சாகுபடி செலவை குறைக்க புழுதி மணல் நேரடி நெல் விதைப்பு என்ற புதிய நடைமுறையை மதுரை மாவட்ட விவசாயிகள் பின்பற்றி வருகின்றனர்.
விவசாயம் காலநிலை மாற்றம், தண்ணீர் தட்டுப்பாடு, அதிக வெப்பம், ஆட்கள் பற்றாக்குறை, விலங்குகளால் ஏற்படும் சேதாரம் என்று பல்வேறு வகையில் நஷ்டத்தை சந்தித்து வருகின்றது. இதனால் விவசாயத்திற்கு ஆகும் செலவுகளை குறைக்க மாற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க விவசாயிகள் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டம் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு கடந்த ஆண்டு புழுதியில் நேரடி நெல் விதைப்பு என்ற புதிய நடைமுறையை மேற்கொண்டு 1500 ஏக்கர் பரப்பளவில் கூடுதலான மகசூலை பெற்று கூடுதலான வருமானம் ஈட்டி உள்ளனர். இதை அடுத்து நடப்பு ஆண்டும் கூடுதல் பரப்பளவில் இதே நடைமுறையில் நடவு பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
உழுதநிலத்தில் புழுதி மணலில் நேரடி நெல் விதைப்பு முறையை கையாளுகின்றனர். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள தனி நெல் விதைப்பு கருவியை டிராக்டர் அல்லது ட்ரம்ஸிட்டர் இயந்திரங்களில் பொருத்தி நிலத்தில் நெல்மணிகளை விதைக்கின்றனர். இதனால் போதிய இடைவெளியில் சீரான அளவில் நெல்கள் விதைக்கப்படுகின்றன. இதே முறையை பின்பற்றி நாற்று நடவு செய்யும் விவசாயிகள் சேற்று நிலத்தில் நேரடி நெல் விதைப்பை மேற்கொள்ளலாம். இதனால் நாற்று நடுவது, நாற்றைப் பறிப்பது, நடவுக்கென்று மேற்கொள்ளும் செலவுகள் குறையும்.
இதன் மூலம் ஏக்கருக்கு 6000 ரூபாய் மிச்சமாகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த நேரடி நெல் விதைப்பின் மூலமாக கூடுதல் மகசூல் கிடைப்பதாகவும், குறைந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருப்பதாகவும் மேலவளவு உழவர் உற்பத்தியாளர் குழு தெரிவித்து இருக்கிறது.