வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசின் முக்கியக் கொள்கை: முதல்வர் ஸ்டாலின்!

வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அரசின் முக்கியக் கொள்கை: முதல்வர் ஸ்டாலின்!

மிழக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்குத் தலைமைதாங்கி பேசினார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த மாநாட்டில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘வனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இந்த அரசின் இரு முக்கியக் கொள்கையாக உள்ளது. 'மீண்டும் மஞ்சப்பை' என்பது எனது மனதுக்கு நெருக்கமான திட்டம். இது நமது தமிழகத்தின் பண்பாட்டில் வேரூன்றியிருப்பதால் இதனை முழுமையான பயன்தரும் விதத்தில் மக்கள் திட்டமாக மாற்ற வேண்டியது உங்களது கடமை. பிளாஸ்டிக் மாசுபாட்டைத் தடுக்கப் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் மனநிலையை இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் மீது மாற்ற வேண்டும். இதனால் நமது மாநிலம் பசுமையான, இயற்கை சார்ந்த எதிர்காலத்தை நோக்கி வளர முடியும். மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டினைத் தவிர்ப்பதற்கான பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

கடல் அரிப்பைத் தடுக்கவும், கரையோரப் பகுதிகளின் பாதுகாப்பை நிரந்தரமாக உறுதிசெய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கவும் அனைத்துக் கடலோர மாவட்ட ஆட்சியர் மற்றும் கடலோர மாவட்ட வன அலுவலர்களையும், நடவடிக்கை எடுக்குமாறு இந்தத் தருணத்தில் நான் கேட்டுக் கொள்கிறேன். மேலும், வனவிலங்குகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வன அலுவலர்கள் எப்போதும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென அறிவுறுத்துகிறேன். மனித - வனவிலங்கு முரண்பாடுகள் உடனடியாகக் கையாளப்படுவதையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகை காலதாமதமின்றி வழங்கப்படுவதையும் நீங்கள் உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். சதுப்பு நிலத் தோட்டங்கள், கடல் புற்கள் மற்றும் பவளப் பாறைகளை வளமையோடு மீட்டெடுப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது மாநிலம் 14 ராம்சார் ஈரநிலங்கள் கொண்டு இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகும். ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ மூலம் சங்க கால மரங்களான 18 மர வகைகளைச் சேர்ந்த 14 லட்சத்துக்கும் அதிகமான மரங்களைப் பொதுமக்களின் பங்கேற்புடன் நமது அரசு நட்டுள்ளது என்று அறிகிறேன். அவ்வாறு நடப்பட்ட மரக்கன்றுகள் நல்ல முறையில் வளர அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட வன அலுவலர்களும் சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று பேசினார்.

இந்த மாநாட்டில் அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ, அரசுத் துறைச் செயலாளர்கள், வனத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com