

டைனோசர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் நிலத்தில் எப்படி ராட்சச மிருகங்கள் வாழ்ந்தனவோ, அதே போல கடலுக்கு அடியிலும் பல விசித்திரமான உயிரினங்கள் அரசாட்சி செய்துள்ளன. இதுவரை கடலில் முதுகெலும்பு உள்ள பெரிய விலங்குகள் மட்டுமே ராஜாவாக இருந்தன என்றுதான் அறிவியலாளர்கள் நம்பி வந்தார்கள்.
ஆனால், அந்த நம்பிக்கையை எல்லாம் தவிடுபொடியாக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான கண்டுபிடிப்பு தற்போது நிகழ்ந்துள்ளது. கடலின் ஆழத்தில் சுமார் 62 அடி நீளத்தில் ஒரு ராட்சச ஆக்டோபஸ் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிராக்கன் (Kraken) என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் கடல் அரக்கனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தப் பகுதியில் பார்க்கலாம்.
ஆராய்ச்சியாளர்களை அதிரவைத்த தடயங்கள்!
ஜப்பான் மற்றும் வான்கூவர் தீவு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது. அங்கு கண்டுபிடிக்கப்பட்ட இருபத்தி ஏழு பழமையான தாடை எலும்புகளை வைத்து ஆராய்ச்சி செய்தபோதுதான் இந்த ராட்சச ஆக்டோபஸின் ரகசியம் உலகிற்கு தெரியவந்தது. பொதுவாக ஆக்டோபஸ்களுக்கு ஓடுகள் போன்ற கடினமான உடல் அமைப்பு கிடையாது.
அதனால் அவற்றின் படிமங்களை மண்ணுக்கு அடியில் இருந்து முழுமையாகக் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான ஒரு காரியமாகும். ஆனால் அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் அவற்றின் தாடைகளை மட்டும் வைத்து அவற்றின் முழு உருவத்தையும் கணக்கிட்டுள்ளார்கள். இவை பல கோடி ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
பயங்கர வேட்டைத்திறன்!
இந்த ராட்சச ஆக்டோபஸ்கள் வெறும் உருவத்தில் மட்டும் பெரியவை கிடையாது. மூளை வளர்ச்சியிலும் இவை மிகவும் கெட்டிக்காரர்களாக இருந்துள்ளன. கிடைத்த தாடை எலும்புகளில் ஒரு பக்கம் மட்டும் அதிக அளவில் தேய்மானம் அடைந்துள்ளது. கடினமான ஓடு கொண்ட நண்டுகள் மற்றும் கடல் உயிரினங்களை வேட்டையாடி உண்பதற்காக இவை தங்களின் தாடையின் ஒரு பகுதியை மட்டும் மிகவும் சாதுரியமாகப் பயன்படுத்தியுள்ளன.
மனிதர்களைப் போலவே கையைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ள இந்த சிறப்பம்சம் அவற்றின் அதீத புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. தங்களின் இந்த அதிரடியான திறமையின் மூலம் கடலின் உணவுச் சங்கிலியில் இவை மிக உயர்ந்த இடத்தில் இருந்துள்ளன.
விவாதங்கள்!
இந்த புதிய கண்டுபிடிப்பு அறிவியல் உலகில் பல புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. இந்த ஆக்டோபஸ் சுமார் பத்தொன்பது மீட்டர் வரை வளர்ந்திருக்கும் என ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். ஆனால், மற்ற சில வல்லுநர்கள் இது சற்று மிகைப்படுத்தப்பட்ட அளவாக இருக்கலாம் என்றும், இருந்தாலும் இது ஒரு மிகப்பெரிய வேட்டைக்கார விலங்கு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். எப்படிப் பார்த்தாலும், இதுவரைக் கண்டுபிடிக்கப்பட்ட முதுகெலும்பற்ற உயிரினங்களில் இதுதான் மிகப் பெரியது என்ற பெருமையை இந்த ஆக்டோபஸ் தட்டிச் செல்கிறது.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு உயிரினம், இத்தனை ஆண்டுகள் கழித்து இன்று நமக்குத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வது உண்மையிலேயே பிரம்மிப்பான ஒரு விஷயம். மனிதர்களின் கற்பனையில் மட்டுமே வாழ்ந்து வந்த ராட்சச ஆக்டோபஸ்கள், ஒரு காலத்தில் நிஜமாகவே கடலை ஆட்சி செய்துள்ளன என்ற செய்தி நமக்கு இயற்கையின் பிரம்மாண்டத்தை நமக்கு உணர்த்துகிறது.