செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளைக் கொக்கு வருகை அதிகரித்துக் காணப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் விவசாயம் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்தித்தத் துறையாக மாறி இருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட அளவுக்கு அதிகமான வெயில், மழையின்மை இதற்கு முக்கியக் காரணமாகும். இதனால் விளைநிலங்களுக்கு போதிய அளவு நீர் கிடைக்காமல் பெருமளவில் பாதிக்கப்பட்டன. மேலும், தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீர் வரவுகளும் தமிழகத்திற்கு வந்து சேரவில்லை. இதனால் போர்வெல்கள் மூலமாகவும், கிணறுப் பாசனங்கள் மூலமாகவும் பெருமளவில் விவசாயத்தை மேற்கொள்ளும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர்.
இந்த நிலையில், செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர் வகைகளைப் பயிரிட விவசாயிகள் காலதாமதமாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வண்ணம் செங்கல்பட்டு மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளைக் கொக்குகள் அதிக அளவில் வந்துள்ளன. இதனால் விவசாயிகள் ஆர்வத்துடன் பயிரிடத் தொடங்கி இருக்கின்றனர்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகையில், “புழுக்கள் மட்டுமல்ல, பறவைகளும் விவசாயிகளுக்கு தோழன்தான். வெள்ளை கொக்கு நமது பகுதிக்கு வருகிறதென்றால் அது வசந்த காலத்தின் அறிகுறிதான். தமிழ்நாட்டில் தற்போது பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை உணர்த்தும் வகையில் வெள்ளை கொக்குகள் வந்திருக்கின்றன. மேலும், வெள்ளைக் கொக்குகள் இடும் எச்சங்கள் விளைநிலங்களில் அதிகப்படியான விளைச்சலுக்கு சத்தாக மாறும். மேலும், வெள்ளைக் கொக்குகள் விளைச்சலை பாதிக்கும் பூச்சிகளையும், புழுக்களையும் தின்று விவசாயத்திற்கு பெரிதும் உதவுகின்றன.
தற்போது விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தைக் கொண்டு காலதாமதமாகப் பயிரிட தொடங்கி இருக்கக்கூடிய நேரத்தில் வெள்ளை கொக்குகளின் வருகை மன நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது” என்று தெரிவித்தார்.