
மழை என்றாலே அனைவருக்கும் தோன்றும் விஷயங்கள் ஒன்று குடிநீர். மற்றொன்று வெள்ளம். அப்படிப்பட்ட நீரே நச்சாக மாறினால் என்ன ஆகும்?
அமில மழை (Acid rain):
அமில மழை என்பது உலகம் முழுவதும் அமைதியாக அழிவை ஏற்படுத்தி வரும் ஒரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாகும். தொழில்துறையின் நடவடிக்கைகள் (industrial), வாகன புகைகள் (vehicle emissions) மற்றும் எரியும் புதைபடிவ (fossil fuels) எரிபொருட்களில் இருந்து வெளியாகும் சல்பர் டை ஆக்சைடு(SO₂), நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOₓ) போன்ற வாயுக்கள் வளிமண்டலத்தில் (atmosphere) உள்ள ஈரப்பதத்துடன் கலக்கும்போது இது நிகழ்கிறது.
இந்த வாயுக்கள் வேதியியல் எதிர்வினைகளுக்கு (chemical reactions) உட்பட்டு சல்பூரிக் (sulfuric), நைட்ரிக் (nitric) அமிலங்களை உருவாக்குகின்றன. பின்னர் அவை மழைப்பொழிவு மூலம் பூமியில் விழுகின்றன. வழக்கமான மழையைப்போல் இல்லாமல் அமில மழை குறைந்த pHஐ கொண்டுள்ளது. இதனால் சுற்றுச்சூழல் அமைப்புகள், உள்கட்டமைப்பு (infrastructure) மற்றும் மனித ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கின்றன.
அமில மழையின் தீமைகள்:
அமில மழை அமைதியாக அழிக்கக்கூடிய தன்மைகொண்டது. கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், பாலங்களைச் சேதப்படுத்தும். குறிப்பாக சுண்ணாம்புக்கல் (limestone), பளிங்குக் கல்லால் (marble) செய்யப்பட்ட கட்டடங்களை அரிக்கிறது.
மண் ஊட்டச்சத்துக்களைக் குறைத்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்தும் (infertile).
நீர்நிலைகள் அமிலத்தன்மை கொண்டவையாக மாறி நீர்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.
காட்டில் உள்ள மரங்கள் பாதிக்கப்பட்டு அதன் வளர்ச்சிகள் தடைபடக்கூடும்.
மனிதர்களுக்குச் சுவாசப் பிரச்னைகள், சரும எரிச்சல் போன்றவை வரக்கூடும்.
உலகளாவிய தாக்கங்கள்:
தொழில்மயமாக்கப்பட்ட பகுதிகளில் (industrialized regions) அமில மழை தொடர்ந்து ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. கிழக்கு ஐரோப்பா, சீனா, வடகிழக்கு அமெரிக்கா போன்ற பகுதிகள் அடிக்கடி அமில மழையை எதிர்கொள்கின்றன.
இந்தியாவில் செம்பூர் (Chembur), கொலாபா(Colaba), டெல்லி மற்றும் சிங்ரவுலி (Singrauli) போன்ற இடங்களில் அமில மழை பதிவாகியுள்ளது. அமில மழை உருவாகும் அளவுகளைக் கட்டுப்படுத்த முடியாத பட்சத்தில் விரைவில் பல பகுதிகளில் ஊடுருவி, கடும் சுற்றுச்சூழல் சவாலை எதிர்கொள்ள வைத்துவிடும்.
தடுப்பு நடவடிக்கைகள்:
இப்போதைய நவீன காலகட்டத்தில் அமில மழையை முற்றிலுமாக நிறுத்தமுடியாது என்றாலும், அதன் தாக்கத்தை ஓரளவு குறைக்கமுடியும். தொழில்துறை உமிழ்வை குறைப்பது (industrial emissions), தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவது (cleaner energy sources), கடுமையான சுற்றுச்சூழல் விதிமுறைகளை அமல்படுத்துவது போன்றவை இதன் தாக்கத்தைக் குறைக்க உதவும்.
எப்போதும் சொல்வதுபோல் பொது போக்குவரத்தைப் பயன்படுத்தி அதனால் தேவையற்ற ஆற்றல் வீணாவதை சேமிப்பது (conserving energy), முடிந்தவரை பசுமை முயற்சிகளை சார்ந்திருப்பது (green initiatives) மூலம் ஒவ்வொரு நபரும் இந்த அமில மழையைத் தடுப்பதில் பங்களிக்க முடியும். மரங்களை நட்டு மண் ஆரோக்கியத்தைப் பராமரித்தால் மண்ணில் படர்ந்துள்ள ஆபத்தான அமிலப் படிவுகளை முற்றிலுமாக நடுநிலையாக்க முடியும் (neutralizing acidic deposits).