‘நீரின்றி அமையாது உலகு’ என்பதற்கு ஆதாரமாக விளங்குவது மழை. வானில் இருந்து விழும் நீரை ‘மழை’ என்கிறோம். கடல் மற்றும் பிற நீர்நிலைகளில் இருக்கும் நீரானது சூரிய வெப்பத்தின் காரணமாக நீராவியாகி மேலெழுந்து சென்று மழை மேகங்களாகின்றன. அதன் மீது குளிர்ந்த காற்று படும்போது சுருங்கி, நீராக மாறி பூமியை நோக்கி நீர்த் துளிகளாக விழுகின்றன. மழை பெய்யும்போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாக மாறிவிடுகிறது.
பூமியை நோக்கி விழும் நீர்த்துளிகள் வட்ட வடிவில் வெவ்வேறு அளவுகளில் இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் மட்டுமே பார்க்க முடியும். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, வளி மண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத் துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத் துளிகளுக்கும் காற்றுத் துளிகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றொன்று இடையூறு செய்ய முற்படுகின்றன. அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கில் மழைத் துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள வடிவை பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை உதவுவதாகவும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அது மட்டுமின்றி, மழைத் துளிகள் பூமியை நோக்கி விழும்போது ஒன்றை ஒன்று முட்டி மோதிச் சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் ஒரே சீராக இன்றி சிறிதும் பெரிதுமாக வெவ்வேறு அளவுகளில் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
மழை துளி, தூரல் மழை, அடை மழை, சாரல், ஆலங்கட்டி மழை, கடலில் பெய்யும் ஆழி மழை என்று மழையில் பல வகைகள் உள்ளன. இந்தியாவில் இரண்டு பருவ மழைகள் உண்டு. ஒன்று குளிர் கால மழை. வட கிழக்கு பருவ காற்றால் உண்டாகும் இது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை பொழிகிறது. தமிழ்நாட்டில் பெய்யும் மழை இதுதான். மற்றொன்று தென் மேற்கு பருவக் காற்றால் உண்டாகும் கோடைக்கால மழை. இது ஜூன் முதல் செப்டம்பர் வரை பொழிகிறது.
மழையை மழை யானி மூலம் அளவிடப்படுகிறது. அது மில்லி மீட்டர் அளவில் அளவிடப்படுகிறது. ஒரு மில்லி மீட்டர் மழை அளவு என்பது ஒரு லிட்டர் / ஒரு சதுர மீட்டருக்கு சமம். மழைப்பொழிவு அந்ந ஊரின் பரப்பளவு அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. சென்னையின் பரப்பளவு 174 சதுர கி.மீ. (17x10,00,000 சதுர மீட்டர்) எனவே, சென்னையில் ஒரு மில்லி மீட்டர் மழை அளவு என்பது 17,40,00,000 லிட்டர் மழை பெய்துள்ளது என்று அர்த்தம். பொதுவாக 24 மணி நேரத்திற்கு ஒரு முறை மழை அளவிடப்படுகிறது.
மண்ணில் actinomycetes என்கிற ஒரு வகையான பாக்டீரியா இருக்கிறது. அது மழை பெய்யும் நேரத்தில், தன்னிடம் இருக்கும் எண்ணெய் தன்மையை வெளியேற்றுமாம். அப்போது அந்த எண்ணெய் மேல் மழை துளி படும்போது நம் எல்லாருக்குமே பிடித்த மண் வாசனை உருவாவதாக அறிவியல் சொல்கிறது.
பொதுவாக, பூமியில் அனைத்து இடங்களிலும் மழை பெய்யும். உலகில் அதிக மழை பெய்யும் இடங்களில் ஒன்று ஹவாயில் உள்ள வயாலேலே மலை. வருடத்தில் சுமார் 350 நாட்கள் அங்கு மழை பெய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 460 அங்குலம் (1,170 சென்டி மீட்டர்) மழை அங்கு விழுகிறது. பூமியின் வறண்ட இடங்களில் ஒன்று சிலியில் உள்ள அடகாமா பாலைவனம். இது ஒரு வருடத்திற்கு 0.04 அங்குலத்திற்கும் (0.1 சென்டி மீட்டர்) குறைவான மழையைப் பெறுகிறது. இந்த பாலைவனத்தின் சில பகுதிகளில் பல நூறு ஆண்டுகளாக மழை பெய்யவில்லை.
நம் எல்லோரையும் வாழ வைக்கும் மழைக்கு நன்றி சொல்லும் விதமாக, ‘நாம் ஏன் மழை தினம் கொண்டாடக் கூடாது?’ என்று யோசித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29ம் தேதியை மழை தினமாகக் கொண்டாடத் தொடங்கியவர்கள் அமெரிக்கர்கள்தான். அவர்கள் ஆரம்பித்து வைத்ததைத்தான் இப்போது உலக மக்கள் அனைவரும் உலக மழை தினம் என்று கொண்டாடுகிறார்கள். இனி, இந்த நாள் உருவான சுவாரஸ்யமான கதையை பார்ப்போம்.
1800களில் பென்சில்வேனியாவின் வெய்ன்ஸ்பர்க்கில் உள்ள மருந்துக்கடைக்காரர் வில்லியம் அலிசன், புதிரான ஒன்றை கவனித்தார். ஒவ்வொரு ஜூலை 29ம் தேதியும் அங்கே தவறாமல் மழை பெய்தது. இதனால் ஈர்க்கப்பட்ட அலிசன், இந்தத் தேதியில் மழை வீழ்ச்சியைப் பதிவு செய்யத் தொடங்கினார்.
ஒரு மனிதன் ஆர்வமாக ஆரம்பித்தது விரைவில் உள்ளூர் புராணமாக மாறியது. அலிசனின் சகோதரர் ஆல்பர்ட், 1920களில் ஜூலை 29 மழையைப் பதிவு செய்யும் பாரம்பரியத்தைத் தொடர்ந்தார். விசித்திரமான அந்த நிகழ்வு, ‘தி பைரன் டெய்லி’ செய்தித்தாளின் கவனத்தை ஈர்த்தது. அது செய்தியாக வெளியிடப்பட்டது.1930களில், ஜான் ஓ'ஹாரா மற்ற செய்தித்தாள்களுக்கு மழை நாள் பற்றிய கதைகளை பற்றி எழுதினார். அதிகமான மக்கள் மழை தினத்தைப் பற்றி அறிந்தவுடன், கொண்டாட்டங்களும் பரவலாகின.
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதி கிராமத்தை சேர்ந்த விவசாயிகள்தான் இந்த மழை தினத்தை உருவாக்கிருக்கிறார்கள். அதாவது, ஜூலை மாதம் வந்தால், இந்த கிராமமே மழையால் செழிப்பாக மாறி விடுமாம். அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 29ம் தேதி மழை தினமாகக் கொண்டாடத் தொடங்கினார்கள்.