

வானியல் ரீதியாக சூரியன் / சந்திர கிரகணம் என்பது ஒரு இயற்கை நிகழ்வு. பூமி–சந்திரன்–சூரியன் ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படுகிறது.சந்திரன், சூரியன் மற்றும் பூமி இடையே வந்து சூரியனை மறைக்கும் போது ஏற்படும் நிகழ்வே சூரிய கிரகணம்.
அறிவியல் பார்வையில் இது ஒரு வானியல் நிகழ்வாகக் கருதப்பட்டாலும், நமது பாரம்பரிய ஜோதிடக் கணக்கீடுகளின்படி கிரகணங்கள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.
அந்த வகையில் உலகில் 2026ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணமாக (17 பிப்ரவரி 2026) இன்று நடைபெறுகிறது. இந்த கிரகணம் வளைய வடிவில் தோன்றும் 'அன்னுலர்' கிரகணமாக பார்க்கப்படுகிறது. இந்த கிரகண நிகழ்வில் சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன் சூரியனை மறைப்பதால் அந்நேரத்தில் சூரியன் ஒரு வளையல் போல் தோன்றுவதால் இது "ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படுகிறது.
இந்த கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.26 மணிக்கு தொடங்கும். மாலை 5.13 மணி முதல் 6.11 மணி வரை உச்ச கட்டத்தை அடையும். பின்னர் மாலை 7.57 மணிக்கு நிறைவடைவதாகவும் மொத்தம் 4 மணி 32 நிமிடங்கள் நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேர விவரங்கள் இந்திய ஸ்டாண்டர்ட் டைம் (IST) அடிப்படையில் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்புகள் கூறுகிறது.
பொதுவாக பஞ்சாங்கத்தின்படி சூதக் (Sutak)எனப்படும் தோஷ காலம் கிரகணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் தொடங்கும். இந்த நேரத்தில் பூமியின் வளிமண்டலம் மாசுபடுவதாக நம்பப்படுகிறது. இதுபோன்ற மாசுபாட்டால் ஏற்படும் தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளைத் தவிர்க்க கூடுதல் முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று ஜோதிடம் கூறும் காரணத்தினாலேயே அந்த நேரத்தில் எந்த சுப, காரியங்களையும் தவிர்க்கிறார்கள்.
அப்படி கூறப்படும் சாஸ்திர நம்பிக்கையின்படி சூரிய கிரகணத்திற்கு முன் 12 மணி நேரம் வரும் சூதக காலம் கிரகணம் தென்படும் இடங்களில் மட்டுமே கடைபிடிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இன்று வரப்போகும் இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பது முக்கியமானது. இது தென்னாப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் சில பகுதிகள் அண்டார்டிகாவில் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே இந்த கிரகணத்தை நேரடியாக காண முடியும் என கூறப்படுகிறது.
இந்தியாவில் தென்படாததால் பொதுமக்களுக்கு நேரடி கிரகண வாய்ப்பு இல்லை. எனவே கிரகணம் தெரியாத இந்தியாவில் சூதக காலம் நடைமுறையில் இருக்காது.இதனால் இந்தியர்கள் வழக்கமான தினசரி செயல்களை மேற்கொள்ளலாம். ஆன்மீக கட்டுப்பாடுகள் பற்றிய அவசியம் இல்லை என ஆன்மீக அறிஞர்கள் விளக்கம் தந்துள்ளனர். மேலும் “கிரகணம் பாதிப்பு” என்பது பெரும்பாலும் நம்பிக்கைகளில் இருந்து வந்த கருத்து.அறிவியல் ரீதியாக பார்த்தால்,
சூரிய கிரகணத்தை பாதுகாப்பு இல்லாமல் பார்ப்பது மட்டும் ஆபத்து.சந்திர கிரகணம் பாதுகாப்பாக பார்க்கலாம் என்கிறார்கள்.
இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்த 15 நாட்களுக்கு பிறகு நிகழும் முதல் சந்திர கிரகணம் மார்ச் 3, 2026 அன்று இந்தியாவில் முழுமையாகத் தெரியும் என வானியலாளர்கள் அறிவித்துள்ளனர். இது நாம் நேரடியாகப் பார்க்கக்கூடிய ஒரே கிரகணம். இந்த சந்திர கிரகணம் சுமார் 58 நிமிடங்கள் நீடிக்கும். இந்த நேரத்தில், சந்திரன் சிவப்பு நிறத்தில் தோன்றும் எனவும் 'இரத்த நிலவு' என்று அழைக்கப்படும். இந்த கிரகணம் வானியல் படி இது 2029 க்கு முந்தைய கடைசி முழு சந்திர கிரகணமாக கருதப்படுகிறது.இந்த கிரகணத்திற்கான சூதக்காலம் இந்தியாவில் கடைப்பிடிக்கப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆன்மீக வழியில் கூறப்படுகிறது.
பொதுவாக சிலர் ஜோதிட ரீதியாக ராசி/ஜாதகத்துக்கு பாதிப்பு எனவும் கர்ப்பிணிகள் வெளியே போகக்கூடாது, உணவு சாப்பிடக்கூடாது போன்ற நம்பிக்கைகளும் உள்ளன.ஆனால் இதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை.அறிவியல் பார்வையில்
கிரகணம் என்பது ஒரு சாதாரண வானியல் நிகழ்வு.பூமியின் ஈர்ப்பு விசை அல்லது கதிர்வீச்சு மாற்றம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு இல்லை என அறியப்படுகிறது.