

தேனீக்கள் எவ்வாறு நடனம் மூலம் உணவு இருக்கும் இடத்தைத் தெரிவிக்கின்றன? மின்மினிப் பூச்சிகள் எப்படி ஒளியை வீசுகின்றன? விலங்குகளின் வியக்க வைக்கும் செய்தி தொடர்பை அறிவோம்.
மனிதனின் செய்தி தொடர்புக்கு மொழி இருக்கிறது. தொலைபேசி, வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம் , நாளிதழ்கள், பத்திரிக்கை, நூல்கள் என்று பல்வேறு சாதனங்கள் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கின்றன. தேனீக்கள், மின்மினி பூச்சிகள் போன்றவையும் தன் இனத்திற்குள் எப்படி தொடர்பு கொள்கின்றன என்பதை இப்பதிவில் காண்போம்.
தேனீக்களின் நடனம் உணர்த்தும் செய்தி தொடர்பு ரகசியங்கள்:
தேனீக்கள் உடல் அசைவுகளின் மூலம் செய்தி பரிமாற்றம் செய்கின்றன. அதைத்தான் நாம் தேனீக்களின் நடனம் என்று கூறுகின்றோம். தேனீக்கள் தன் இனத்தை சேர்ந்த மற்ற தேனீக்களுடன் இவ்வகை நடனத்தின் மூலம் தான் செய்திகளைப் பரப்பி கொள்கின்றன. வேலைக்காரத் தேனீக்கள் மலர் தோட்டத்திற்குச் சென்று தேனை பருகியபின் தன் கூட்டருகே வருகின்றன. பின் இவ்வகை நடனம் புரிந்து மற்ற வேலைக்காரத் தேனீக்களுக்கு உணவு இருக்கும் இடம், தொலைவு, திசை முதலியவற்றை தெரிவிக்கின்றன.
தேனீக்களைப் பற்றி பல ஆண்டுகள் ஆய்வு நடத்திய ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த உயிரியலாளர் / விஞ்ஞானி கார்ல் வான் பிரிச் (Karl von Frisch) என்பவர் தேனீக்கள் நடனம் பற்றி கூறுவது என்னவென்றால்...
குறிப்பாக தேனீக்கள் இரு விதமான நடனம் புரிகின்றன. அந்த நடனத்தின் தன்மைக்கு தகுந்தவாறு செய்திகளை மற்ற தேனீக்கள் புரிந்து கொண்டு செயல்படுகின்றன. இருவகை நடனத்தில் ஒன்றாகிய வட்ட நடனம் என்ற நடனத்தை ஆடினால், கூட்டில் இருந்து உணவு கிடைக்கும் இடம் 300 அடி தூரத்திற்குள் இருப்பதாக பொருள் கொள்கிறது. உணவு கிடைக்கும் இடம் 300 அடிக்கு அப்பால் இருந்தால் வாலை ஆட்டி நடனம் புரிவதில் மற்றொரு வகை நடனத்தையும் நிகழ்த்துகிறது. அதிலிருந்து அவைகளுக்கு உணவு கிடைக்கும் இடத்தின் தொலைவு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. உணவு இருக்கும் இடத்தின் தொலைவை பொறுத்து நடனத்தில் தெளிவு, விரைவு மாறுபடுகின்றது. இது உணவு இருக்கும் திசையையும் காட்டும் என்கிறார் விஞ்ஞானி.
மின்மினிப் பூச்சிகளின் ஒளி வழி செய்தி தொடர்பு:
மின்மினி பூச்சிகளை கவனித்தால் அதன் வயிற்றுப் பகுதியில் இருந்து இரவில் ஒளியை வெளிப்படுத்துவதைக் காணலாம். பெரும்பாலும் இனச்சேர்க்கை காலங்களில் ஆண் மின்மினிப் பூச்சி இனக்கவர்ச்சிக்காக இந்த ஒளியை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர். பெண் மின்மினிப் பூச்சியானது ஒரு குறிப்பிட்ட முறையில் ஒளி சமிக்ஞை காட்டுகிறது. அதனை அறிந்து ஆண் பூச்சி பெண் பூச்சியிடம் செல்கிறது.
சில நேரங்களில் அதன் வயிற்றுப் பகுதியில் ஒளிரும் ஒளியானது எதிரியைப் பயமுறுத்தி, அதனிடமிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த மின்மினி ஒளிப் பூச்சிகள் உதவுவதாக கூறுகின்றனர். மின்மினி பூச்சியின் வயிற்றுப் பகுதியில் ஒளி சிந்தும் செல்கள் இருப்பதாகவும், அது ஒளி தோன்றுவதற்கு 'லூசி பெரின்' எனப்படும் ஒரு வேதி பொருளே காரணமாக இருக்கிறது என்றும் கூறுகின்றனர். சில வகை நத்தையும், ஆழ்கடல் மீன்களுக்கு ஒளி சிந்துகிறதாம். இருள் சூழ்ந்த ஆழ் கடலில் உணவு தேடுவதற்கும், வேறு வகையில் செய்தி தொடர்பு கொள்வதற்கும் இவ்வொளி பயன்படுவதாக கூறுகிறார்கள்.
பெரும்பாலும் வண்டினம் தான் ஒளியுமிழ்ந்து செய்தி தொடர்பு கொள்ளும் என்று படித்தும் பார்த்துமிருக்கிறோம். அவை இரவில் இரைதேடும் பூச்சிகள் என்பதால், ஒளிவழிச் செய்தி தொடர்பு கொள்கின்றன என்பது நாம் அறிந்தது. அறியாத விஷயம் என்றால் சில நத்தைகளும் ஒளி உமிழும் என்பதைத்தான்.
இப்படி மனிதன் நீங்கிய பிற உயிரினங்களை பொறுத்தவரை உயிரினம் அழியாமல் நிலைத்து வாழ உணவு, பாதுகாப்பு ஆகிய இரண்டும் அடிப்படைத் தேவைகள். அந்த அடிப்படை தேவைகளை நிறைவு செய்து கொள்ள விலங்குகளும் , பறவைகளும், தாவரங்களும் மற்ற உயிரினங்களும் இவை உடனடி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே செய்தி பரிமாற்றம் செய்து கொள்கின்றன. எனவே இவற்றின் வாழ்விலே இடைவிடாத செய்தி தொடர்பு நடந்து வண்ணமாகவே உள்ளது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
இயற்கையின் மௌன மொழியைப் புரிந்துகொள்வதன் மூலம், விலங்குகள் மற்றும் பூச்சிகளின் வியக்கத்தக்க உயிர்வாழ்வு உத்திகளை அறிந்துகொண்டு, நம்மைச் சுற்றியுள்ள பல்லுயிர் பெருக்கத்தின் முக்கியத்துவத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும்.