சமீபத்தில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அழகான வண்ண வண்ண உயிரினங்கள் மிதப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் அவை அழகாக இருக்கிறதே என யாரும் தொட்டு விடாதீர்கள். அவை விஷத்தன்மை கொண்ட ப்ளூ டிராகன் என்ற உயிரினம். ஒருவேளை தெரியாமல் தொட்டு விட்டால் மிக மோசமான விளைவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாகவே சென்னை பெசன்ட் நகர் பீச்சில் ப்ளூ டிராகன் என்ற உயிரினம் அதிக அளவில் காணப்படுகிறது. ஆனால் இந்த உயிரினங்கள் பெரும்பாலும் நடுக்கடலில் மேற்பரப்பில் தான் அதிகம் காணப்படும். கடலில் ஏற்படும் சில மாற்றங்கள் அல்லது புயல் போன்ற காரணங்களால் அவை கரைக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. அப்படிதான் இந்த நீல டிராகன்கள் பெசன்ட் நகர் கடற்கரைக்கு வந்திருக்கும் என சொல்லப்படுகிறது.
இவை குறித்து உயிரியல் ஆர்வலர்கள் கூறுகையில், இந்த உயிரினம் குறைந்த அளவு விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும், சில சமயங்களில் அதிகப்படியான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். ஒருவேளை இவை குழந்தைகள் அல்லது வயதானவர்களை கொட்டினால் மிகப்பெரும் பிரச்சனை ஏற்படும் என எச்சரிக்கிறார்கள்.
கடலில் இருக்கும் பிற விஷத்தன்மை கொண்ட உயிரினங்களோடு ஒப்பிடுகையில் இவை ஆபத்தானது இல்லை என்றாலும், இவற்றிற்கும் நச்சுத்தன்மை உள்ளது என்பதால், பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்பவர்கள் சற்று ஜாக்கிரதையாக இருங்கள். பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது என நினைத்து கையில் எடுத்துப் பார்க்கவோ அல்லது தொடவோ முயற்சிக்க வேண்டாம். குறிப்பாக கடலில் குளிக்க செல்வர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
இவற்றால் பகல் நேர வெப்பத்தை தாங்க முடியாது என்பதால், விரைவில் கடற்கரையை விட்டு ஆழ்கடலுக்குச் சென்று விடும் எனக் கூறப்படுகிறது.