
நாம் நினைப்பது போல் தாய்மை என்றால் அன்பு, பாசம், அரவணைப்பு என்பதெல்லாம் மனித இனம் உள்ளிட்ட எல்லா அம்மாக்களுக்கும் பொருந்தாது. இதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன. பெற்ற குஞ்சுகள் மற்றும் குட்டிகள் மீது பாசம் செலுத்த விரும்பாத 10 வகை பறவை, விலங்குகள் எவை என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. குயில் (Cuckoo): குயிலானது தனது முட்டைகளை வேறொரு பறவையின் கூட்டில் சென்று இட்டுவிட்டு பறந்து விடும். பிறகு திரும்பியே பார்க்காது. முட்டையிலிருந்து குஞ்சு வந்த பின், அக்கூட்டிற்கு உரிமையாளரான பறவை தனது குஞ்சுகளோடு குயில் குஞ்சையும் சேர்த்து, அது தன்னுடையதல்ல என்று அறியாமலே, உணவூட்டி வளர்த்து ஆளாக்கிவிடும்.
2. கடல் ஆமை (Sea Turtle): பெண் கடல் ஆமை கடலோர மணற்பரப்பிற்கு வந்து குழி தோண்டி முட்டைகளை இட்டுவிட்டு கடலுக்குள் சென்றுவிடும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குஞ்சுகள் உடனடியாக குழியிலிருந்து வெளியேறி, எந்தவிதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டு, கடல் நீருக்குள் சென்று கலந்துவிடும். நீந்தவும், இரை பிடிக்கவும் தானே கற்றுக்கொள்ளும்.
3. தவளை, மீன் (Frog, Fish): தவளை, மீன் நீர்நிலைகளின் ஓரத்தில் வந்து முட்டைகளை இட்டுவிட்டு, அதன் மீது எந்தவித கவனமும் செலுத்தாமல் அங்கிருந்து சென்றுவிடும். முட்டைகள் நீரிலேயே மிதந்து கொண்டிருக்கும். அதிலிருந்து குஞ்சுகள் வெளி வந்ததும் அவை தங்களின் அனைத்துத் தேவைகளுக்கும் தாங்களே பொறுப்பேற்றுக் கொள்ளும்.
4. பாம்புகள்: நல்ல பாம்பு மற்றும் வைப்பர் வகை பாம்புகள் உள்ளிட்ட அனைத்துப் பாம்புகளுமே குட்டிகள் வெளி வந்த பின் அவற்றின் மீது அக்கறை செலுத்துவதே கிடையாது. குட்டிகள் தாமே சுதந்திரமாக செயல்படக் கற்றுக்கொள்ளும்.
5. சால்மன் மீன்: அநேகமாக, இவ்வகை மீன் தெளிந்த நீரில் முட்டைகளை இட்டுவிட்டு இறந்துவிடும். குஞ்சுகள் வெளிவந்து சக்தி பெற்றதும், தானே நீந்தி கடலுக்குள் சென்றுவிடும்.
6. பூச்சிகள்: பட்டாம்பூச்சி மற்றும் வண்டுகள் முட்டைகளை இட்டுவிட்டு திரும்பிப் பார்க்காமலே பறந்து விடும். முட்டைகளிலிருந்து வரும் லார்வாக்கள் பெற்றோர் கவனிப்பின்றி தாங்களாகவே வளர வேண்டியதுதான்.
7. குரோக்கோடைல் மானிட்டர் லிசார்ட் (Crocodile Monitor Lizard): ஊர்வன இனத்தைச் சேர்ந்த இவ்விலங்கு மணலில் குழி தோண்டி முட்டையிட்டுப் புதைத்து விட்டுச் சென்றுவிடும். குஞ்சுகள் வெளி வந்த உடனே குழியை விட்டு வெளியேறி, தானே இரை தேடவும், எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும் கற்றுக்கொண்டு வாழ்க்கையை சுயமாக எதிர்கொள்ள வேண்டியதுதான்.
8. மான்டிஸ் ஷ்ரிம்ப் (Mantis Shrimp): சில வகை மான்டிஸ் ஷ்ரிம்ப்ஸ், முட்டையிட்டவுடன் கண்டுகொள்ளாமல் ஓடிவிடும். முட்டைகளிலிருந்து லார்வாக்கள் வெளிவந்து, கடலின் மேற்பரப்பில் மிதந்தவாறு அலையின் போக்கில் சென்றுகொண்டிருக்கும். தங்கள் உள்ளுணர்வு கூறும் அறிவுரையைப் பின்பற்றி வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்.
9. ஆக்டோபஸ்: சில வகை ஆக்டோபஸ் தங்கள் முட்டைகளை கவனம் செலுத்திப் பாதுகாப்பதுண்டு. ஆழ்கடலில் வசிக்கும் ஆக்டோபஸ் முட்டைகளை இட்டுவிட்டு ஓடி விடும். வெளிவரும் லார்வாக்கள் பெற்றோர் கவனிப்பின்றி வாழும் வாழ்க்கைக்கு தங்களைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
10. கோமோடோ டிராகன்ஸ் (Komodo Dragons): இவையும் குழிகளில் முட்டையிட்டுவிட்டு விலகிச் சென்றுவிடும் விலங்குகளேயாகும். குட்டிகள் வெளிவந்தவுடன், மற்ற வளர்ந்த டிராகன்களுக்கு இரையாவதிலிருந்து தப்பிக்க மரங்கள் மீது ஏறி அமர்ந்து கொள்ளும்.