
இந்தியாவில், வளர்ந்து வரும் நகரமயமாக்கல், காடுகளின் அழிவு, வானிலை மாற்றம், சட்ட விரோதமான வேட்டையாடுதல் போன்ற காரணங்களால் பல வகையான வன விலங்குகள் முற்றிலும் அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டு, மோசமான அச்சுறுத்தலுடன் அவலமான நிலையில் வாழ்ந்து வருகின்றன. அந்த மாதிரியான நிலையிலிருக்கும் ஐந்து வகை வன விலங்குகள் எவை என்பதை இப்போது பார்க்கலாம்.
1.பெங்கால் டைகர்: எழுபது சதவிகித பெங்கால் டைகர்கள் இந்தியாவில் வாழ்ந்து வருகின்றன. எனினும், அவற்றின் தோல் மற்றும் உடலின் பிற பாகங்களுக்காக சட்ட விரோத வேட்டையாடுதல், பரவலாக உண்டாகும் வாழ்வாதார இழப்பு போன்ற காரணங்களால், பெங்கால் டைகர்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து வருகிறது.
2.ஆசியாட்டிக் லயன்: மிக கம்பீரமான தோற்றம் கொண்ட இந்த வகை சிங்கங்கள் தற்போது இந்தியாவில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்செர்வேஷன் ஆஃப் நேச்சர் (IUCN), 2010 ஆம் ஆண்டில் ஆசியாட்டிக் லயன் இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக அறிவித்துள்ளது. தற்போது அவற்றின் எண்ணிக்கை சுமார் 500-650 ஆக உள்ளது.
3.பனி சிறுத்தை (Snow Leopard): இவ் விலங்குகள்
இந்தியாவில் லடாக், உத்தர்காண்ட், ஹிமாச்சல் பிரதேஷ் மற்றும் இமய மலையின் கிழக்கு, மேற்கு பகுதிகளில் வாழ்ந்து வருகின்றன. அவற்றின் எண்ணிக்கை தற்போது சுமார் 500 என்ற அளவுக்கு குறைந்திருப்பது வருந்தத்தக்க விஷயம். இதற்கான முழுக்காரணம் மனிதர்கள் என்று கூறுவதை அறியும்போது வருத்தம் அதிகரிக்கிறது.
4.ஒற்றைக் கொம்பு ரைனோசெரஸ்: இமய மலையின் அடிவாரத்தில் வாழ்ந்து வரும் இந்த அபூர்வமான விலங்கின் எண்ணிக்கை மிக வேகமாக குறைந்து வருகிறது. இவற்றின் கொம்புகளுக்காக இவை அதிகளவில் வேட்டையாடப்படுவதே இதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
5.பிளாக்பக்: இவ்வகை மான்கள் பெருமளவில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாலும், இவற்றின் தோலுக்காக பலர் இவற்றை சட்ட விரோதமாக வேட்டையாடிவருவதாலும், இவை அழிவின் விளிம்பை நோக்கி விரைவாகப் பயணித்துக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
இந்த ஐந்து வகை அரிய விலங்குகளை காப்பாற்ற யார் முன் வருவார்கள் என்பது விடை தெரியாத வினா!