பிரகாசமான மற்றும் பொலிவான முகத்தைக் கொண்டிருப்பது பெரும்பாலானவர்களின் ஆசையாக இருக்கிறது. இருப்பினும் பல்வேறு விதமான காரணங்களால் நமது சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. பொலிவிழந்த சருமத்தை மீட்டெடுப்பதற்கு சந்தையில் பல்வேறு விதமான செயற்கைப் பொருட்கள் இருந்தாலும், இயற்கையாகவே சில உணவுகளை உட்கொண்டு நாம் முகப்பொலிவை அடைய முடியும். சரியான உணவுப் பராமரிப்பு முகத்தோற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தப் பதிவில் எத்தகைய உணவுகளை சாப்பிட்டால் ஒரே வாரத்தில் முகம் பளபளவென மாறிவிடும் என்பது பற்றி பார்க்கலாம்.
பெர்ரி பழங்கள்: ஸ்ட்ராபெரி, ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆன்ட்டிஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. அவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவி சருமத்திற்கு இயற்கையான பொலிவைக் கொடுக்கின்றன. இந்த சுவை மிகுந்த பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்து காணப்படுவதால், கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி, தோல் நெகிழ்ச்சித்தன்மைக்கு வழிவகுத்து, இளமைத் தோற்றத்தை ஊக்குவிக்க உதவுகிறது.
கீரைகள்: கீரைகளில் பொதுவாகவே விட்டமின் ஏ, சி மற்றும் இ நிறைந்து காணப்படுகின்றன. இந்த விட்டமின்கள் ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்பட்டு, சருமத்திற்கு சுற்றுச்சூழலால் ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. மேலும் கீரைகளில் உள்ள தண்ணீர் அளவு சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருப்பதால், இது இயற்கையான பளபளப்புக்கு வழிவகுக்கும்.
அவகாடோ: அவகாடோ எனப்படும் வெண்ணெய் பழங்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தைக் கொடுக்கிறது. இதில் இருக்கும் விட்டமின் ஈ, சருமத்தில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், தோல் சேதத்தை சரி செய்யவும் உதவும். வெண்ணெய்ப் பழத்தை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது மூலமாக இயற்கையான பளபளப்புடன் கூடிய மென்மையான சருமத்தை நீங்கள் அடையலாம்.
நட்ஸ்: பாதாம், அக்ரூட் பருப்புகள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளில் தோல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும், விட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையைப் பராமரித்து பளபளப்பு நிறத்தை வழங்குகின்றன. எனவே தினசரி சிறிதளவு நட்ஸ் வகைகளை உண்பது மூலமாக சருமத்தின் தோற்றத்தை முற்றிலுமாக மாற்றலாம்.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி ஏராளமாக உள்ளது. இது கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி சருமத்திற்கு இளமையான பளபளப்பைக் கொடுக்கிறது. விட்டமின் சி சருமத்தின் நிறத்தை சமன் செய்து, இயற்கையான ஆரோக்கியமான முகப்பொலிவை ஏற்படுத்துகிறது.
தக்காளி: தக்காளியில் லைகோபீன் என்ற ரசாயனம் உள்ளது. இது சருமத்தைப் பாதுகாக்கும் பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். லைகோபீன் புற ஊதாக் கதிர்களில் இருந்து சருமத்தை பாதுகாத்து, சருமம் விரைவில் வயதான தோற்றத்திற்கு மாறும் அபாயத்தைக் குறைக்கிறது. எனவே தினசரி தக்காளியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதே நேரம் தக்காளியை அதிகமாகவும் சேர்த்துக் கொள்ள வேண்டாம்.
ஒரு வாரம் இந்த ஆறு உணவுகளை நீங்கள் முறையாக எடுத்துக் கொண்டாலே போதும், உங்கள் முகம் பளபளப்பாக மாறிவிடும். இதற்காக எவ்விதமான செயற்கை சாதனங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டாம்.