

தற்போது நாடு முழுக்க அனல் பறக்கும் வெயில் காலம் வந்துவிட்டது. இந்தக் கடுமையான வெப்ப காலத்தில் உங்களின் சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். சருமத்தினை பாதுகாப்பதற்காக பல தசாப்த காலமாக சன்ஸ்கிரீன் லோஷன் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இன்றைய காலகட்டத்திலும் கூட பெரும்பாலானவர்கள் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது இல்லை. அதிலும் குறிப்பாக ஆண்கள் இது பற்றி சிந்திப்பது கூட இல்லை.
சன்ஸ்கிரீனை தவிர்ப்பதால் ஏற்படும் சரும பாதிப்புகளை அறிந்து கொள்வது அவசியம். இந்தியா போன்ற வெப்பமயமான நாடுகளில், சரும பாதிப்பிற்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. ஒவ்வொருவரும் தங்களின் நிறத்தினை மேம்படுத்துவதற்காக ஒரு சில ஃபேர்னஸ் கிரீம்களை முகத்தில் வருடக் கணக்கில் தடவுகிறார்கள். ஆனால், அதற்கான முடிவுகள் எதிர்பார்ப்பதை போல் இருப்பது இல்லை. இதற்கெல்லாம் காரணம் சூரிய ஒளி சருமத்தில் நேரடியாக ஏற்படுத்தும் விளைவுகள்தான்.
கோடைகாலத்தில் சரும பாதிப்புகளை தவிர்க்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியம். வெளியில் செல்பவர்கள் மட்டுமல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பவர்களும் சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது அவசியமாகும். ஜன்னல்கள் மற்றும் வெளிச்சம் ஊடுருவும் பகுதிகள் வழியாக புற ஊதாக்கதிர்கள் சருமத்தினை தாக்கக்கூடும்.
குறிப்பாக குழந்தைகள், இளம்வயதினர் , முதியவர்கள் ஆகியோருக்கு உணர்த்திறன் மிக்க சருமம் இருக்கும். இவர்களுக்கு சன் ஸ்கிரீனை பூசுவதுதான் சருமத்தை பாதுகாக்கும் அடிப்படை வழிமுறை. அதிக நேரம் வெயிலில் அலையும் மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், எளிதில் கருமையாகும் சருமம் கொண்டவர்களுக்கும் இது மிகவும் அவசியமாகும். சன்ஸ்கிரீன் நீண்ட காலம் சருமத்தினை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கு உதவி செய்யும்.
சன்ஸ்கிரீன் பூசாவிட்டால் என்ன நிகழும்?
சூரிய ஒளியிலிருந்து வெளிப்படும் புறஉதாக்கதிர்கள், சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. பொதுவாக தோலின் நிறத்தினை கருமையாக்குதல், எரிச்சல், திட்டு திட்டாக சிவத்தல் போன்ற பாதிப்புகளை ஆரம்ப கால கட்டத்தில் ஏற்படுத்துகிறது. இதைத்தொடர்ந்து சருமத்தில் மெல்லிய கோடுகள், சுருக்கங்கள் ஆகியவற்றையும் ஏற்படுத்துகிறது. இது போன்ற சருமத்தை பாதிக்கும் நடவடிக்கைகளால் விரைவிலேயே வயதான தோற்றத்தை கொடுத்து விடுகிறது.
வெயிலின் தாக்கம் சருமத்தில், கறைகளையும் நிறமாற்றத்தையும் அதிகரித்து, சீரற்ற தோற்றத்திற்கு வழிவகுக்கும். பல சமயங்களில் சருமம் தனது ஈரப்பதத்தினை இழந்து வறட்சியாக காட்சி அளிக்கும். இது சரும பிரச்னைகளை அபாயத்தினை மேலும் அதிகமாக்கும். சருமம் சார்ந்த அபாயங்கள் அதிகரித்தால் சில சமயங்களில் தோல் புற்றுநோய் கூட வருவதற்கு காரணமாக இருக்கும்.
சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது எப்படி?
எப்போதும் சன்ஸ்கிரீனை பயன்படுத்திய 15 நிமிடங்கள் கழித்த பின்னரே வெளியில் செல்லவேண்டும். நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒருமுறை சன்ஸ்கிரீனை மீண்டும் தடவிக்கொள்ள வேண்டும். இதை முகத்தில் மட்டும் பூசிக்கொள்ளாமல் கழுத்து, பின்புற கழுத்து, கைகள், வெளியில் தெரியும் பாதங்களின் மேல் பகுதி வரை பூசிக் கொள்ளவேண்டும்.
சன்ஸ்கிரீனை தேர்ந்தெடுக்கும் முறை?
SPF 50 அல்லது அதற்கு மேல் பாதுகாப்பு உள்ள சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது இந்தியா போன்ற வெப்பநாட்டில் உள்ளவர்களுக்கு சரியானதாக இருக்கும். எண்ணெய் சருமம் உள்ளவர்கள் ஜெல் சன்ஸ்கிரீனையும், வறண்ட சருமம் உள்ளவர்கள் கிரீம் சன்ஸ்கிரீனையும் பயன்படுத்த வேண்டும். நீர் எதிர்ப்புத் திறன் கொண்ட சன்ஸ்கிரீன்கள் வியர்க்கும்போதும் பாதுகாப்பு தரும். சன் ஸ்கிரீனுடன் சிறிதளவு மாய்ஸ்ரைசர் தடவுவது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.