

தீங்கு விளைவிக்கும் பாசிப்பூக்கள் (Harmful Algal Blooms - HABs) என்பவை நன்னீர் மற்றும் கடல் நீர்நிலைகளில் சயனோபாக்டீரியா போன்ற பாசிகள் அதிகப்படியான ஊட்டச்சத்துக்களால் மிக வேகமாக வளர்ந்து, நச்சுக்களை வெளியிட்டு, ஆக்சிஜனைக் குறைத்து, நீர்வாழ் உயிரினங்களைக் கொன்று மனித ஆரோக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
பாசிப் பூக்கள் என்றால் என்ன?
பாசிப் பூக்கள் (Algae) என்பது நீர்நிலைகளில் (ஏரி, கடல்) பாசிகள் அளவுக்கு அதிகமாகவும், விரைவாகவும் வளர்ந்து நீரின் மேற்பரப்பில் தடிமனான படலமாக மாறும் நிகழ்வாகும். இவை நன்னீர் மற்றும் கடல் நீர் இரண்டிலும் உருவாகலாம். ஊட்டச்சத்து மாசுபாடு (நைட்ரஜன்/பாஸ்பரஸ்) மற்றும் வெப்பமான காலநிலை இவற்றின் வளர்ச்சிக்கு காரணங்களாகும். மேலும் சில பாசிகள் நச்சுத்தன்மையை உண்டாக்கி சுற்றுச்சூழல் மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன.
பாசிப்பூக்கள் உருவாவதற்கான காரணங்கள்:
விவசாய உரங்கள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் கழிவுநீர் போன்றவற்றிலிருந்து பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் அதிகமாக நீர்நிலைகளில் கலப்பதால் பாசிப் பூக்கள் ஏற்படுகின்றன.
அடர்த்தியான பாசிப் பெருக்கத்தால் உருவாகும் பச்சை நிறப் படலம் பார்ப்பதற்கு அழகற்றதாகவும் துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கிறது. அத்துடன் இவை நீரை நச்சுத்தன்மை உடையதாக மாற்றி நோயை உண்டாக்கி விடுகிறது.
இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள்:
பாசிப் பெருக்கமானது சுற்றுச்சூழல் மற்றும் மனித ஆரோக்கியத்தை பாதிப்பதுடன், மீன்பிடித்தல் மற்றும் சுற்றுலாவை சார்ந்திருக்கும் பொருளாதாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
நச்சுப் பாசிகள் ஆக்சிஜனை உறிஞ்சுவதால் மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களைக் கொன்று, நீரின் தரத்தை மோசமாக்குகின்றன.
பாசிகள் சிதையும்போது நீரில் உள்ள ஆக்சிஜன் அளவு குறைந்து மீன்கள் இறக்கின்றன.
பாசிகளின் வகையைப் பொறுத்து நீரின் நிறம் பச்சை, பழுப்பு அல்லது அரிதாக நீல நிறத்தில் (ஒளிரும் தன்மை) மாறலாம்.
சயனோபாக்டீரியா போன்ற சில வகை பாசிகள் நச்சுக்களை உற்பத்தி செய்கின்றன. இது மனிதர் களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும்.
நச்சுத்தன்மையுள்ள பாசிகள் உள்ள நீரில் நீந்துவது அல்லது அந்த நீரை உட்கொள்வது, மனிதர்கள் மற்றும் செல்லப் பிராணிகளுக்கு தோல் எரிச்சல், கண், மூக்கு, வாய் பாதிப்பு மற்றும் கடுமையான உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும்.
பாசிப் பெருக்கமானது நீரை, படகு சவாரி போன்ற பொழுதுபோக்கு பயன்பாட்டிற்குக் கூட தகுதியற்றதாக ஆக்கி விடும். இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும் ஒரு முக்கியமான நீர் மாசுபாட்டு நிகழ்வாகும்.
அடர்த்தியான பாசிப் படலம் சூரிய ஒளி தண்ணீருக்குள் செல்வதை தடுப்பதால், நீருக்கடியில் உள்ள தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் அழிகின்றன.
இது நீர் நிலைகளின் இயற்கையான சுய சுத்திகரிப்புத்திறனை சிதைத்து பல்லுயிர் தன்மையை பாதிக்கிறது.
தடுப்பு நடவடிக்கைகள்:
நீர்ப்பாதைகளில் பாசிப் பூக்கள் தென்பட்டால் அந்த நீரில் குளிப்பதையோ, சமைப்பதையோ, செல்லப்பிராணிகளை விடுவதையோ தவிர்க்கவேண்டும்.
பெரும்பாலான பாசிப் பூக்கள் ஆபத்து இல்லாதவை. ஆனால் சில பாசிப்பூக்கள் நச்சுத்தன்மை கொண்டவை. எனவே நீர்நிலைகளில் உரங்கள் மற்றும் கழிவுநீர் கலப்பதை தவிர்ப்பது பாசிப்பூக்களை கட்டுப்படுத்த உதவும்.