குளிர்காலத்தில் சருமம் வறண்டு போவதால் அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு தயிரை நாம் பயன்படுத்தும் போது சரும பாதிப்புகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். எனவே குளிர்காலத்தில் சருமத்திற்கு தயிரை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பனிகாலம் வந்துவிட்டாலே நமது சருமத்தில் வறட்சி ஏற்பட்டு எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுவது வழக்கம். கை கால் என உடலில் எல்லா பகுதிகளிலும் சரும வறட்சியால் பாதிப்புகள் ஏற்படும். பனிக்காலங்களில் கை கால்களில் சொரிந்தால் வெள்ளையாக மாறிவிடுவதைப் பார்த்திருப்பீர்கள். சிலருக்கு முகம் சுருங்கி வயதான தோற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய சரும பாதிப்புகளை வீட்டில் உள்ள சில பொருட்களை பயன்படுத்திய சரி செய்யலாம்.
உங்களுக்கு சருமத்தில் சுருக்கம், வறட்சி இருந்தால் தேன் மற்றும் தயிரை பயன்படுத்தி அதை சரி செய்ய முடியும். ஒரு சிறிய கப்பில் கொஞ்சமாக தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதை முகத்தில் நன்கு பூசி மசாஜ் செய்து, அரை மணி நேரம் ஊற விட்டு பின் குளிக்கவும். இதை செய்தால் உங்கள் சருமம் மென்மையாக மாறிவிடும்.
அதேபோல குளிர்கால சரும பாதிப்புக்கு தயிர் மற்றும் ஓட்ஸையும் பயன்படுத்தலாம். இதற்கு கொஞ்சம் தயிர் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து மிக்ஸியில் போட்டு மைய அரைத்தால் க்ரீமாக மாறிவிடும். இந்த க்ரீமை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்களுக்குப் பின்னர் வெந்நீரில் கழுவினால், முகத்தில் உள்ள அரிப்பு சுருக்கம் வறட்சி போன்றவை நீங்கி மென்மையாக மாறிவிடும்.
அதேபோல ஒரு கிண்ணத்தில் தயிர் சேர்த்து இரண்டு பப்பாளி துண்டுகளை அதில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு மாற்றிக் கொள்ளவும். இதை குளிப்பதற்கு முன்பு முகத்தில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால், முகம் எப்போதும் பொலிவுடன், வரட்சி இல்லாமல் இருக்கும்.