
பெண்களின் வயதையும் பருவத்தையும் பொறுத்து அவர்களின் பருவ நிலைகளை ஏழு பருவங்களாக பிரித்து வைத்துள்ளதை நாம் அறிவோம். அதேபோல் பெண்களின் இயற்கையான உடலின் அமைப்பு, தோற்றபொலிவு, உருவம், வடிவம், எழிலின் நலன்கள், குணநலன்கள் ஆகியவற்ற அடிப்படையாகக் கொண்டு நான்கு பிரிவுகளாக பிரித்துள்ளனர்.
இத்தகைய பெண்களில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை என்றாலும் மல்லிகை போன்ற மலர்களில் சிறந்த மணமும் குணமும் கொண்டவற்றை ஜாதி மல்லிகை என்று அழைப்பது போல், பெண்களின் இயற்கை அமைப்பில் குறிப்பிடத்தக்க உருவமைப்பும் குணநலங்களும் வாய்ந்தவர்களை நான்காக பிரித்துள்ளனர் .அந்த அமைப்பை உடைய பெண்கள் பற்றிய ஜாதக கணிப்பு இதோ:
பத்மினி ஜாதிப்பெண்:
பெண்களிலேயே மிகவும் சிறப்பான அழகும், உடலும், குணமும் கொண்ட பெண்களை பத்மினி இனப்பெண்களாக வழங்குவது தமிழ் மரபு. இத்தகைய பெண்களுக்கு மென்மையான உடலும், ஒற்றை நாடி ஆன தேகமும், தாழம்பூ போன்ற முகமும், எள்ளுப் பூபோன்ற நாசியும், மூன்று மடிப்புடைய நாவியும், கருநீல மலர்களைப் போன்ற கண்களும், கோவைப் பழங்களைப் போன்ற இயற்கையில் சிவந்த உதடுகளும், கருவண்டு போன்ற கருமையான கூந்தலும், உருண்டு திரண்ட தனபாரங்களும், இனிய பேச்சும், அன்னம் போன்ற நடையழகம், இயல்பாக அமைந்திருக்கும். இத்தகைய பெண்கள் தர்ம நெறிகளில் நின்று பிரகாதவர்களாகவும், அறச்செயல்களில் ஆர்வம் மிக்கவர்களாகவும் விளங்குவார்கள் என்று பத்மினி இனப் பெண்களை பற்றிய குறிப்பு கூறுகிறது.
அத்தினி ஜாதிப் பெண்கள்:
அத்தினி இன பெண்களுக்கு தடித்துப் பருமனான உடற்கட்டும், கழுத்து, தொடைகள், கணுக்கால் போன்ற உறுப்புகள் சிறுத்தும் காணப்படும். உதடுகளும், பற்களும் பருத்து, கனத்தும், இருக்கும். நெஞ்சு அமைப்பு கலசங்களைப்போல பருத்தும், கனத்தும், பெருத்தும் அமைந்திருக்கும். நீண்ட புருவங்களும், அலை அலையாக சுருண்ட கேசமும், தழுதழுத்த குரலும், மதயானை போன்ற நடையும், மதநீர் வாசம் கமழும் மேனியின் இயற்கை மணமும் கொண்டவர்களாக இந்த மங்கையர் விளங்குவர். இவர்கள் இசை கலையில் சிறந்து விளங்குவார்கள் என்று லட்சண சாஸ்திரம் கூறுகின்றது.
சங்கினி ஜாதிப் பெண்:
உயர்தரமான தேகஅமைப்பும், செம்பு போன்ற சரிசமமான அளவுள்ள நெஞ்சமைப்பும், வெண்சங்கை போன்ற பற்களும், நீள் விழிகளும், சிவந்த மூக்கும், குறைவான அடர்த்தியான கூந்தலும் அமையப்பெற்றவர்கள் சங்கினி இனப்பெண்கள் என்று ஜாதக அமைப்பு கூறுகின்றது.
சித்தினி ஜாதிப் பெண்:
நடுத்தரமான உயரமும், உயர்ந்து, கனத்து, பருத்த நெஞ்சமும், நீண்ட கூர்மையான மூக்கும் அமையபெற்ற பெண்களை சித்தினி ஜாதிப் பெண்கள் என்று வழங்குகின்றனர். இத்தகைய பெண்கள் இனிமையாக பேசுவார்கள் என்றாலும் அந்தப்பேச்சில் நிலையற்ற தன்மையே நிலவும். உறுதியற்ற மனம் உடைய இவர்கள் மனம் வைத்தால் உறுதி மிக்கவர்களாகவும், சித்தத்தை உடைய அறிவுடையவர்கள் என்பதாலேயே, இவர்களை சித்தினி என்பது மரபு.
இவர்கள் விசித்திர வர்ணம் உடைய ஆடை ஆபரணங்களில் அதிக விருப்பம் உடையவர்கள். சித்திரம் போன்ற அழகிய உடலமைப்பைக் கொண்டவர்கள். ஆதலாலும் இவர்களை சித்தினி இனப்பெண் என்று கூறுகின்றனர். 18 காய்கறியும் பஞ்சாமிர்தமும் படைத்தால் இன்னும் எதை வைத்தால் சாப்பிடுவார்கள் என்று ஒரு கேள்வியை கேட்பவர்கள் உண்டு. அதுபோல் மனது வைத்தால் எதையும் சாதிக்க கூடிய வல்லமை பெற்றவர்கள் இந்த பெண்கள்.
நால்வகை குணமுடைய பெண்களைப் பற்றி அடிக்கடி உயர்வாகவே கேள்விப்படுவோம் என்றாலும், அதிகம் இவர்களைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இதில் நீங்கள் எந்த வகையைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் சந்தோஷப்பட்டுக் கொள்ளும் அளவிற்கு உயர்ந்த அழகும் உடல் நலங்களும் இருப்பதை உணரமுடிகிறது.