
வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) தாவர இனத்தை சேர்ந்தது, சீதளப்பழம் அல்லது சீதாப்பழம் (Annona Squamosa). எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய இச்சிறிய மரமே, அனோனா சாதி இனங்களில் உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. இலங்கைத் தமிழில் இப்பழத்தை அன்னமுன்னாப் பழம் என்கின்றனர்.
சீதாமரம் 25 °C (77 °F) முதல் 41 °C (106 °F) வரையிலான காலநிலையில் வளரக் கூடியது. பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே நன்றாக வளரும். இருப்பினும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 °F வெப்பத்தில் கூட உயிர் வாழும். இது கடல் மட்டத்திலிருந்து 2000 மீ (6600 அடி) உயரத்தில் வளரக்கூடியது.
சீதா மரம் நன்றாக காய்க்கக் கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களைத் தரக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்காது என்பதால், அவற்றைப் பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது, உண்ணத்தக்கவை. பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும் போது, அவற்றைப் பறித்து வைக்கலாம். சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும் போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம்.
சீதாப் பழங்கள் அதிகக் கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப் பேன்களை ஒழிக்கும் மருத்துவக் குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில் இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.
சீத்தாப்பழம் போலவே, முள் சீத்தாப்பழமும் இருக்கிறது. முள் சீத்தாவின் இலைச்சாறானது பாக்டீரியாக்களின் மூலம் பரவும் நிமோனியா, டையோரியா நோய்களையும் சிறுநீரக குழாய், குடல், சருமம் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்த உதவுகிறது.
சீத்தாப் பழம் சரி, அதென்ன முள்ளு சீத்தாப்பழம்?
முள்ளு சீதா (Graviola அல்லது Soursop) பசுமை மாறாத அகண்ட இலை, பூக்கும் சிறுமரமாகும். மெக்சிகோ, கூபா, நடு அமெரிக்கா, கரிபியன் மற்றும் வடதென் அமெரிக்கா, கொலொம்பியா, பிரேசில், பெரு, மற்றும் வெனிசுவேலா ஆகியவை இம்மரத்தின் தாயகமாகும். வெப்ப மண்டலப் பகுதியருகேயுள்ள சஹாரா நாடுகளும் இதன் தாயகமாகக் கருதப்படுகிறது. மேலும் தென்கிழக்காசிய நாடுகளிலும் தற்போது வளர்கிறது. இம்மரம் சீதாப்பழத்தின் குடும்பமான அனோனேசியே ஆகும். இதன் தாவரவியல் பெயர் அனோனா முயுரிகேட்டா (Annona muricata).
இதன் பழங்கள் செம்புற்றுப்பழம் மற்றும் அன்னாசிப் பழம் போன்றவற்றின் புளிப்புத் தன்மை சேர்ந்த சுவையுடையது. இப்பழமானது புளிப்பு மற்றும் சற்று இனிப்பு கலந்த சுவையும் இருப்பதால் புளிப்புபழம் என்று அழைக்கப்படுகிறது. பசுமை மாறா மரம் மிதமான தட்பவெப்ப நிலைகளிலும் வறண்ட சூழ்நிலையிலும் நன்கு வளரும். பனியைத் தாங்கி வளராது. ஒரு பழமானது தோராயமாக 4 கிலோ எடை கொண்டது.