எந்த வயதிலும் தங்கள் தோற்றம் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பாதோர் குறைவு. திருமணமாகி ஏழெட்டு வருடங்களிலேயே தோற்றம் பற்றி கவலைப் படாதோரும் உண்டு. ஆனால் சிறிது முயற்சித்தாலே எந்த வயதிலும் அழகாக தோற்றமளிக்க முடியும். எளிமையான முறைகளில் தங்களை அழகுபடுத்திக் கொள்வது எப்படி என்று இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக நாற்பது தொடங்கினாலே லேசாக நரை எட்டிப் பார்ப்பதும், தோலில் சுருக்கம் விழ ஆரம்பிப்பதும் இயல்பு. நரைத்த கூந்தலுக்கு இயற்கையாக மருதாணி, அவுரிப் பொடி கொண்டு கேசத்தை கருப்பாக முடியும்.
கைகளில் சுருக்கம் விழாமல் இருக்க, கைகளைக் கழுவியதும் மென்மையான துண்டினால் துடைத்து விடவேண்டும். அவ்வப்போது கிளிசரின் மற்றும் சர்க்கரை கலந்த கலவையில் கைகளை சிறிது நேரம் வைத்து எடுக்க வேண்டும். இதனால் கைகளும், விரல்களும் மிருதுவாக மாறும்.
உலர்ந்த சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் போட்டு சருமத்தை அழகாக்குங்கள். அப்படியே விட்டால், அங்கங்கே பாளம் பாளமாக வெடித்தும் சாம்பல் பூத்தது போல வெளுத்தும் இருக்கும்.
சூரிய புள்ளிகள் மற்றும் கறைகளின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. எனவே, வெயிலில் வெளியே செல்லும் போதெல்லாம் சன்ஸ்கிரீனைப் பயன் படுத்துங்கள். சூரிய ஒளியில் இருந்து தப்பிக்க தயங்காமல் சன்கிளாஸ்கள் மற்றும் தொப்பிகளை அணியுங்கள்.
திருமணம், விழாக்களில் கலந்து கொள்ளும்போது லைட்டாக மேக்கப் போட்டு பளிச்சென இருங்கள். மாய்ஸ்சரைசர், ப்ரைமர் மற்றும் கன்சீலர் மூலம் தோற்றத்தை மெருகு படுத்தலாம்.ப்ரைமர் வயதான சருமத்தை மென்மையாக்குகிறது. கன்சீலர் மெல்லிய கோடுகளையும் சுருக்கங்களையும் மங்கலாக்குகிறது, அதனால் அவை குறைவாகவே தெரியும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோரையும் வசீகரிப்பீர்கள்.
உங்கள் தோற்றம் எப்படி இருப்பினும் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள் கடவுள் தந்த இந்த உடலை நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் எப்போதும் தனித்தன்மையானவர் என்பதை மறவாதீர்கள். அழகாக உடை உடுத்திக் கொள்ளும்போது இன்னும் உங்கள் தோற்றம் வசீகரமாக இருக்கும்.
மனதில் எப்போதும் நல்ல எண்ணங்களை எண்ணுங்கள். அகத்தின் அழகு முகத்தில் என்று சொல்லுவது 100% உண்மை. மனதில் பொறாமை இல்லாமல் யார் மேலும் வஞ்சம் கோபம் இல்லாமல் இருந்தால் அது உடலிலும் முகத்திலும் பிரதிபலிக்கும். உள் அழகு வெளி அழகை மெருகேற்றும்.
குடும்பத்தை கவனிப்பதோடு உங்களையும் சரியாக கவனித்துக் கொள்ளுங்கள். தினமும் அரை மணி நேரமாவது ஒதுக்கி உடற்பயிற்சி நடைப்பயிற்சி செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். சத்தான உணவுகள் உண்டு பழங்கள் காய்கறிகள் சேர்த்து உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.
திறமைக்கு வயது ஒரு தடையே அல்ல. குடும்ப சூழ்நிலையால் திறமைகளை தன்னுடைய பூட்டி வைத்திருப்போர் 50 வயதுக்கு மேலும் அவற்றை வெளிப்படுத்தி சமூகத்தில் பிரகாசிக்க முடியும்.