சுருக்கங்கள் நீங்கி சருமம் பளபளக்கும்.