வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து முகத்தை அழகாக்கும் பட்டியலில் மிகவும் முக்கியமான ஒன்றைதான் இப்போது பார்க்கவுள்ளோம்.
பால் நமது உடலுக்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அதிக நன்மையை தரும். பல பேர் பாலாடையை முகத்தில் தடவி சில நிமிடங்களுக்கு பின்னர் முகத்தை கழுவினால், அவ்வளவு பொலிவு கிடைக்கும். அந்தவகையில் காய்ச்சாத பாலை முகச்சருமத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.
கடலைமாவுடன்:
2 டீஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் கடலைமாவு சேர்த்து நன்றாக கலந்து ஒரு பேக்கை தயார் செய்துக்கொள்ளுங்கள். இந்த பேக்கை முகத்தில் போட்டு சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி, மாய்ஸ்சரைஸர் தடவுங்கள். இதனை வாரம் ஒருமுறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் இருக்கும் எண்ணெய்ப்பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பிரகாசமளிக்கும்.
கற்றாழையுடன்:
2 டீஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்தில் பயன்படுத்துங்கள். 20 நிமிடங்கள் ஊறவைத்து கழுவினால், முகத்தின் நிறம் கூடும். அதேபோல் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் குறையும்.
பப்பாளியுடன்:
2 டீஸ்பூன் பாலுடன் 2 டீஸ்பூன் பப்பாளி விழுது சேர்த்து முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் ஊற வைத்து நன்றாக கழுவுங்கள். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்தால், நல்ல ரிசல்ட் கிடைக்கும். பப்பாளியில் பப்பைன் என்ற என்சைம் இருக்கிறது, இது சருமத்தை மென்மையாகவும் நிறத்தைக் கூட்டியும் தரும்.
மஞ்சளுடன்:
2 ஸ்பூன் பாலுடன் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் இருக்கும் கறைகள் மற்றும் கரும்புள்ளிகளைக் குறைப்பதற்கான சிறந்த தீர்வாகும். வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.
தேனுடன்:
2 ஸ்பூன் பாலுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவலாம். இந்த பேக் வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு மிகவும் நல்ல பலன்களை கொடுக்க கூடியது. இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைத்து, வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து, பளபளப்பான சரும பொலிவை தருகிறது. வாரம் ஒரு முறை இதனை முகத்தில் தடவி 15-20 நிமிடங்கள் விட்டு, பின் குளிர்ந்த நீரால் கழுவவும். நீங்கள் பயன்படுத்தும் தேன் சுத்தமானது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.