

மர்மோட் என்பவை அணில் வகை குடும்பத்தை சார்ந்த தரைவாழ் உயிரினங்களாகும். இவை பெரும்பாலும் பனி படர்ந்த மலைப் பிரதேசங்களான ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் அதிகமாக பரவி காணப் படுகின்றன. இந்தியாவில் இமயமலை பகுதியில் தென்படுகின்றன. இவற்றின் வாழ்க்கை முறை மற்றும் வாழ்வியல் தகவமைப்புகளை இக்கட்டுரையில் விரிவாக காண்போம்!
வாழ்விடங்கள்: இவைகள் தரைக்கு அடியில் ஆழமான பொந்துகளை தோண்டி அதற்குள் பதுங்கி பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் குட்டிகளையும் பாதுகாத்துக்கொள்ளும். குளிர்கால உறக்கத்திற்கும், குட்டிகளை பாதுகாப்பதற்கும் இந்த பொந்துகளை தனது வாழ்விடங்களாக அமைத்துக்கொள்கின்றன.
உணவு முறைகள்:
மர்மோட்டுகள் தாவர உண்ணிகளாகும் அதேபோல் இவை கொறிணி இனத்தைச் சார்ந்தவைகள். மலைப் பிரதேசங்களில் வளரக்கூடிய சிறு செடிகள் அதனுடைய பூக்கள், விதைகள், வேர்கள் மற்றும் புற்களை உணவாக எடுத்துக்கொள்கின்றன. அதேபோல் கிழங்கு வகைகளையும் விரும்பி உண்ணும். இவைகள் பெரும்பாலான நேரங்களில் நேரடியாக நீரை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு மாற்றாக உண்ணும் உணவின் மூலமாகவே நீரினை எடுத்துக்கொள்கின்றன.
உடல் அமைப்பு:
இவைகள் பார்ப்பதற்கு குட்டையான, தடிமனான மற்றும் உருண்டையான உடலமைப்பு மற்றும் கூர்மையான நகங்களை கொண்டிருக்கும். கடுங்குளிரை தாங்குவதற்கு ஏற்றார்போல் அடர்த்தியான உரோமங்கள் இருக்கும். நன்கு வளர்ந்த மர்மோட்டுகள் மூன்று முதல் ஐந்து கிலோ வரை காணப்படும். குளிர்காலத்திற்கு முன் எடை இன்னும் சுமார் ஏழு கிலோ வரை அதிகமாக காணப்படும். இவற்றின் முன் பற்கள் (Incisors) மிகவும் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கும். சிறிய காதுகளையும், வாலையும் கொண்டிருக்கும். இதன் நிறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்திலும்,ஐரோப்பா கண்டத்தில் உள்ளவைகள் அடர்ந்த பழுப்பு நிறத்திலும் உள்ளன. உடலின் மேற்பகுதி அடர்த்தியாகவும் அடிப்பகுதி வெளிர் நிறத்திலும் காணப்படும். இந்த நிறங்களே எதிரிகளிடமிருந்து மறைவதற்கு பாதுகாப்பாக இருக்கின்றன. குட்டையான கால்களை கொண்டிருக்கும்.
தற்காப்பு தகவமைப்புகள்:
வேட்டை விலங்குகளிடமிருந்து தப்பிக்க பெரும்பாலும் வேகமாக ஓடி சென்று பொந்துகளையே பயன்படுத்தும். அதுமட்டுமில்லாமல் ஆபத்து வரப்போகுது என்று தெரிந்தால் ஒருவித கூச்சல் ஒலியை ஏற்படுத்தும். ஒரு கூட்டத்தில் உள்ள மர்மோட்டுகள் உணவு தேடுவதில் இருந்தாலும், ஒன்று அல்லது இரண்டு மர்மோட்டுகள் உயரமான இடங்களுக்கு சென்று, ஆபத்து வரப் போகிறது என்பதை உணர்த்தும் கண்காணிப்பாளராகவும் இருக்கும். உரோமத்தின் நிறங்கள் பாறை மற்றும் காய்ந்த புறக்களுக்கிடையில் மறைந்து கொள்ள உதவுகின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க வாய்ப்பு இல்லாத போது தனது நகங்கள் மற்றும் பற்களை பயன்படுத்தி எதிர்தாக்குதல் நடத்தும்.
குளிர்கால உறக்கம்:
குளிர் காலங்களில் ஏற்படும் கடுமையான உணவு தட்டுப்பாட்டை சமாளிக்கும் விதமாக இவைகள் குளிர்கால உறக்கத்தை மேற்கொள்கின்றன. பொந்துகளுக்கு உள்ளே 6 முதல் 8 மாதங்கள் வரை உறங்குகின்றன. நீண்ட பொழுது உறங்குவதில்லை, மாறாக ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை விழித்துக் கொண்டு, உடம்பை சூடாக்கிக்கொண்டு மீண்டும் உறக்க நிலைக்கு சொல்லும். தனியாக இல்லாமல் குழுவாக சேர்ந்து ஒன்றோடு ஒன்று சேர்ந்ததுபோல் தூங்கும்.
கோடை காலத்தில் சாதாரணமாக இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 110 முதல் 130 வரை துடிக்கும். அதே குளிர்கால உறக்கத்தில் இருக்கும்போது நிமிடத்திற்கு 3 அல்லது 7 தடவைதான் துடிக்கும்.அதேபோல் சாதாரணமாக நிமிடத்திற்கு 20 முதல் 30 முறை சுவாசிப்பவை இந்த காலத்தில் மட்டும் 2 அல்லது 3 முறை மட்டுமே சுவாசிக்கும். சில நிமிடங்கள் சுவாசிக்காமல் அப்படியே நிறுத்தியும் வைக்கும். இதனால் அதிக ஆற்றல் செலவழிக்கப்படுவது குறைக்கப்படுகிறது.கோடை காலத்தில் நன்றாக தாவரங்களை உண்பதால், உடலில் வெள்ளை மற்றும் பழுப்பு கொழுப்புகள் சேர்கின்றன.
இந்தக் கொழுப்புகள்தான் குளிர்கால உறக்கத்தில் இதற்கு உணவு, தண்ணீருக்கு பதிலாக உதவியாக இருக்கிறது.உறக்கத்திற்கு செல்வதற்கு முன் பொந்துகளின் நுழைவாயிலை மண்,கற்கள் மற்றும் தனது எச்சங்களைக் கொண்டு மூடிவிடும். இதனால் வேட்டை விலங்குகளிடமிருந்தும், குளிர்காற்றிலிருந்தும் தப்பித்துக் கொள்கிறது.
குளிர்காலம் முடிந்து வசந்த காலம் வரும் பொழுது, பொந்தை விட்டு வெளியே வருகின்றன. அப்போது தனது உடல் எடையிலிருந்து 50% குறைந்து ஒல்லியாக வெளியே வரும். கோடைக் காலம் முழுவதும் சுற்றுப்புறத்தில் அலைந்து திரிந்து, உணவுகளை உட்கொண்டு, குளிர்காலம் வரும்பொழுது மீண்டும் குளிர்கால உறக்கத்திற்கு செல்கின்றன.
அதிசயமான வாழ்வியல் தகவமைப்புகளை கொண்ட விலங்குகளில் இந்த மர்மோட்டும் ஒன்றாகும்.!