

எண்ணெய் வகைகளை தலையில், உடலில் தேய்த்துக் கொள்வதன் மூலம் சருமங்கள் பளபளப்பாகி அழகு மேம்படும். அப்படி எண்ணெய்களால் கிடைக்கும் அழகு குறிப்புகளை இப்பதிவில் காண்போமா?
பெண்கள் வாரத்துக்கு ஒரு தடவை ஒரு சில துளிகள் ஆவது தேங்காய் எண்ணெயை உடம்பில் தேய்த்துக் கொண்டு குளித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். சருமமும் மிருதுவாக இருக்கும்.
நல்லெண்ணெயில் சிறிது வேப்பம் பூவும், வெல்லமும் சேர்த்து நன்கு காய்ச்சி தலையில் தடவி 30 நிமிடம் ஊறவிட்டு தலையை அலசி வந்தால் பொடுகு தொல்லை எளிதில் நீங்கிவிடும்.
ஒரு கப் நல்லெண்ணெயில் வேப்பம் பூவைப் போட்டுக் காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒரு முறை தேய்த்துக் குளித்து வந்தால் போதும் பேன், பொடுகுத் தொல்லைகள் போய்விடும்.
ஆலிவ் எண்ணெயை தினமும் தடவி வந்தால் முடி செம்பட்டை நீங்கி முடி கறுக்கும்.
வாரம் இரண்டு முறை தேங்காயை அரைத்தெடுத்த பாலை தலையில் தேய்த்து குளித்தால் முடி செம்பட்டை நிறம் மாறி முடி கருப்பாகும்.
சில நேரம் வீட்டில் சமைக்க வாங்கி வைத்திருக்கும் தேங்காய் உடைக்கும்போது எண்ணெய் பசை அதிகமாக தெரியும். சமைக்க முடியாதபடிக்கு ஆகியிருக்கும். அவற்றை நன்றாக வழித்து ஒரு கடாயில் போட்டு காய்ச்சி அந்த எண்ணெயை தடவி தலைக்கு குளித்துப் பாருங்கள். முடி பளபளப்பாக இருப்பது நன்றாக தெரியும்.
விளக்கெண்ணெயை வாரம் இரண்டு முறை கால்களில் தடவி வந்தால் வெடிப்பே வராது.
சுத்தமான நல்லெண்ணெயை சிறிது தண்ணீர் சேர்த்து கைகளில் வைத்து பரபரவென்று தேய்த்தால் மெழுகு போல நுரைத்து வரும். அந்த எண்ணெய் நுரையைத் தடவி, சூடு பறக்க தேய்த்து வந்தால் முக சுருக்கம் போகும். சருமம் பட்டுப்போல பளபளவென்று இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் மெழுகை உடைத்துப் போட்டு சூடுபடுத்தினால் களிம்புபோல் வரும். இதை தினமும் வெடிப்பில் தடவினால் வெடிப்பு நீங்கி கால்கள் வழுவழுப்புடன் இருக்கும்.
மிளகை பசுநெய்யுடன் சேர்த்து மை போல் அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பு படர் தாமரையின் மீது பூசி காலையில் சீயக்காய் தூள் போட்டு கழுவி விட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படம் தாமரை குணமாகும்.
வெண்ணையுடன் கொத்தமல்லி சாற்றை கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.
உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகத்தில் 100 கிராம் நல்லெண்ணெய் சேர்த்து புகை வரும்படி காய்ச்சி அந்த எண்ணையை கண்ணின் மேலும் கண்ணைச் சுற்றிலும் தேய்த்து கழுவினால் கண் எரிச்சலும் சிகப்பும் மாறும்.
வேப்ப எண்ணையை கொண்டு மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள கிருமிகள் அகன்று பருக்கள் மறையும்.
Kalkionline-ஐ Google செய்திகளில் பின்தொடர... Google News
Kalkionline-ஐ முகநூலில் பின்தொடர... Kalkionline Facebook, Mangayar Malar Facebook
Kalkionline-ஐ இன்ஸ்டாகிராமில் பின்தொடர... Kalkionline Instagram, Mangayar Malar Instagram
Kalkionline-ஐ வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
Kalkionline-ஐ பின்தொடர: Youtube, Twitter
Add KalkiOnline as a preferred source on Google... Click Here