துபாயின் செயற்கைத் தீவுகளின் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கின்றன. இதனால் கடலின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு, கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தை சந்தித்து இருப்பதாக சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்திருக்கிறது.
21ம் நூற்றாண்டின் தொடக்கத்திற்கு பிறகு அதி தீவிர வளர்ச்சியை கண்ட நாடுகளில் முதலிடத்தில் இருப்பது துபாய். துபாயினுடைய அதிதீவிர வளர்ச்சி உலகின் பல்வேறு நாடுகளை, உலக நாடுகளை ஆதிக்கம் செலுத்தும் அமெரிக்காவையும் நடுங்கச் செய்து இருக்கிறது. அந்த அளவிற்கு பொருளாதார ரீதியான முன்னேற்றத்தை துபாய் கண்டு வருகிறது. அதேநேரம் துபாயினுடைய உள்நாட்டு மக்கள் தொகை குறைவு என்பதால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அதிகம் துபாயில் படையெடுத்து குடியேறி வருகின்றனர். மேலும், உலக கோடீஸ்வரர்களில் மிகப்பெரும்பான்மையானோர் துபாயில் தங்களுக்கென்று ஆடம்பர வீடுகளை அமைத்து இருக்கின்றனர்.
இப்படி துபாயை நோக்கி படையெடுக்கும் உலக மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், துபாயில் புதிய நிலப்பரப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டு, 2000ம் ஆண்டு துபாயின் கடற்கரைப் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குட்டி தீவுகளை அமைக்க துபாய் அரசு முடிவு செய்தது. இதற்கான பணியை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியது. பாம்ஸ் தீவுகளுக்கு அருகே 300 குட்டி தீவுகளை கொண்ட, ‘தி வேர்ல்ட்’ என்று பெயரிடப்பட்ட தீவுக்கூட்டம் துபாய் அரசால் உருவாக்கப்பட்டு வருகிறது.
மண்ணையும், பாறையையும் டன் டன்னாக ஒரே இடத்தில் குவித்து, இந்த செயற்கை தீவு கூட்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு தீவினுடைய விலை பல லட்சம் கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பலரும் தி வேர்ல்ட் தீவுக் கூட்டத்தில் ஒரு தீவை வாங்க முயற்சிக்கின்றனர். அதேசமயம் பாம்ஸ் தீவை வாங்க காட்டும் ஆர்வத்தை, தி வேர்ல்ட் தீவை வாங்கக் காட்டுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி துபாய் அரசின் மிகப்பெரிய வர்த்தக நடவடிக்கையான தீவுக் கூட்டத்தின் காரணமாக கடல் தன்மையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதாக சர்வதேச சுற்றுச்சூழலுக்கான அமைப்பு தெரிவித்து இருக்கிறது. மேலும், துபாய் பகுதியின் கடல் நீர் ஓட்டம் மாற்றத்தைக் கண்டிருப்பதாகவும், இதன் காரணமாக காற்று அடிக்கும் திசையில் மாற்றம், மழை தன்மையில் மாற்றம் போன்றவை நிகழ்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இது மட்டுமல்லாது, கடலின் வெப்பத்தின் அளவு அதிகரித்து இருப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. இதை உருவாக்க மேற்கொண்ட முயற்சியின் காரணமாக உருவான கழிவுகளால் ஏராளமான கடல் வாழ் உயிரினங்கள் அழிந்து இருக்கின்றன. ஆழ்கடல் உயிரினங்கள் வேறு பகுதியை நோக்கி சென்றிருக்கின்றன. மேலும், பவளப்பாறைகள் முற்றிலுமாக அக்கடல் பகுதியில் இருந்து அழிக்கப்பட்டிருக்கின்றன. அப்படி பல்வேறு வகையான அழிவுகளை இந்தக் கடல் சந்தித்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கின்றது.