

இயற்கையை ரசிப்பது ஒரு சுகமான அனுபவம். பூக்கள், பறவைகள், விலங்குகள் என எங்கு பார்த்தாலும் வண்ணங்கள் நிறைந்திருக்கும். சிவப்பான ரோஜா, பச்சை கிளி, மஞ்சள் நிறப் புலி, பழுப்பு நிறக் கரடி எனப் பல வண்ணங்களை நாம் எளிதாகப் பார்க்கிறோம். ஆனால் நீங்கள் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புரியும்.
சிவப்பு, பச்சை, மஞ்சள், பழுப்பு நிறங்கள் எங்கும் இருக்கும். ஆனால் நீல நிறம் மட்டும் மிக அரிதாகவே தென்படும். வானமும் கடலும் நீலமாக இருந்தாலும், நிலத்தில் வாழும் உயிரினங்களில் இந்த நிறம் ஏன் குறைவாக உள்ளது என்பது ஒரு ஆச்சரியமான புதிர். இதற்கான விடை உயிரியலில் இல்லை, அது இயற்பியலில் ஒளிந்திருக்கிறது.
ரசாயனம்!
பொதுவாக ஒரு விலங்கின் தோல் அல்லது ரோமத்தின் நிறம், அது உண்ணும் உணவிலிருந்தோ அல்லது அதன் உடல் உற்பத்தி செய்யும் ரசாயனத்திலிருந்தோ வருகிறது. இதற்கு 'பிக்மென்ட்' அல்லது நிறமிகள் என்று பெயர். உதாரணமாக, ஃபிளமிங்கோ பறவைகள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருப்பதற்குக் காரணம், அவை உண்ணும் இறால் வகைகளில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற நிறமிதான். ஆனால், இயற்கையில் நீல நிறத்தை உருவாக்கக்கூடிய நிறமிகள் விலங்குகளுக்கு எளிதில் கிடைப்பதில்லை. பெரும்பாலான விலங்குகளால் நீல நிறத்தை ரசாயன ரீதியாக உற்பத்தி செய்ய முடிவதில்லை.
இயற்கையின் அதிசயம்!
ரசாயனப் பொருட்களை வைத்து நீல நிறத்தைக் கொண்டு வர முடியாத போது, இயற்கை ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்தது. அதுதான் Structural Color. நீங்கள் பார்க்கும் நீல நிறப் பறவைகளோ, மயில்களோ அல்லது பட்டாம்பூச்சிகளோ உண்மையில் நீல நிறம் கொண்டவை அல்ல. இது கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. அவற்றின் இறகுகள் அல்லது செதில்களின் நுண்ணிய வடிவமைப்பு ஒளியை வித்தியாசமாகப் பிரதிபலிக்கிறது.
ஒளிச் சிதறல்!
சூரிய ஒளி, ஏழு வண்ணங்களின் கலவை என்பது நமக்குத் தெரியும். ஒரு நீல நிறப் பறவையின் இறகின் மீது ஒளி படும்போது, அதன் நுண்ணிய வடிவமைப்பு சிவப்பு, மஞ்சள் போன்ற மற்ற நிறங்களை உறிஞ்சிக் கொள்கிறது. ஆனால் நீல நிற அலைவரிசையை மட்டும் நம் கண்களுக்குத் தெரியும் வகையில் சிதறடிக்கிறது. அதாவது, ஒரு Prism எப்படி ஒளியைப் பிரித்துக் காட்டுமோ, அதே வேலையைத் தான் இந்தப் பறவைகளின் இறகுகள் செய்கின்றன. எனவே நாம் பார்ப்பது உண்மையான நிறம் அல்ல, அது ஒளியின் ஜாலம்.
மயில் தோகை!
இதைப் புரிந்துகொள்ள ஒரு எளிய உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு மயிலின் அழகான நீல நிறத் தோகையை எடுத்து, அதை அம்மியில் வைத்து அரைத்தால் என்ன ஆகும். அது நீல நிறப் பொடியாக மாறாது. மாறாக அது சாம்பல் அல்லது பழுப்பு நிறமாக மாறிவிடும். காரணம், அந்த நீல நிறம் அந்தப் பொருளில் இல்லை, அதன் வடிவத்தில்தான் இருந்தது. அந்த வடிவம் சிதைந்ததும் நிறமும் போய்விடுகிறது. ஆனால் சிவப்பு அல்லது மஞ்சள் நிறப்பொருளை அரைத்தால், அந்த நிறம் அப்படியே இருக்கும்.
மிக அரிதாக 'ஆலிவ்விங்' (Olivewing) என்ற ஒரு வகை பட்டாம்பூச்சியில் மட்டுமே உண்மையான நீல நிறமி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. மற்றபடி தவளைகள், பாம்புகள், பறவைகள் என அனைத்தும் ஒளியை வைத்து வித்தை காட்டுகின்றன. பச்சைக் கிளிகள் கூடத் தங்களது மஞ்சள் நிறமியோடு, இந்த நீல நிறக் கட்டமைப்பைச் சேர்த்துத்தான் பச்சை நிறத்தைக் காட்டுகின்றன.
அரிதான பொருட்கள் எப்போதுமே அழகாகத்தான் இருக்கும் என்பதற்கு நீல நிறமே சான்று.