டைனோசர் காலத்து ரகசியம்: நம் வீட்டு எறும்புகளுக்கு பின்னால் இருக்கும் வியப்பூட்டும் உண்மை!

ant evolution secrets
ant evolution secrets
Updated on

ம் காலடியில் நகரும் மிகச்சிறிய உயிரினமான எறும்பு, பூமிப் பந்தின் மிக உன்னதமான சுற்றுச்சூழல் காவலன் ஆகும். மனிதர்களுக்கு முன்பே திட்டமிட்ட நகர அமைப்பையும், கடுமையான ராணுவக் கட்டுப் பாட்டையும், வியத்தகு சமூகக் கட்டமைப்பையும் தங்களின் நிலத்தடி பேரரசில் எறும்புகள் உருவாக்கி வாழ்கின்றன. மலேசியாவின் பினாங்கில் உள்ள சுற்றுச்சூழல் கண்காட்சிகள் மற்றும் பூச்சியியல் மையங்களில் எறும்புகளின் இந்த மூன்று முக்கிய அம்சங்களைப் பற்றி விளக்கப்படும் அறிவியல் பூர்வமான உண்மைகள் இதோ:

எறும்புகளின் பரிணாம வளர்ச்சி: எறும்புகள் பூமியில் மனிதர்களை விடவும் மிக நீண்ட காலமாக வாழ்ந்து வரும் பழமையான உயிரினங்கள் ஆகும். எறும்புகள் சுமார் 140 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு (மத்திய கிரிடேசியஸ் காலத்தில்) பூமியில் டைனோசர்கள் பூமியில் வாழ்ந்த காலத்திலேயே எறும்புகளும் வாழ்ந்துள்ளன.

அறிவியல் பூர்வமாக எறும்புகள், தேனீக்கள் மற்றும் குளவிகளின் (Wasps) குடும்பத்தைச் சேர்ந்தவை. வேட்டையாடும் குணம் கொண்ட ஒரு வகையான குளவி இனத்திலிருந்துதான் எறும்புகள் காலப்போக்கில் இறக்கைகளை இழந்து, தரையில் வாழும் எறும்புகளாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தன. இன்று உலகெங்கும் சுமார் 12,000-க்கும் மேற்பட்ட எறும்பு இனங்கள் உள்ளன.

சமூகக் கட்டமைப்பு: எறும்புகள் ஒரு சிறந்த கூட்டுக்குடும்ப அல்லது ராணுவக் கட்டுப்பாட்டுடன் வாழும் “சமூகப் பூச்சிகள்” ஆகும். அவற்றின் காலனியில் கடுமையான உழைப்புப் பிரிவினை உள்ளது:

ராணி எறும்பு: ஒரு கூட்டிற்கு ஒரே ஒரு ராணி எறும்புதான் (சில இனங்களில் ஒன்றுக்கு மேல்) தலைவியாக இருக்கும். இதன் ஒரே வேலை முட்டையிட்டுத் தன் இனத்தைப் பெருக்குவது மட்டும்தான். இவை மற்ற எறும்புகளை விட அளவில் பெரியவை மற்றும் பல ஆண்டுகள் உயிர் வாழக்கூடியவை.

வேலைக்கார எறும்புகள் அனைத்தும் இறக்கைகள் இல்லாத பெண் எறும்புகள் ஆகும். ஆனால், இவற்றால் முட்டையிட முடியாது. உணவைத் தேடுவது, கூட்டைக் கட்டுவது, ராணி எறும்பையும் அதன் முட்டைகளையும் பாதுகாப்பது போன்ற வேலைகளை செய்கின்றன.

ராணுவ எறும்புகள்: வேலைக்கார எறும்புகளிலேயே பெரிய தாடைகளைக் கொண்ட எறும்புகள் ‘போர்வீரர்களாக’ச் செயல்படுகின்றன. இவை தன் கூட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கின்றன.

ஆண் எறும்புகள் இறக்கைகளுடன் இருக்கும். இவற்றுக்கு வேலை எதுவும் கிடையாது. இனப்பெருக்க காலத்தில் புதிய ராணி எறும்புடன் இணை சேருவது மட்டும்தான் இவற்றின் வேலை. அதன் பிறகு இவை இறந்துவிடும்.

அதிசயத் தகவல்: எறும்புகளுக்குப் பேசும் திறன் கிடையாது. அவை ‘பெரோமோன்’ (Pheromones) எனப்படும் ஒருவித வேதிப்பொருளைத் தரையில் சுரந்து, அதன் வாசனையைத் தன் உணர்விகளால் (Antennae) தொட்டு உணர்ந்துதான் தகவல்களைப் பரிமாறிக்கொள்கின்றன. ஒரு எறும்பு உணவைக் கண்டறிந்தால், அந்தப் பாதையில் இந்த வேதிப்பொருளைத் தெளித்துக்கொண்டே வரும், மற்ற எறும்புகள் அந்த வாசனையைப் பின்பற்றி வரிசையாகச் செல்லும்.

இதையும் படியுங்கள்:
குட்டி போடாது.. முட்டையிட்டுப் பால் கொடுக்கும்! அறிவியலையே வியக்க வைக்கும் அபூர்வ உயிர் எது?
ant evolution secrets

பூமிக்கு அவை செய்யும் நன்மைகள்: இயற்கையின் மிகச்சிறந்த துப்புரவாளர்கள் மற்றும் விவசாயிகளாக எறும்புகள் செயல்படுகின்றன:

மண்ணை வளப்படுத்துதல்: மண்புழுக்களைப் போலவே எறும்புகளும் மண்ணைத் தோண்டி நிலத்தடியில் துளைகளை ஏற்படுத்துகின்றன. இதனால் மண்ணுக்குள் காற்று (ஆக்ஸிஜன்) மற்றும் நீர் எளிதாகச் சென்று சேர்கிறது. இது தாவரங்களின் வேர்கள் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

இயற்கை உரம் மற்றும் மறுசுழற்சி: இறந்த பூச்சிகள், அழுகிய இலைகள், விலங்குகளின் கழிவுகள் போன்றவற்றை எறும்புகள் தங்களின் கூட்டுக்கு எடுத்துச் சென்று உண்பதால், அவை விரைவாக மக்கி இயற்கை உரமாக மாறுகின்றன. காடுகளைச் சுத்தமாக வைப்பதில் இவற்றுக்கு முக்கியப் பங்குண்டு.

விதை பரவல்: பல தாவரங்களின் விதைகளை எறும்புகள் தங்களின் நிலத்தடி கூடுகளுக்கு எடுத்துச் செல்கின்றன. அதில் சில விதைகள் மண்ணுக்குள் தங்கிவிடுவதால், அவை புதிய செடிகளாக முளைக்கின்றன.

மனிதர்கள் எப்படி நகரங்களை உருவாக்கி வாழ்கிறார்களோ, அதேபோல நிலத்தடியில் அதிநவீன தொழில்நுட்ப நகரங்களை அமைத்து வாழும் ஒரு உன்னத உயிரினம்தான் எறும்பு.

logo
Kalki Online
kalkionline.com