வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் ஆழ்கடல்!

வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் ஆழ்கடல்!
Published on

நிலப்பரப்பில் வெப்பக் காற்று வீசுவது போலவே, கடலிலும் வெப்ப அலைகள் வீசும். இது எப்போதாவதுதான் கடலில் நிகழும். ஆனால், சமீபத்திய ஆய்வுகளின்படி இத்தகைய வெப்ப அலைகள் உடனுக்குடன் நடக்கும் நிகழ்வாக மாறி வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வெப்ப அலைகளால் ஆழ்கடல் சூழ்நிலைகள் வெகுவாக மாறி வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், வடக்கு பசிபிக் மற்றும் தெற்கு ஆஸ்திரேலிய பகுதிகளில் அமைந்திருக்கும் பவளப்பாறைகளை கடல் வெப்ப அலைகள் அச்சுறுத்தி வருவதாகவும் அந்த ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு குறித்து இதில் ஈடுபட்டுள்ள எலிசா என்ற விஞ்ஞானி கூறும்போது, "கடலின் மேற்பரப்புக்கு கீழே வெப்ப அலைகளால் ஏற்படும் தாக்கம் குறித்த ஆய்வு செய்வது இது முதல் முயற்சியாகும். இதற்காக கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 2000 மீட்டர் ஆழம் வரை சேகரிக்கப்பட்ட தகவல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அத்துடன், 1993ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை சேகரிக்கப்பட்ட கடல் வெப்ப அலைகள் குறித்த தகவலையும் இந்த ஆய்வில் உபயோகித்தோம். அதன்படி கடலின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 மீட்டர் ஆழம் வரை வெப்ப அலைகளின் தாக்கம் அதிகமாக இருப்பது எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இது நிலப்பரப்பில் உள்ள வெப்ப அலை தாக்கத்தை விட 19 சதவீதம் அதிகமாகும்.

ஒரு வெப்ப அலை நிகழ்வு ஏற்பட்ட பிறகு, கடலின் மேற்பரப்பின் வெப்பம் இயல்பு நிலைக்குத் திரும்பினாலும், வெப்ப அலையின் தாக்கத்தினால் அதிகரித்த வெப்பத்தை ஆழ்கடல் இரண்டு ஆண்டுகள் வரை தக்க வைத்திருப்பதாக இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆழ்கடலில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு புலம் பெயர முடியாத பவளப்பாறை உள்ளிட்ட உயிரினங்கள் இந்த வெப்ப அலையின் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. 

இத்தகைய கடல் வெப்ப அலை நிகழ்வு அதிகரித்திருப்பதற்குக் காரணம், காலநிலை மாற்றமே என பல சமூக ஆர்வலர்கள் வாதிடுகின்றனர். மேலும், இந்த ஆய்வு முடிவில் கடல் வெப்ப அலைகளால் ஆழ்கடல் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com