நான் தகுதியற்றவன் என்று நம் மீதே முத்திரை குத்திக் கொண்டு பிறரைத் துணைக்கு அழைக்கும் குணம்தான் அவநம்பிக்கை ஆகும். துணிந்து நின்றோமானால் சூழ்நிலையே மாறிவிடும். நம்மை நாமே அறிந்து கொள்ளவேண்டும். முதலில் எதுவும் பயமாகத்தான் இருக்கும். செயலில் இறங்கினோமானால் அது எளிதாகிவிடும்.
உங்களுக்குக் குதிரை சவாரி செய்ய ஆசை. ஆனால் குதிரை கீழே தள்ளிவிடுமோ என்ற பயம். குதிரை சவாரி செய்வது எப்படி என்று எவ்வளவு நாள்தான் படிப்பது. குதிரை மீது ஏறி அதை சமாளிக்க முயலும் போதுதான் நமக்கு முழுமையாக விளங்கும்.அனுபவம் ஏற்படும்.
நமக்கு நாமே ஒரு வாய்ப்பு கொடுத்தால் என்ன குடியா மூழ்கி விடும் என்று எண்ணி இறங்குவதில்லை. பத்திரம் பத்திரம் என்ற பாதுகாப்பை நாடி கூண்டுக்குள் பதுங்க முயற்சிக்கிறோம். நாமாக நமக்குள் சில எல்லைகள் போட்டுக்கொண்டு இவ்வளவுதான் என்னால் முடியும் என்று வரையறுத்துக் கொள்கிறோம். நாம் முயன்றால்தான் நம்முள் இருக்கும் அசாதாரண குணங்கள் தெரிய வரும்.
குடும்பப் பெண்ணாக வாழ்ந்தவள்தான் கண்ணகி. எனினும் தேவை என்று வரும்போது நீதி கேட்டு அரசன் முன் நின்றாள். நியாயம் கேட்டு போராடவில்லயா?
ஒரு கிராமத்து ஆள் மாம்பழத்தை சாக்கு மூட்டையில் வைத்து தலையில் சுமந்து விற்றார். பின் சைக்கிள் ரிக்க்ஷாவில் விற்றான்.பின் ஒரு கடை போட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு வளர்ந்தான். தன்னம்பிக்கை அவனுக்கு இருந்தது. ஆனால் பலருக்கு பயம் அவர்களை முடக்கி விடுகிறது.
ஊனமுற்ற வழக்கறிஞராக ஒருவர். அவரைத் தள்ளு வண்டியில் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்வார்கள். நீதிபதி முன் வாதாடுவார். இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் வீட்டில் கண் காது கை கால் எல்லாம் நன்றாக இருக்கக் கூடியவர்கள் அவருக்காக காத்துக் கொண்டிருப்பார்கள். உடல் ஊனம் அவரை எதுவும் செய்யவில்லை. ஏனெனில் அவரிடம் மன ஊனம் இல்லை. தன்னால் முடியும் என்ற நம்பிக்கை அவருக்கு நிறைவு தந்தது. மரியாதை தந்தது. பெருமை தந்தது. அன்றாட வாழ்வில் உடல் ஊனமற்றவர்களை விட மனஊனம் உள்ளவர்களைதான் அதிகம் பார்க்கிறோம். சாதனைக்கு எல்லை கிடையாது. முதலில் காலை ஊன்றி நடக்க வேண்டும். உங்களுக்கு இறக்கை முளைத்து விட்டதா என்று பாருங்கள் தத்தித் தாவ முடியுமா என்று பாருங்கள். பின் பறக்க முயலுங்கள், குருவி குஞ்சு போல்.